முன்னெப்போதையும் விட, கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலாப் பயண விரும்பிகளின் ஆர்வமும் தேடலும் அதிகரித்துள்ளது. உணவு, கலாசாரம், இசை என பலவற்றையும் ரசிக்க வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் போக்கும் அதிகரித்துள்ளது.
ஏறத்தாழ 30 விழுக்காடு சிங்கப்பூரர்கள் ஒரு குறிப்பிட்ட உணவகத்தில் உண்பதற்காக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளதாக அண்மையில் ‘ஸ்கைஸ்கேனர்’ எனும் பயண முன்பதிவு இணையத்தள நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. 39 விழுக்காடு பேர் விடுமுறை பயணங்களின் போது தான் நிம்மதியாகத் தூங்க முடிகிறது என கருதுவதாகவும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளுடன், விமானப் பயண முன்பதிவு குறித்த சில குறிப்புகளையும் வழங்கியுள்ளது அந்நிறுவனம்.
பிரபலமான நாள்கள், விடுமுறைக் காலங்கள், வாரயிறுதி நாள்களில் பயணம் செய்வதைவிட, சில நாள்கள் முன்பே பயணம் செய்வது, கணிசமான பயணக் கட்டணச் செலவைக் குறைக்க உதவும்.
நேரடி விமானத்தில் செல்வதைவிட, வெவ்வேறு இடங்கள் வழியாக பயணம் செய்வதும், ஒன்றுக்கு மேற்பட்ட விமானங்களைத் தேர்ந்தெடுப்பதும் செலவைக் குறைக்கலாம்.
‘ஸ்கைஸ்கேனர்’ உள்ளிட்ட சில இணையதளங்களில், பயணம் செல்லவிருக்கும் மாதம் முழுவதும் எந்தெந்த விமானங்களில் என்னென்ன கட்டணம் என்பதை அறிந்து கொள்ளலாம். குறைந்த கட்டணம் இருக்கும் நாள்கள் பொறுத்து பயணத் தேதிகளைத் திட்டமிடலாம்.
முன்பே திட்டமிடப்பட்ட பயணங்களுக்கு, உரிய விமானத்தை தேர்ந்தெடுத்து, கட்டணம் குறையும் பொழுது மின்னஞ்சல் அனுப்பும் ‘விழிப்பூட்டலை’ (Alert) தேர்வு செய்து வைத்துக்கொள்ளலாம். வீணாகி கட்டணத்திற்குத் தள்ளுபடிகளோ சலுகைகளோ கொடுக்கப்பட்டாலும், தகவல் தெரிவிக்கப்படும் வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பயணத் திட்டமிடலின்போது, முன்பதிவு இணையத் தளங்களில், ‘எவ்ரி வேர்’ எனும் வசதி மூலம், உலகெங்கிலும் உள்ள விமானங்கள், தங்கும் விடுதிகளையும் கட்டணங்கள் வரிசையில் அறிந்து கொள்ளலாம். தற்காலிக தேதிகளையும் குறிப்பிட்டு கட்டணங்களை அறிந்துகொண்டு திட்டமிடலாம்.