உள்ளூர் ரங்கோலிக் கலைஞர் விஜயலட்சுமி மோகனின் இலக்கு, வெவ்வேறு வடிவங்களில் ரங்கோலியை ஊக்குவிப்பதே.
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் மலர்க் கம்பளக் கண்காட்சியை முடித்துக்கொண்டு சிங்கப்பூர் திரும்பியுள்ள இவர், தேக்கா பிளேஸ் கடைத்தொகுதியில் நடைபெறும் மற்றொரு ரங்கோலி நிகழ்ச்சிக்காக தயாராகி வருகிறார்.
செப்டம்பர் 30ஆம் தேதிவரை அக்கண்காட்சி நடைபெறுகிறது.
ஸ்பானிய கலைத் திட்டத்தின் ஓர் அங்கமாக ஆகஸ்ட் 30ஆம் தேதி பார்சிலோனாவில் மலர்க் கம்பளக் கண்காட்சி நடைபெற்றது.
வட்ட வடிவத்தில் 4 மீட்டர் விட்டம் கொண்ட ரங்கோலியை தயாரித்த திருவாட்டி விஜயலட்சுமி, 64, அதுகுறித்த பயிலரங்குகளையும் ஏற்று நடத்தினார்.
இப்போது தேக்கா பிளேசில் நடைபெறும் ரங்கோலி கண்காட்சி குறித்து இவர் உற்சாகத்துடன் உள்ளார்.
வீட்டு உபயோகப் பொருள்களான கரண்டி, முள்கரண்டி, பல்லீர்க்கு, வளையல், சிறிய கண்ணாடி போன்றவற்றைக்கொண்டு புத்தாக்க முறையில் இவர் ரங்கோலி இடுகிறார்.
கண்காட்சியின் ஓர் அங்கமாக மூத்தோருடன் சேர்ந்து ரங்கோலி பயிலரங்குகளையும் திருவாட்டி விஜயலட்சுமி நடத்தவுள்ளார்.
எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்துடன் கைகோக்கும் இவர், ராட்சத ரங்கோலிக் கோலமிட உள்ளார்.
பொதுமக்களும் இந்த முயற்சிக்குக் கைகொடுக்கலாம்.
அத்துடன், ரங்கோலிக் கலையின் நுணுக்கங்களை வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இல்லப் பணிப்பெண்களுக்கும் திருவாட்டி விஜயலட்சுமி சொல்லித்தர இருக்கிறார்.