சிங்கப்பூரர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்வின் மைல்கற்களை மேலும் மறக்க முடியாத ஒன்றாக மாற்றவும், கொண்டாடவும் விரும்புவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
அண்மையில் ‘ஸ்கைஸ்கேனர்’ எனும் பயண முன்பதிவு நிறுவனம் நடத்திய பயணப் போக்குகள் குறித்தான ஆய்வில் மூன்று சிங்கப்பூரர்களில் இருவர் தங்கள் பிறந்தநாள், திருமண நாள் போன்றவற்றைக் கொண்டாட வெளி நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதாகத் தெரிய வந்துள்ளது.
பெரும்பாலான பயணங்களைப் பயணச் செலவுகளும், நாணய மதிப்புகளும் தீர்மானிப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
84 விழுக்காடு பேர் தாங்கள் பயணம் செய்யும் இடத்தை விமானப் பயணச் சீட்டு செலவு கொண்டே நிர்ணயிப்பதாகவும், 14 விழுக்காடு பேர் தங்கும் விடுதிக்கான செலவைப் பொறுத்து நிர்ணயிப்பதாகவும் தெரிகிறது. எவ்வளவு செலவாகும் என்பதை பொறுத்தே குழுப் பயணங்கள் முடிவாகும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
விமானக் கட்டணங்கள் தொடர்ந்து ஏறுமுகமாகத் தோன்றினாலும், கடந்த சில மாதங்களில் பல இடங்களுக்குச் செல்லும் விமான பயணச்சீட்டு விலைகள் குறைந்துள்ளது என்கிறது இந்த ஆய்வு.
ஒருபுறம் ஜப்பான், சிங்கப்பூரர்கள் அதிகம் தேர்ந்தெடுக்கும் இடமாக விளங்கினாலும், மறுபுறம், இந்தோனீசியாவின், யோக்யகார்த்தா, ஜகார்த்தா, பிரயா ஆகிய நகரங்கள் குறைந்த செலவில் பார்க்க சிறந்த மதிப்புள்ள முதல் மூன்று இடங்கள் என்கிறது இந்த ஆய்வு.
கடந்த 12 மாதங்களில் இந்தோனீசியாவுக்கான விமானங்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிகிறது.
சிங்கப்பூரிலிருந்து யோக்யகார்த்தா, ஜகார்த்தா நகரங்களுக்குச் செல்லும் விமானப் பயணச்சீட்டு விலை ஏறத்தாழ பாதியாகக் குறைந்துள்ளது. அமெரிக்க நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸுக்குச் செல்லும் விமானப் பயணச்சீட்டுக் கட்டணமும் 25 விழுக்காடு குறைந்துள்ளது.
பயணங்களை, செலவுகள் அதிகம் தீர்மானிக்கிறது என்றாலும், தங்களுக்கு விருப்பமான கலைஞரின் நிகழ்வை நேரில் கண்டு களிப்பது தொடங்கி, சிறிய பெரிய விடுமுறைகளுக்கு பயணம் செல்வது உள்ளிட்டவற்றில் விருப்பம் கொண்ட 47 விழுக்காட்டினர், இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு பயணத்திற்கான பணத்தை அதிகம் ஒதுக்கி வைக்க உள்ளதாகக் கூறுகின்றனர்.