உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பயண முன்பதிவு செய்யும் இணையத்தளமான அகோடா, ‘ஜெனரேட்டிவ் ஏஐ’ எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கான 24 பக்கக் கதைப்புத்தகத்தை உருவாக்கியுள்ளது.
‘சாட் ஜிபிடி’, ‘மிட் ஜேர்னி’ உள்ளிட்ட கருவிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ‘மாயா அண்ட் தி சீக்ரெட் வோர்ல்ட் ஆஃப் அகோடா’ எனும் இந்த நூல், சிறு குழந்தைகளின் கற்பனையைத் தூண்டும் விதமாகவும் தொழில்நுட்பத்தை ஆராய்ந்து அனுபவிக்க குழந்தைகளை ஊக்குவிக்கும் விதத்திலும் அமைந்துள்ளது.
மாயா எனும் சிறுமி, அகோடாவின் பேங்காக் நகர அலுவலகத்தில் பணிபுரியும் தன் தாயைப் பார்க்கச் சென்றபோது அவளுக்கு ஏற்பட்ட அனுபவம், அங்கு அவள் கற்ற தொழில்நுட்பம் தொடர்பானவற்றையும் சுவைபடச் சித்திரிக்கிறது இந்நூல்.
இது, தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு பொழுதுபோக்குடன் கூடிய கற்றலுக்கான வழியாக அமைந்துள்ளது.
இந்த முன்னெடுப்பு, தொழில்நுட்ப மேம்பாட்டை வலியுறுத்தி, எதிர்காலத் தலைமுறைக்கான தொழில்நுட்பத் திறமைகளை ஊக்குவிக்கவும் இளம் மனங்களில் படைப்பாற்றலை உருவாக்கவும் அகோடா தளம் கொண்டுள்ள கடப்பாட்டிற்குச் சான்றாகக் கருதப்படுகிறது.
அகோடா இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்நூல், ஆங்கிலம், தாய்லாந்து, ஜப்பானிய, சீன, இந்தோனீசிய, கொரிய, வியட்னாமிய மொழிகளில் உருவாகியுள்ளது.