ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 28ஆம் தேதியன்று உட்லண்ட்ஸ் சமூக மன்றத்தின் ஏற்பாட்டில் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகச் சேலையில் காட்சியளித்தார் செம்பவாங் குழுத்தொகுதியின் உட்லண்ட்ஸ் பிரிவின் நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி மரியம் ஜாஃபர்.
“பொங்கல் கொண்டாட்டங்களை வட்டாரங்களில் நடத்துவது மிக முக்கியம். அப்போதுதான் இந்திய குடியிருப்பாளர்களிடம் மட்டுமன்றி, மற்ற இனத்தாரிடமும் பொங்கல் உணர்வைக் கொண்டு செல்லமுடியும்.
“பல்லின சமுதாயமான சிங்கப்பூரில் மற்ற இனத்தாரின் பண்டிகைகளைப் பொறுத்துக்கொள்வதோடு நின்றுவிடாமல், அவற்றைப் புரிந்துகொண்டு, அவை சார்ந்த நடவடிக்கைகளில் பங்கேற்கவும் வேண்டும்,” என்றார் திருவாட்டி மரியம்.
பொங்கல் மாடுகளுக்குத் தாவரங்களைக் கொடுத்து, மாலையிட்டு, சிறுவர்களோடும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். பொங்கல் பானையில் பாலூற்றி, அனைவருடனும் இணைந்து ‘பொங்கலோ பொங்கல்’ என கூவி மகிழ்ந்தார்.
உரல், உலக்கையில் நெல்லைப் புடைக்கவும், நவதானியங்களைப் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டார் திருவாட்டி மரியம்.
“சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்ற இனத்தாரும் பங்கேற்று பொங்கல் பண்டிகையின் சாராம்சங்களைப் பற்றிக் கற்றதைக் காணும்போது பெருமகிழ்ச்சியடைகிறோம்,” என்றார் உட்லண்ட்ஸ் இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவர் ஜஃபார் சாதிக்.
“சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை, பொங்கல் மாடு, ஆடல் பாடல்கள் எனப் பலவகையான நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம்,” என்றார் உட்லண்ட்ஸ் இந்தியர் நற்பணிச் செயற்குழுத் துணைத் தலைவர் சுரேஷ்குமார்.
சிறுவர்களுக்கான மண்பானை ஓவியந்தீட்டுதல், வரைபடம் வண்ணம் தீட்டுதல் எனப் பல்வேறு நடவடிக்கைகளும் நடைபெற்றன. அவைமூலம் சிறுவர்களும் பொங்கல் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
“வார இறுதி என்பதால் பெற்றோர் பிள்ளைகளை அழைத்துவந்து நடவடிக்கைகளில் பங்கேற்றது, பொங்கல் பண்டிகையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வழிவகுத்துள்ளது,” என்றார் உட்லண்ட்ஸ் இந்தியர் நற்பணி செயற்குழு உறுப்பினர் திரு ஸ்ரீ கணேசன்.
சிங்கப்பூரில் முதன்முறையாக தன் பிள்ளைகளை பொங்கல் விழாவிற்கு அழைத்துவந்த திரு ஷ்வேடாங்க் குப்தா, நிகழ்ச்சி தன் சிறுவர்களுக்குப் பெருமகிழ்ச்சி அளித்ததாகக் கூறினார்.