சிங்கப்பூரின் அறியப்படாத நாயகர்கள் (சைலண்ட் ஹீரோஸ்) விருதுக்குத் தகுதியானவர்களை முன்மொழியலாம்.
சிங்கப்பூர் பொதுமக்கள் சங்கத்தின் (சிஏஎஸ்) ஏற்பாட்டில் பதினோராவது முறையாக இவ்விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.
ஆண்டுதோறும் அங்கீகாரம் எதிர்பார்க்காமல் அமைதியாக சமூகத்திற்குப் பங்காற்றிவரும் சாதாரண மக்களை இவ்விருதுகள் சிறப்பிக்கின்றன.
‘மனிதநேய நெஞ்சம், தலைசிறந்த பெரியவர், உறுதியளிக்கும் முன்னோடி, முன்மாதிரி இளையர், அன்பான வெளிநாட்டவர் ஆகிய ஐந்துப் பிரிவுகளில் விருதுபெறத் தகுதியானவர்களை www.sgsilentheroes.com என்ற இணையத்தளத்தில் முன்மொழியலாம்.
இதில் குறிப்பாக, ‘மனிதநேய நெஞ்சம்’ என்பது உடற்குறை அல்லது சிறப்புத் தேவை உள்ளபோதும் சமூகத்திற்கு முன்மாதிரிச் சேவை புரிந்துள்ளோருக்கானது.
ஜூன் 15ஆம் தேதிக்குள் பெயர்களை முன்மொழியவேண்டும்.
வெற்றியாளர்கள் செப்டம்பர் 7ஆம் தேதியன்று ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெறும் விழாவில் தங்கள் விருதுகளைப் பெறுவர்.
இதுவரை பத்து ஆண்டுகளில் 52 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
சனிக்கிழமை மார்ச் 16ஆம் தேதி நடைபெற்ற விருது தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சரும் வர்த்தக, தொழில் துணை அமைச்சருமான ஆல்வின் டான் வருகையளித்தார்.
‘சிஏஎஸ்’உடன் இணைந்து முன்னாள் ‘சைலண்ட் ஹீரோஸ்’ வெற்றியாளர்களும் இறுதிச் சுற்று போட்டியாளர்களும் இத்தொடக்க விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதற்கு மோல்மீன்-கேர்ன்ஹில் குழுத்தொகுதி ஆதரவு அளித்தது.
“இவ்வாண்டு விருதுகளின் மூலம், பிறர் மீது அன்பு காட்டி, கருணைமிக்க சமுதாயத்தை உருவாக்க பங்காற்றும் முன்மாதிரி தனிநபர்களை நாம் பாராட்ட விரும்புகிறோம்,” என்று அமைச்சர் டான் தெரிவித்தார்.
தொடக்க விழா, ‘குடும்பத்துடன் மகிழும் நேரம்’ எனும் கொண்டாட்டத்துடன் இணைந்து நடைபெற்றது.
அதில் 100க்கும் மேற்பட்ட பெக் கியோ வட்டாரவாசிகள் கேளிக்கை நடவடிக்கைகளில் பங்கெடுத்தனர்.
ஐம்பது குறைந்த வருமான குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்களும் வழங்கப்பட்டன.
‘சைலண்ட் ஹீரோஸ்’ ஏற்பாட்டுக் குழு, சமூக சேவை ஆற்றும் மாணவர்களுக்கான பரிந்துரைகளையும் வரவேற்கிறது.