குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தில் 45 ஆண்டுகளாகப் பணியாற்றும் ‘சிஐ1’ ஜெயலட்சுமி, 66, வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்தார்.
காலை, மாலை, இரவு நேரங்களில் சுழற்சி முறையில் வேலை செய்வதால் ஏற்படும் களைப்பைப் பொருட்படுத்தாமல் முழுமனதுடன் சேவையாற்றிவருகிறார். திருவாட்டி ஜெயா தற்போது சாங்கி விமான நிலையத்தில் துணை குழுத் தலைவராகப் பணியாற்றுகிறார்.
இந்த வளர்ச்சிக்கு அடிப்படையாகத் திகழ்வது, பயணிகளை அவர் மரியாதையுடன் நடத்தும் நற்பண்பு.
சிலேத்தார் பகுதியில் வளர்ந்த அவர், ‘ஓ’ நிலை பள்ளிப்படிப்பு முடித்த பின்னர் சில ஆண்டுகள் அலுவலகம் ஒன்றில் பணியாற்றி பின்னர் தம் 20வது வயதில் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
“பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் வேலை செய்து வந்த என் தந்தை, எனக்கு அரசாங்க வேலை கிடைத்தது தெரிந்ததும் மகிழ்ந்தார்,” என இவர் நினைவுகூர்ந்தார்.
திருவாட்டி ஜெயா முதலில் உட்லண்டஸ் சோதனைச்சாவடியில் பணியாற்றினார். அங்கு சுமார் ஓராண்டு பணியாற்றிய பிறகு பயணிகள் விமான நிலையமாக முன்பு திகழ்ந்த பாய லேபார் விமான நிலையத்தில் பணியாற்றிய பின்னர் சாங்கி விமான நிலையத்திற்கு மாறினார்.
சாங்கி விமான நிலையத்தில் பணியாற்றிய பின்னர் இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சு குழுவில் பணியாற்றினார். அங்கு மின் விசாவுக்கான விண்ணப்ப முறையை நடப்புக்குக் கொண்டுவருவதில் திருவாட்டி ஜெயா பங்காற்றினார்.
அதன்படி, நியமிக்கப்பட்ட பயண முகவர்கள், பயணம் செய்ய விரும்புவோரின் சார்பில் விண்ணப்பம் செய்ய முடியும். இதனால் அங்கிருக்கும் பயணிகள் சிங்கப்பூர் வர சுமூகமாக விண்ணப்பிக்க முடிகிறது. விசா கட்டணத்தை நேரடியாக விமான நிலைய முகப்பில் செலுத்துவதற்குப் பதிலாக இணையத்தில் செலுத்த முடியும்.
2006ல் வருகையாளர் சேவை நிலையத்திற்கு மாற்றப்பட்ட திருவாட்டி ஜெயா, சிங்கப்பூரில் கூடுதல் காலம் தங்க விண்ணப்பிக்கும் வருகையாளர்களின் நிலைமையைப் புரிந்துகொள்ள அவர்கள் ஒவ்வொருவருடனும் பேசி அவர்களது வேண்டுகோளைப் பரிசீலிக்கிறார்.
2012ல் சென்னைக்கு மீண்டும் சென்று அவர் அங்கு மூன்றரை ஆண்டுகள் பணியாற்றினார். வேலை நேரத்திற்கு அப்பால் இவர் பல்வேறு நன்கொடைப் பணிகளிலும் சமூக சேவையிலும் ஈடுபட்டிருந்தார்.
சிறப்பாக பணியாற்றியதற்காக திருவாட்டி ஜெயாவுக்கு 2015ல் அமைச்சர் விருது வழங்கப்பட்டது. இரண்டு பிள்ளைகள், மூன்று பேரப்பிள்ளைகள் இருக்கும் திருவாட்டி ஜெயா, எந்தப் பணியில் இறங்கினாலும் சிங்கப்பூரின் நற்பெயரைக் கட்டிக்காக்கும் விதமாக நடந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறார்.