சிங்கப்பூர் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் பக்கவாதத்துக்கு பின் 2016ஆம் ஆண்டு புனர்வாழ்வு பயிற்சி பெற்று வந்தபோது அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தோர் புது முயற்சிகளை கையாளத் தொடங்கினர்.
“உதாரணமாக, எனக்கு சிங்கப்பூரர்களிடமிருந்து குணமடைய வேண்டி பல மடல்கள் வந்தபோது அவற்றை படித்துப் பார்த்து நான் ஊக்கம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் எனது சிகிச்சையாளர்கள் அவற்றை சுவற்றில் ஒட்டி வைத்தனர்,” என்று புனர்வாழ்வுப் பயிற்சிகள் தாம் எவ்வாறு முழுமையாக குணமடைய உதவி புரிந்ததாக திரு ஹெங் சுட்டினார்.
செந்தோசா தீவில் உள்ள ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் மாநாட்டு மையத்தில் ஒருவார காலம் நடைபெறும் புனர்வாழ்வு தொழில்நுட்பம் தொடர்பான ‘ரீஹேப் வீக்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற மாநாட்டில் துணைப் பிரதமர் ஹெங் உரையாற்றினார்.
பொதுமக்கள் நீண்டகாலம் வாழும், நாட்பட்ட நோய்கள் பெருகி வரும் சூழலில் புனர்வாழ்வு சேவைக்கு அதிக தேவையுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதில் உலக அளவில் கிட்டத்தட்ட 2.4 பில்லியன் மக்கள், அதாவது மூன்றில் ஒருவர், புனர்வாழ்வு பயிற்சியால் பலன் பெறக்கூடிய நிலையில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரில் முதல் முதலாக நடைபெறும் இந்த மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை உள்ளூர், அனைத்துலக மருத்துவ நிபுணர்கள், பொறியாளர்கள், தொழில்முனைவர்கள் என கிட்டத்தட்ட 1,000 வருகையாளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.