அமெரிக்காவில் கருத்தரிக்கும் வயதுகளில் இருக்கும் பெண்களில் கிட்டத்தட்ட 35 விழுக்காட்டினர் இரும்புச்சத்து குறைபாட்டினால் பாதிப்படைந்துள்ளதாக அண்மைய விவரங்கள் குறிக்கின்றன.
அது போல சிங்கப்பூரிலும் சாட்டா சமூகநலன் நடத்திய கணக்கெடுப்பில் பெண்களில் பாதி பேருக்கு இரும்புச்சத்து குறைபாடு இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
இரும்புச்சத்து குறைபாட்டினால் அநேமியா எனப்படும் ரத்த சோகை பிரச்சனை ஏற்படும். இதனால் ஆண்களும், பெண்களும் பாதிக்கப்பட்டாலும், பெண்கள் அதிகமாக இந்நோய்க்கு உட்படுகின்றனர்.
அதற்கான முக்கிய காரணம் மாதவிடாயும், கருத்தரிப்பதும்.
ரத்த சோகைக்கான அறிகுறிகளை ஒருவர் மிக எளிதில் கண்டுபிடிக்க முடியும்.
உடல் மற்றும் மன சோர்வு, எளிதில் உடைந்து போகும் நகங்கள் மற்றும் குறிப்பாக முடி உதிரும் பிரச்சனை ஆகியவை இருந்தால், அது அநேகமாக ரத்த சோகைக்கான அறிகுறிகள் என்று கூறலாம்.
இதர நோய்களுக்கும் இது போன்ற அறிகுறிகள் உள்ளதால் சில நேரங்களில் ரத்த சோகைக்கான அறிகுறிகள் இவை என்பதையும் ஒருவர் எளிதில் கண்டுபிடிக்க முடியாது.
18 லிருந்து, 59 வயதுடைய பெண்களுக்கு ஒரு நாளுக்கு 19 மில்லிகிராம் இரும்புச்சத்து தேவைப்படுகிறது என்று சுகாதார மேம்பாட்டு வாரியம் பரிந்துரைக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அது ஆறு மில்லிகிராம். மேலும், கருவுற்றிருந்தால், ஒரு நாளுக்கு 27 மில்லிகிராம் தேவைப்படுகிறது.
ஒரு பெண் கருவுற்றிருக்கும் போது ரத்த சோகை வராமல் தடுக்க இரும்புச்சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகம் உட்கொள்ளலாம்.
முட்டை, சிவப்பு இறைச்சி வகைகள், கோழி மற்றும் ஆட்டு கல்லீரல், மீன் வகைகள், கீரை வகைகள், பேரிச்சம் பழம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, டோஃபு போன்ற உணவுகளில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
உணவு மூலம் இரும்புச்சத்தை அதிகரிக்க முடிந்தாலும், சில நேரங்களில் உடலில் இருக்கும் உள்ளார்ந்த நோய்களின் காரணத்தினால் ஒருவர் எவ்வளவு இரும்புச்சத்து நிறைந்துள்ள உணவுகளை உட்கொண்டாலும், இரும்புச்சத்து அளவு அதிகரிக்காமல் இருக்கும். அப்போது மருத்துவரை நாடுவது சிறந்தது.
இரும்புச்சத்து அதிகம் கொண்டுள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு அப்பாற்பட்டு, இரும்புச்சத்தை நன்கு ஈர்த்துகொள்ளும் சக்தி வைட்டமின் சி கொண்ட உணவுகளுக்கு உள்ளது.
இரும்புச்சத்தை கூட்டும் அதே நேரத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ள உணவுகளையும் அன்றாடம் சேர்த்துகொண்டால், அது மேலும் நன்மை அளிக்கும்.
பெரும்பாலான ரத்த சோகை நோயாளிகளின் பிரச்சனையை உணவுகள் மூலம் தீர்க்க முடியும்.
பரபரப்பாக காணப்படும் வாழ்க்கை சூழலில் அதற்கான சரியான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட இயலாமல் போகும்போது, இரும்புச்சத்து கொண்டுள்ள ஊட்டச்சத்து மாத்திரைகளை மற்றொரு தீர்வாக எடுத்துகொள்ளலாம்.
அதையும் தாண்டி உடலில் எவ்வித மாற்றங்களும் தென்படாத போது மருத்துவர்கள் வழக்கமாக ‘இன்ட்ராவீனஸ் ஐயன் இன்ஃபியூஷன்’ எனப்படும் சிகிச்சையை மேற்கொள்வார்கள்.
அதில் ரத்த சோகை இருக்கும் நோயாளியின் நரம்புகள் ஒன்றில் சிறிய குழாய் பொருத்தப்பட்டு அதன் மூலம் இரும்புச்சத்து ரத்த ஓட்டத்தில் சேர்க்கப்படும்.
உடலில் இருக்கும் இரும்புச்சத்து அளவை தெரிந்துகொள்ள பெண்கள் அவ்வப்போது ரத்த பரிசோதனை மேற்கொண்டால் நல்லது.
அதில் ரத்த சோகை வருவதற்கான அபாயத்தை அறிந்துகொண்டு அது வராமல் தடுக்க தக்க முயற்சிகளை முன் கூட்டியே எடுக்க முடியும்.

