நியூயார்க்: கர்ப்பிணிகளுக்குப் பொதுவாக கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் வாந்தி, தலைசுற்றல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம்.
சிலருக்கு அது லேசான பாதிப்பையே ஏற்படுத்தும். வேறு சிலர் கடுமையாகப் பாதிக்கப்படுவதுண்டு. வெகு சிலருக்கோ அரிதாக அது உயிருக்கே ஆபத்தாக அமைவதுண்டு.
இத்தகையோருக்கு முறையான சிகிச்சை அளிக்கக் கைகொடுத்துள்ளது அண்மைய ஆய்வு ஒன்று.
அமெரிக்காவின் தென் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வாளர்கள் அதில் ஈடுபட்டனர்.
‘நேச்சர்’ சஞ்சிகையில் டிசம்பர் 13ஆம் தேதி வெளியான அந்த ஆய்வு முடிவுகள், கர்ப்பிணியின் உடலில் சுரக்கும் ‘ஜிடிஎஃப்15’ என்ற ‘ஹார்மோன்’ (உடலுக்குள் உறுப்புகளுக்கு தகவலைச் சுமந்து செல்லும் ஒருவகை வேதிப்பொருள்; இது உடலிலேயே சுரக்கும்) வாந்தி, தலைசுற்றலை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடுகின்றன.
ஏற்கெனவே சில ஆய்வுகள் இந்த ‘ஹார்மோன்’ குறித்துக் கூறியதை அண்மைய ஆய்வு உறுதிசெய்துள்ளது.
கிட்டத்தட்ட மூன்றில்-இரண்டு கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்களில் வாந்தியும் தலைசுற்றலும் ஏற்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன. அவர்களில் சுமார் இரண்டு விழுக்காட்டினர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற நேர்கிறது. கர்ப்பகாலம் முழுமைக்கும் இவர்கள் இந்தப் பிரச்சினைகளால் அவதியுறுகின்றனர்.
சில கர்ப்பிணிகள் முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் உயிரிழக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே பதிவாகின்றன.
அதிக அளவில் வாந்தி, தலைசுற்றலை எதிர்கொள்ளும் கர்ப்பிணிகளின் உடலில் ‘ஜிடிஎஃப்15 ஹார்மோன்’ அதிகம் இருப்பது ஆய்வில் தெரியவந்தது. ஆனால் அதன் தாக்கம் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஆய்வு முடிவுகள், வருங்காலத்தில் கர்ப்பிணிகளுக்கு மகிழ்ச்சியான கர்ப்பகாலத்தை ஏற்படுத்தித் தர உதவக்கூடும் என்று நம்பப்படுகிறது.