தொடர்ச்சியாக கணினி முன் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால், கண்கள் சோர்வடைந்து, வறட்சி ஏற்பட்டு, சிவப்பு நிறமாகி, எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும். இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் உடனடி தீர்வாக ஒரு சிலர் கண்களுக்கு சொட்டு மருத்துகளை விட்டுக்கொள்வதை வழக்கமாகப் பின்பற்றி வருகின்றனர்.
இவ்வாறு மருந்துகளை விட்டுக்கொள்வதால் கண்களில் ஏற்பட்ட அரிப்பு, எரிச்சல் போன்றவை நீங்காமல் இருப்பதோடு, கண்களில் வறட்சித் தன்மையையும் மேலும் அதிகரித்துவிடும்.
எனவே இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் கண்களுக்கு மருந்துகளை விட்டுக்கொள்ளாமல் ஒருசில இயற்கை முறைகளைப் பின்பற்றுவது பயன்தரும்.
கண்களின் வறட்சி, எரிச்சலைத் தடுப்பதற்கான ஒரு சிறந்த வழிமுறை எனில் குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவுவதைக் கூறலாம். கணினி, தொலைக்காட்சியை அதிக நேரம் பார்ப்பதால் அதிலிருந்து வரும் கதிர்கள் கண்களில் வறட்சியையும் அரிப்பையும் ஏற்படுத்தும். இதற்கு ஒரு சிறந்த தீர்வாக அவ்வப்போது கண்களை குளிர்ந்த நீரால் கழுவவேண்டும்.
நீண்ட நேரம் கணினி அல்லது மடிக்கணினி முன்பு உட்கார்ந்திருப்பவர்கள் அவ்வப்போது கண்களுக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுக்கவேண்டும். முக்கியமாக அவ்வப்போது சற்றுநேரம் கண்களுக்கான பயிற்சியை செய்வதால் கண்களில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம். அதிலும் கண்களை அங்கும் இங்கும் சுழற்றுவது மிகவும் சிறந்தது. வேண்டுமெனில் சிறிது நேரம் கண்களை சிமிட்டுவது, மூடிக் கொள்வது போன்ற சில மாற்றங்களைச் செய்யலாம்.
கண்களில் ஏதேனும் சோர்வு, எரிச்சல், வறட்சி போன்றவை ஏற்பட்டால் கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும் வகையில் வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்தால் கண்களின் வறட்சி நீங்கி, புத்துணர்ச்சியடையும்.
கண்களின் வறட்சி, அரிப்பை சரிசெய்ய பன்னீரும் சிறந்த பயன்தரும். பன்னீரை சிறிய பருத்திப் பஞ்சில் நனைத்துக்கொண்டு கண்களின்மீது ஒத்தடமாகக் கொடுத்தால் கண்களில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, கண்கள் எப்போதும் வறட்சியின்றி இருக்கும்.