மனநல மேம்பாட்டுக்குக் கைகொடுத்த குத்துச்சண்டை

மனநல மேம்பாட்டுக்குக் கைகொடுத்த குத்துச்சண்டை

2 mins read
53c72db4-9e27-4d34-991b-0ba27dc1953e
தன் முதல் குத்துச்சண்டை போட்டியில் வெற்றிபெற்ற தினகரன் ஜோஷுவா, 24 (இடது). - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 2

மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்கிய ஒன்றுவிட்ட சகோதரர்கள், அவற்றைச் சமாளிக்க தங்கள் முதல் குத்துச்சண்டைப் போட்டிக்காக பயிற்சி செய்து, அதில் வெற்றியும் பெற்றனர்.

டிசம்பர் 26ஆம் தேதி நடந்த ‘புல்லி பீட்டவுன்’ போட்டியில் ‘லா ஃபமிலியா பாக்ஸ்ஃபிட்’ அணித் தலைவராக கலந்துகொண்டார் சூர்யா சில்வராஜு @ முகமது சைஃப் எஸ்ரா அலி, 30. அவரது அணியில் களமிறங்கினார் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் தினகரன் ஜோஷுவா S/O ஆனந்தி தேவி, 24.

இருவரும் எதிரணியினர் மீண்டும் எழாதபடி குத்துவிட்டு வென்றனர்.

கலந்துகொண்ட நோக்கங்கள்

“இப்போட்டியில் வேறு யாருடனோ போட்டியிடுவதைக் காட்டிலும், நம் சொந்த மனதுடனே அதிகமாகப் போட்டியிடுகிறோம்,” என கூறினார் தினகரன்.

“பல ஆண்களும் தங்கள் உடல்நல, மனநலப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசத் தயங்குவதுண்டு. புறத்தில் அனைத்தையும் சிறப்பாகச் சமாளிப்பதுபோல் காட்டிக்கொண்டு உள்ளுக்குள் சிரமப்படுகின்றனர்.

“இப்போட்டியில் கலந்துகொள்வதன்மூலம் நம் மனநலப் பிரச்சினைகளைப் பற்றித் தயங்காமல் பேசி, தேவைப்படும் உதவியை நாடலாம் என்பதை மக்களுக்கு உணர்த்த விரும்பினேன்,” என்றார் சூர்யா.

போர்க்களப் பயிற்சியிலிருந்து குத்துச்சண்டைப் பயிற்சிக்கு மாற்றம்

எட்டு ஆண்டுகளாக சிங்கப்பூர் ஆயுதப் படையில் முழுநேர ராணுவ வீரராகப் பணியாற்றிய சூர்யா, மாஸ்டர் சார்ஜண்ட் பதவிக்கு உயர்ந்தார். ஆயினும், 2020ல் சேவையைவிட்டு வெளியேறியதும் வாழ்வில் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார்.

பாதுகாவலர், மேற்பார்வையாளர், வெளிநாட்டு ஊழியர் தங்குமிட மேலாளர் என பலவகையான வேலைகளைச் செய்துபார்த்த சூர்யாவுக்கு எந்த வேலையும் நிரந்தரமாக அமையவில்லை.

அச்சமயத்தில் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடைவெளி அதிகரிக்க, மணவாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.

அப்பிரிவினையால் ஏற்பட்ட துயரம் ஒருபுறம், கேள்விக்குறியான எதிர்காலம் மறுபுறம் என மனச்சோர்வுக்கு உள்ளாகினார் சூர்யா.

இருப்பினும், தன் வாழ்வை மாற்றியமைத்து, தன் மகனுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என அவருக்குள் இருந்த வேட்கை குறையவில்லை.

அப்போதுதான் அவருடைய தோழரும் வருங்கால மனைவியும் அவரைக் குத்துச்சண்டையை முறைப்படிக் கற்று இப்போட்டியில் பங்குபெற ஊக்குவித்தனர்.

அதை ஏற்றுக்கொண்டு, வாரத்திற்கு இரு முறை, மொத்தம் 16 பயிற்சிகளுக்குச் சென்றார் சூர்யா. அவரது விடாமுயற்சியின் விளைவே இந்த வெற்றி.

புதிய குடும்பப் பொறுப்புகள்: உதவிய குத்துச்சண்டை

வேலைப் பளுவோடு கணவர், தகப்பன் என்ற புதிய பொறுப்புகளை ஏற்ற தினகரன் மன உளைச்சலுக்கு உள்ளாகினார்.

அப்போதுதான் அவருடைய மனைவி அவரைக் குத்துச்சண்டைப் பயிற்சிகளில் சேர ஊக்குவித்தார். சூர்யாவும் அவரை இப்போட்டிக்கு அறிமுகப்படுத்தினார்.

போட்டி தினம் தனது பிறந்தநாள் என்பதால் உடனடியாக வாய்ப்பை ஏற்றார் தினகரன்.

கடைசி நேரத்தில் சேர்ந்ததால் அவர் கூடுதல் நேரம் பயிற்சி செய்ய வேண்டியிருந்தது. எனினும், மனைவி, மகள், நண்பர்களின் உந்துதல் அவரை ஊக்கப்படுத்தி வெற்றிகாண வைத்தது.

இவ்வெற்றியைத் தொடர்ந்து, கூடுதல் ஆதரவாளர்களைத் தேடி மேலும் போட்டிகளில் வெற்றிபெற விரும்புகிறார் தினகரன்.

“ஒவ்வொரு போட்டிக்கும் ஆதரவாளர்கள் தேவை. அனைத்துக் குத்துச்சண்டை வீரர்களும் இச்சவாலைச் சந்திக்கின்றனர்,” என்கிறார்.

“எங்கள் கனவு தொழில்முறைக் குத்துச்சண்டை வீரர்களாவது. எதிர்காலத்தில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்க விரும்புகிறோம்,”
ஒன்றுவிட்ட சகோதரர்கள் தினகரன், சூர்யா.
குறிப்புச் சொற்கள்