புதுடெல்லி: இந்திய இளையர்கள் ‘அன்பர் வாரத்தை’ முன்னிட்டு ரோஜாக்கள், சாக்லெட்டுகள், பரிசுக்கூடைகள் போன்றவற்றை வாங்க அதிகம் செலவிடுவதாகக் கூறப்படுகிறது.
உலகெங்கும் பிப்ரவரி 14ஆம் தேதி அன்பர் தினமாகக் கொண்டாடப்படும் வேளையில் அதற்கு முந்தைய வாரம் இந்தியாவில் பிரபலமாகி வருகிறது.
பிப்ரவரி 7ஆம் தேதி ரோஜாக்கள் தினமாகவும் 9ஆம் தேதி சாக்லெட்டுகள் தினமாகவும் 10ஆம் தேதி ‘டெடி’ கரடி பொம்மைகள் தினமாகவும் அனுசரிக்கப்படுகின்றன. அந்த வாரத்தின் மற்ற நாள்கள், காதல் சொட்டும் உறுதிமொழிகள், அணைப்புகளுக்கானவை.
மின்வர்த்தகத் தளங்களும் வாழ்க்கைத்துணையைத் தேட உதவும் தளங்களும் இத்தகைய கொண்டாட்ட நடவடிக்கைகளை ஊக்குவிக்கின்றன.
பரிசுப்பொருள்களுக்கான எஃப்என்பி.காம் எனும் இணையத்தளம், அன்பர் தினத்திற்கு முன்பாக ஒரு நிமிடத்திற்கு 350 ரோஜாக்கள் வரை விநியோகித்ததாகக் கூறியது.
உணவு விநியோகத் தளமான ஸொமாடோ, பிப்ரவரி 9ஆம் தேதி, ஒரு நிமிடத்திற்கு 406 சாக்லெட்டுகளை விநியோகித்ததாகக் குறிப்பிட்டது.
எஸ்பிஎம் பேங்க் இந்தியா எனும் வங்கி, பிப்ரவரி 8 முதல் 29ஆம் தேதி வரை வைப்புநிதிக்கான சிறப்பு வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது.
தீவிர வலதுசாரி அமைப்புகள் அன்பர் தினக் கொண்டாட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்தபோதும் இளம் இந்தியர்கள் பலர், செலவு பற்றிக் கவலைப்படாமல் தங்கள் நேசத்துக்குரியோர்க்கு அன்பளிப்பு வழங்குவதில் அக்கறை காட்டுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.