சிங்கப்பூரர்களில் 10ல் 8 பேர் விடுமுறையைக் கழிக்க, திரைப்படம் அல்லது தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமடைந்த இடங்களுக்குச் செல்ல விரும்புகிறார்கள் என்கிறது ‘ஸ்கைஸ்கேனர்’ எனும் முன்பதிவு செய்யும் நிறுவனம் நடத்திய பயணப் போக்குகள் குறித்த ஆய்வு.
கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை கொரியத் தொடர்களின் மீதான ஆர்வம் குறையாத நிலையில், 2024ஆம் ஆண்டிலும் கொரியத் தொடர்களில் இடம்பெற்ற ஜேஜூ, ‘லார்டு ஆஃப் தி ரிங்ஸ்’ எனும் தொடர் படமாக்கப்பட்ட நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச், ‘எமிலி இன் பாரிஸ்’ தொடரில் இடம்பெற்ற பிரான்ஸ் உள்ளிட்ட இடங்கள் சிங்கப்பூரர்கள் சுற்றுப்பயணத்துக்குத் தேர்வு செய்யும் முக்கிய இடங்களாக இருக்கின்றன.
ஒரு சுற்றுலாப் பகுதி எவ்வித உணர்வை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்து தேர்வு செய்வதாக ஏறத்தாழ 41 விழுக்காடு மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 1,000 சிங்கப்பூரர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஜப்பான் சிங்கப்பூரர்களிடையே புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதி என்று தெரியவந்துள்ளது. ஜப்பானின் உணவுப் புகலிடமான ஒசாகா, அழகான அமைதியான ஃபுகுவோகா, தைவானின் பரபரப்பான தைபே நகர் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.
இந்த ஆய்வு, சிங்கப்பூரர்கள் பெரியநகரங்களையும், அழகான கடற்கரைகளையும், உணவுக்குப் பெயர்பெற்ற இடங்களையும் சுற்றிப்பார்க்க விரும்புகிறார்கள் என்கிறது. சியாங் மாய், ஜார்ஜ் டவுன், செபு உள்ளிட்ட உணவும், உணர்வும், ஓய்வும் தரும் இடங்களுக்குச் செல்ல விரும்புவதாக இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரர்களின் விரும்பத்தக்க சுற்றுலா இடங்களில் முதல் ஐந்து இடங்களை ஜப்பானிய நகரங்களும், தைவானும் பிடித்துவிட்ட நிலையில், அடுத்தடுத்த இடங்களில் பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா, வியட்னாம், தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளின் நகரங்கள் பிடித்துள்ளன.
பொதுவாக 2024க்கான விடுமுறை இடங்களை விமானப் பயணச்சீட்டு விலை, வானிலை, உணவு, கவனம் ஈர்க்கும் வகையிலான இடங்கள், ஓரிடத்தின் வரலாற்றுச் சிறப்புகள், அங்கு கிடைக்கும் பொருள்கள், கலாசாரக் கூறுகள் ஆகியவற்றைக் கொண்டு தீர்மானிப்பதாகவும் இவ்வாய்வு குறிப்பிடுகிறது.
சிங்கப்பூரர்கள் பெரும்பாலும் விடுமுறைக்குச் செல்லுமிடங்கள், நீர் விளையாட்டுகள், பனி விளையாட்டுகள் உள்ளிட்ட சாகசங்கள் நிறைந்த இடங்களாகவும், வன விலங்குகளைக் காண்பது போன்ற சிலிர்ப்பான அனுபவங்களைத் தருவதாகவும், நிம்மதியான உறக்கத்தை உறுதி செய்வதாகவும் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.