தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இமயமலையில் ஒரு காதல் திருமணம்

3 mins read
2fbda452-5399-4f31-9653-dd6d673f5e94
கசூலியில் உள்ள ‘கைத்தல்’ விடுதியில் கண்கொள்ளாக் காட்சிகளோடு நடந்த கனவுத் திருமணம். - படம்: மாயங்க்
multi-img1 of 3

இமயமலையின் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள ‘ஷிவாலிக்’ குன்றுகளின் இடையே, கசூலி எனும் ஊரில், அழகான ஜோடிக்கு மேலும் அழகூட்டும் இயற்கைக் காட்சிகளோடு திருமணம் நடந்தேறியது.

தூய மலைக் காற்றின் நறுமணத்தில், பரவலான பசுமையில், கனவுலகின் எல்லைக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் மலைகளுக்கு உண்டு.

இதற்குமுன்பு வானில் பல அடி உயரத்திலிருந்தே நான் கண்டிருந்தாலும், இமயமலைப்பகுதிகளை கண்ணாரக் கண்டது ஒரு தனி சுகம்.

‘பிரனீஸ்’, ‘ஆல்ப்ஸ்’ போன்ற மலைப்பகுதிகளைக் காட்டிலும், உலகிலேயே ஆகப் பெரிய சிகரமான ‘எவரெஸ்ட்’டைக் கொண்டுள்ள இமயமலைக்கு ஒரு சிறப்பிடம் உண்டு.

பிரான்ஸ் நாட்டில் ஈராண்டுகள் பயின்றபோது ஏற்பட்ட நெருக்கமான நட்பு, என்னை சிங்கப்பூரிலிருந்து டெல்லிக்கு விமானப் பயணம் மேற்கொள்ளச் செய்தது.

டெல்லி விமான நிலையத்தில் திருமண மாப்பிள்ளையே என்னையும் என் நண்பர்களையும் சந்தித்து, எங்களைச் சண்டிகருக்கு வாகனத்தில் அழைத்துச் சென்றார். அங்கு ஒரு நாள் தங்கியதும், அடுத்த நாள் நாங்கள் கசூலிக்குச் சென்றோம்.

கசூலியில் உள்ள ‘கைத்தல்’ விடுதியில் மூன்று நாள்களாக நடைபெற்ற திருமண விழாவைக் கனவுத் திருமணம் என்றுதான் சொல்லவேண்டும்.

‘ஏன் சொந்த ஊரில் திருமணத்தை வைக்கவில்லை? ஏன் இமயமலை?’ என என் நெஞ்சில் அலைமோதிய கேள்விகள், கசூலி மலைகளின், ‘கைத்தல்’ விடுதிகளின் அழகை நேரில் கண்டதும் அடங்கி ஓய்ந்தன. யாருக்குத்தான் இதுபோன்ற சூழலில் திருமணம் செய்யவேண்டும் என்ற கனவு இருக்காது!

டெல்லி, சண்டிகரைச் சார்ந்த மணமக்கள், இமயமலையைத் தேர்ந்தெடுத்ததற்கு மற்றொரு காரணமும் இருந்தது.

இதே இடத்தில், ஈராண்டுகளுக்கு முன்பு தன் உயிர் நண்பனின் பிறந்தநாள் விழாவில்தான் தன் காதலியை முதன்முறையாகச் சந்தித்திருந்தார் விதுர். அதனால், காதல் எங்கு மலர்ந்ததோ அங்குதான் திருமணமும் நடைபெறவேண்டும் என்று அவர் விரும்பினார்.

“திருமணத்தை டெல்லியிலேயே வைத்திருந்தாலும் அனைவரும் வேலை முடிந்ததும் ஒரு நாள் வந்து சென்றுவிட்டுத் திரும்பியிருப்பார்கள். இமயமலை என்பதால் அனைவராலும் சில நாள்கள் தம் சொந்த வேலைகளை விட்டுவிட்டு திருமண உணர்வில் மூழ்க முடிந்தது,” என்றார் மணமகன் விதுர்.

‘எதை ரசிப்பது? மணமக்களின் இணக்கத்தையா? பரந்த இயற்கையையா? அல்லது இரண்டின் சங்கமத்தையா?’ என விருந்தினர்களுக்கு இனிய குழப்பம்.

பழைய நண்பர்களுடன் சந்திப்பு, ஆடல் பாடல், கூத்து கும்மாளம் என மூன்று நாள்களும் பறந்து போயின. என் நண்பன் நிஷாந்த் கூறியதுபோல, “அவர்கள் இருவருக்கும் இடையே இதே இடத்தில் மீண்டும் மீண்டும் திருமணம் நடந்தால் நன்றாக இருக்கும்!”

தித்திக்கும் திருமண இடங்கள்

எழில்மிக்க திருமண இடங்களுக்கு சிங்கப்பூரிலும் பஞ்சமில்லை. செந்தோசா, சாங்கி, மரினா பே போன்ற இடங்களைச் சுற்றிப் பல விடுதிகளும் உள்ளன. பல இன சமுதாயத்திற்கென கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்களும் இருக்கின்றன.

சிங்கப்பூரின் அருகிலேயே பாலி, பாத்தாம், ஜோகூர் போன்றவற்றில் திருமண இடங்களும் உள்ளன.

தமிழ்நாட்டில் புதுச்சேரி, மகாபலிபுரம், கன்னியாகுமரி, தனுஷ்கோடி, ஊட்டி, கொடைக்கானல், தஞ்சைப் பெரிய கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் போன்றவை திருமணத்திற்கு உகந்த இடங்கள். கேரளா, கோவா கடற்கரைகள், ராஜஸ்தானி கோட்டைகள், காதல் சின்னம் தாஜ்மகால் என தமிழ்நாட்டைத் தாண்டியும் பார்க்கலாம்.

திருமண வாழ்வு என்பது வாழ்க்கை முழுதும் நீடிக்கும் உறவு. அதற்கு சிறப்பான தொடக்கமும், வாழ்நாள் மொத்தமும் மனத்தில் நீங்காது நிற்கும் நினைவுகளும் கொடுக்கின்றது ஒரு நல்ல திருமண இடம். அதனால், அதனைச் சிந்தித்துத் தீர்மானிப்பது நல்லது.

குறிப்புச் சொற்கள்