இளம்பிள்ளைகள் தவறு செய்வது அவர்கள் வளர்ச்சியின் ஒரு படிநிலை. அதிலிருந்து தான் அவர்களுடைய கற்றல் பயணம் தொடங்குகிறது என்று கூறினார் ஜூரோங் வெஸ்ட் பகுதியிலுள்ள கல்வி அமைச்சின் பாலர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ரேஷ்மா ராஜீவ், 26.
பாலர்பள்ளி ஆசிரியராக இரண்டாவது கல்வியாண்டில் பணிபுரிந்துவரும் இவர், வர்த்தக நிர்வாகம், மேலாண்மைத் துறையில் பட்டயப் படிப்பை முடித்தவர். படிப்பை முடித்தவுடன் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் நிர்வாக அதிகாரியாக பணியினைத் தொடங்கினார்.
அப்போதுதான் இளம் மாணவர்களுடன் பழகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அன்றாடம் பிள்ளைகளுடன் பேசுவது, அவர்களுக்கு தேவையான நிர்வாக வேலைகளைச் செய்வது என இருந்தது இவருடைய பணி.
அவ்வப்போது கல்வி நிலையத்தின் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும்போது தற்காலிக ஆசிரியராக இவர் பணியில் அமர்த்தப்பட்டார்.
அச்சூழலில்தான் ஆசிரியர் பணி மீது ரேஷ்மாவிற்கு ஈர்ப்பு ஏற்பட்டது. எவ்விதக் கள்ளங்கபடமும் இல்லாத பிள்ளைகள் இருக்கும் நேர்மையான சூழல் அவருக்குள் ஆசிரியராக உருவெடுக்க வித்திட்டது. பிறகு ஆரம்பக்கல்வித் துறையில் பட்டயப்படிப்பை முடித்து தன் விருப்பத் துறையிலேயே பணியைத் தொடங்கினார்.
தற்போது பாலர்பள்ளி இரண்டாம் ஆண்டிற்கு பாடம் எடுக்கும் இவர் மிகவும் பொறுமையான, தன்மையான ஆசிரியர் என்று பள்ளியில் பெயர் எடுத்துள்ளார். ஆங்கில ஆசிரியராக இருக்கும் இவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மாணவர்களுக்குத் தமிழும் கற்பிக்கிறார்.
“பிள்ளைகளுடைய உலகத்திற்குள் நாம் நுழைந்தால் மட்டுமே அவர்களைப் புரிந்துகொள்ள முடியும். அவர்களுடன் நண்பர்கள்போல பேசுவது அவர்கள் மனத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது,” என்று கூறினார் ரேஷ்மா.
இவருடைய வகுப்பில் சென்ற ஆண்டு புதிதாக வந்து சேர்ந்த இரண்டு மாணவர்கள் பள்ளிக்கு வருவதில் நாட்டமே இல்லாமல் இருந்துள்ளனர். தினமும் அழுதுகொண்டே பள்ளிக்கு வரும் இவர்கள் இவரின் வகுப்பிற்கு வரத் தொடங்கிய சில மாதங்களிலேயே பள்ளிக்கு வருவதை விரும்ப தொடங்கினர்.
கதை சொல்லுதல், பாடல், ஆடல், காணொளிகள், புத்தகங்கள் என பல்வேறு நடவடிக்கைகளைக் கையாண்டு பள்ளியை அம்மாணவர்கள் விரும்பும் இடமாக மாற்றியுள்ளார் ரேஷ்மா.
அப்பிள்ளைகளின் பெற்றோர் தன்னிடம் வந்து அடிக்கடி நன்றி கூறுவதை குறிப்பிட்ட ரேஷ்மா இது போன்ற பிள்ளைகளின் மேம்பாடு மனத்திற்கு மிகுந்த திருப்தியை அளிக்கின்றது என்று தெரிவித்தார்.
மாணவர்கள் இடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் பள்ளியில் ‘லெட்ஸ் ரீட்’ எனும் பயிற்சியைத் தொடங்கியுள்ளார் இவர்.
ஒவ்வொரு மாற்று வாரமும் தாய்மொழிப் புத்தகங்களும், ஆங்கிலப் புத்தகங்களும் மாறி மாறி வாசிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 நிமிடங்களுக்காவது மாணவர்கள் புத்தகங்கள் படிக்க தொடங்கியுள்ளனர் என்று மகிழ்ச்சியுடன் கூறினார் ரேஷ்மா.
இவர் தற்போது புதிதாக பள்ளியில் சேரும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகிறார். எதிர்காலத் தலைமுறையின் ஆரம்பகால வடிவமைத்தலில் பணியாற்றுவதை அதீத பொறுப்புடன் கூடிய பெருமையாகவே தான் கருதுவதாகவும் இவர் குறிப்பிட்டார்.