வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள், வெளிநாட்டு ஊழியர்களுக்கான கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன.
கிறிஸ்துமஸ் நாளுக்கு முன்தினம், ‘லைஃப் சென்டர்’ சமூக சேவைகளும் சிங்கப்பூர் வேலைவாய்ப்பு முகவர் சங்கமும் (ஏஇஏஎஸ்) இணைந்து 200 இல்லப் பணிப்பெண்களுக்காக ‘லைஃப் சென்டர்’ தேவாலயத்தில் கொண்டாட்டங்களை நடத்தின.
கிறிஸ்துமஸ் தினப் பாடல்களைப் பாடி, ஆடி, குழு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர் பணிப்பெண்கள். அறுசுவை விருந்தும் இடம்பெற்றது.
பல பணிப்பெண்களும் ‘ஏஇஏஎஸ்’ கேளிக்கை மன்றம் மூலம் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். இம்மன்றம், ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை பணிப்பெண்களுக்காக நடனம், ஓவிய, மனநல, மோசடி எதிர்ப்புப் பயிலரங்குகளை நடத்தி வருகிறது.
மாத இறுதியில் பணிப்பெண்களைப் பல இடங்களுக்கு இக்குழு அழைத்துச் செல்கிறது. 2024 ஜனவரி 21ஆம் தேதி முதலாளி-பணிப்பெண் இணை நடவடிக்கையையும் அது ஏற்பாடு செய்யவுள்ளது. அதற்கு http://tinyurl.com/AEASFunClub இணையத்தளத்தில் பதிவுசெய்யலாம்.
“இந்த நன்னாளில் பன்னாட்டுப் பணிப்பெண்கள் ஒன்றுகூடி கிறிஸ்துமஸ் தின மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார்கள். இவ்வாண்டுக்கு இது சிறந்த முடிவு,” என்றார் ‘ஏஇஏஎஸ்’ தலைவர் கி. ஜெயபிரேமா.
“முதன்முறையாக இதுபோன்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்கு வருகிறேன். ஆடல், பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன,” என்றார் இலங்கையிலிருந்து வந்து இங்கு பத்தாண்டுகளாகப் பணிபுரியும் பி. சபித்திராருபி, 38.
“நாங்கள் எதிர்பார்க்காத பெருமகிழ்ச்சியை அடைந்தோம்,” என்றார் 14 ஆண்டுகளாக இங்கு பணியாற்றும் ஷோபா பீட்டர், 46.
கரையோரப் பூந்தோட்டத்தில் கிறிஸ்துமஸ்
‘லைஃப் சென்டர்’ சமூக சேவைகள், ‘லைஃப் சென்டர்’ தேவாலயம் மற்றும் ‘ஏஜிடபுள்யுஓ’ எனும் வெளிநாட்டு ஊழியர் உதவிக்குழு, கிறிஸ்துமஸ் தினத்தன்று கரையோரப் பூந்தோட்டத்துக்கு 200 வெளிநாட்டு ஊழியர்களை அழைத்துச் சென்றன.
கிறிஸ்துமஸ் பாடல்கள், பிரார்த்தனைகள், அறுசுவை பிரியாணி, பூந்தோட்டங்களுக்கு இலவச நுழைவுச்சீட்டுகள், அன்பளிப்புப் பைகள் என ஊழியர்களின் உழைப்புக்கு நன்றி செலுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் அமைந்தன.
“வேலை, தங்குவிடுதி என்பதே எங்கள் வாழ்க்கை. இதுபோன்று கூட்டமாகச் சேர்ந்து கொண்டாட அவ்வளவு வாய்ப்புகள் இல்லை. அதனால் இந்த அனுபவம் அருமையாக இருந்தது,” என்றார் வெளிநாட்டு ஊழியர் ஸ்பார்ஜன், 32.
“இந்தப் பூக்கள், சுற்றுச்சூழல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது,” என்றார் வெளிநாட்டு ஊழியர் மெரூபன், 25.
அதே நாளில், ‘ஏடிஇஓ’ இல்லப் பணியாளர்கள் உதவிக்குழு, 110 பணிப்பெண்களைக் கரையோரப் பூந்தோட்டத்துக்கு அழைத்துச் சென்றது.