நம் வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு பின்னிப் பிணைந்துவிட்ட ஓர் அம்சமாக உருவெடுத்து வருகிறது. இதைக் கல்வித் துறையில் இணைத்துக் கொண்டுசெல்ல பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் கப்லான் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப, பொறியியல் பள்ளிகளின் தலைவர் குமாரி முல்லை வைத்திலிங்கம்.
“தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் மனிதர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த பத்து ஆண்டுகளாக மனிதர்கள் பன்மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதால் அச்சமும் ஏற்படுகிறது. எனினும், கல்வித் துறையில் இந்த வளர்ச்சியை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் வகையில் மாணவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும்,” என்று கூறினார் 25 ஆண்டுகள் இத்துறையில் அனுபவம் பெற்ற இவர்.
தொற்றுநோய் காலகட்டத்தில் மாணவர்கள் இணையம் வழி கற்கும் சலுகை அவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையில் இருக்க கப்லான் பல்கலைக்கழகம் புத்தாக்க முறையில் தொழில்நுட்ப மென்பொருளை அறிமுகப்படுத்தியதைக் குறிப்பிட்டார் குமாரி முல்லை.
“மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்குத் திரும்பும் நிலை இப்போது இருந்தாலும், இந்த தொழில்நுட்பத்தால் அவர்களின் கற்கும் முறைகள் மேம்படும் என்று நம்புகிறோம். எல்லா வயது மாணவர்களின் தேவைகளையும் புரிந்துகொண்டு அதற்கேற்ற முயற்சிகளை எங்களின் துறை மேற்கொண்டு வருகிறது,” என்று சொன்னார் குமாரி முல்லை.
இவ்வாண்டுத் தொடக்கத்தில் ‘சேட் ஜிபிடி’ போன்ற செயற்கை நுண்ணறிவு அம்சம், கல்வித் துறையை அச்சுறுத்தியது என்று நினைவுகூர்ந்தார் குமாரி முல்லை.
இதைத் தவறான முறையில் பயன்படுத்தாமல் இருக்குமாறு பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, செயற்கை நுண்ணறிவுச் சாதனங்களைப் பயன்படுத்தினால் அதைக் கண்டறிய பல உத்திகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறினார்.
மாணவர்களுக்கிடையே சுய சிந்தனையை வளர்க்க வகுப்புகளில் கேட்கப்படும் கேள்விகள் இந்த செயற்கை நுண்ணறிவுச் சாதனங்களுக்குப் புரியாத முறையில் கேட்கப்படும்.
“மனிதர்களின் உணர்வையும் அவர்களுக்குத் தனித்துவமான குணங்களையும் மையப்படுத்தி கல்வித் திட்டத்தை அமைத்துள்ளோம். இதனால் மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட கருத்துகளைக் கற்பிக்கப்பட்ட பாடங்களுடன் சேர்த்து எழுத வேண்டும்,” என்றார் குமாரி முல்லை.
செயற்கை நுண்ணறிவுடன் சேர்ந்து வாழ்ந்தால் நம் வாழ்க்கை செழிப்படையும் என்பதைப் பலர் அறிந்திருந்தாலும் வருங்காலத் தலைமுறைக்கு அதன் நன்மைகளையும் தீமைகளையும் எடுத்துச் சொல்லும் பொறுப்பும் உண்டு என்று குறிப்பிட்டார் குமாரி முல்லை.
கல்வியும் தொழில்நுட்பமும் கலந்த துறையில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றிருந்தாலும் செயற்கை நுண்ணறிவின் துரித வளர்ச்சியைக் கண்டு தாம் வியந்துபோவதாகவும் அவர் சுட்டினார்.
எனினும், இந்த மாற்றங்கள் நமது கல்வித் திட்டத்தைப் புத்தம்புது வடிவில் மாற்றியமைக்க ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் குமாரி முல்லை.