நவம்பர் மாதக் கவிமாலையின் 282வது ஒன்றுகூடல் நிகழ்வு நவம்பர் 25ஆம் தேதி தேசிய நூலக வாரியத்தின் ஐந்தாவது தளத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கவிஞர்கள் தாங்கள் படித்த அல்லது பிடித்த கவிதைப் பகிர்வோடு நிகழ்ச்சி தொடங்கியது.
இதில் பார்வையாளர்களும் கவிஞர்களும் தங்கள் மனத்திற்கு பிடித்த மிகவும் நெகிழ்ந்து வடித்த கவிதைகளை வாசித்து மகிழ்ந்தனர்.
கவிமாலையின் போட்டி கவிதைக்கான ‘துஞ்சல்’ எனும் கருப்பொருளையொட்டி கவிஞர்கள் பலர் தங்கள் கவிதைகளை எழுதி சமர்ப்பித்திருந்தனர். போட்டியில் பங்கேற்ற கவிஞர்களின் கவிதைகள் அரங்கில் வாசிக்கப்பட்டன. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற கவிஞர்களுக்குப் பரிசுகள் அளிக்கப்பட்டன.
சிறப்பு அங்கமான கவிஞர் இராம.நாச்சியப்பனின் நாயன்மார் வெண்பா நூல் வெளியீடு நடைபெற்றது. நியூ ஜெர்சியில் இருந்து பவித்ரா அம்மையாரின் நாயன்மார் நாத வழிபாடு காணொளியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. கவிஞர் ராம வைரவனும் கவிஞர் கி கோவிந்தராஜனும் வாழ்த்துரை ஆற்றினர்.
முனைவர் நா. செல்லக்கிருஷ்ணன் நூலாய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் திருமுறை மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு தலைவரான பேராசிரியர் கருணாநிதி தலைமை உரை ஆற்றினார். திரு கருணாநிதி நூலினை வெளியிட திரு எல் வெங்கட்ராமன் முதன்மை நூலினைப் பெற்றுக் கொண்டார். பின்னர் பிரமுகர்கள் பலர் நூலைப் பெற்றுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நூலாசிரியர் கவிஞர் இராம.நாச்சியப்பனின் ஏற்புரையும் கவிமாலை தலைவர் கவிஞர் இன்பாவின் நன்றியுரைடன் நிகழ்ச்சி நிறைவையெட்டியது.
அடுத்த மாத போட்டி கவிதைக்கான தலைப்பு ‘கடைசி மிடறு’. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: poems@kavimaalai.com. கவிதைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 24.12.2023.