தமிழ்மொழி சிங்கப்பூரில் அதிகாரத்துவ மொழியாக தலைநிமிர வித்திட்ட தமிழவேள் கோ. சாரங்கபாணியின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் வருகின்ற மார்ச் 16ஆம் தேதி சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, தமிழவேள் நற்பணி மன்றம் ஏற்பாட்டில் லிட்டில் இந்தியாவிலுள்ள இந்திய மரபுடைமை நிலையத்தில் அன்றைய நாள் காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு, ‘லிஷா’ எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் தலைவர் ரெகுநாத் சிவா தலைமை வகிக்க, வளர்தமிழ் இயக்கத்தின் துணைத்தலைவர் ஜோதி. மாணிக்கவாசகம் முன்னிலை வகிக்கவுள்ளார்.
தேசிய நூலக வாரியத்தின் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவு தலைவரான அழகிய பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வில் தமிழவேளின் சீர்திருத்தங்கள், தமிழர் திருநாள் ஏற்படுத்திய தாக்கங்கள், தமிழவேளின் இதழியல் பங்களிப்பு ஆகிய தலைப்புகளில் ஆசிரா முகம்மது பிலால், சுந்தர் பிலவேந்தர்ராஜ், மோனலிசா ஆகியோர் நினைவுரைகளும் ஆற்றவுள்ளனர்.
இந்நிகழ்விற்கு இந்திய மரபுடைமை நிலையம், சமூக இலக்கிய இதழ் ‘செம்மொழி’, ஆரிய பவன் உணவகம், லீட்ஸ் (LEEDS) ஆகியவை ஆதரவு அளிக்கின்றன.