வரலாறும் நவீனமும் பின்னிப் பிணைந்த ஹனிஃப்பின் ஓவியப்பயணம்

வரலாறும் நவீனமும் பின்னிப் பிணைந்த ஹனிஃப்பின் ஓவியப்பயணம்

2 mins read
வரலாற்றில் வேரூன்றிய கலையார்வமும், நவீனக் கலைஞரின் கற்பனையாற்றலும் இவரது ஓவியங்களில் கைகோக்கின்றன.
9cf9d1b5-9b28-40c3-b248-f9d29f3db2ac
சர் ஸ்டாம்ஃபர்டு ராஃபிள்ஸ் சிங்கப்பூரில் கால்பதித்ததன் இருநூற்றாண்டு நிறைவை ஒட்டி 2019ல் நடந்த சிறப்புக் கண்காட்சியில் ஓவியர் ஹனிஃப் (நடுவில்) வரைந்த ‘கோ.சா’, ‘நாராயண பிள்ளை’ ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. - படம்: தமிழ் முரசு
தமிழ் முரசுடன் தன் ஓவியப்பயணத்தைப் பகிர்ந்த ஓவியர் ஹனிஃப், 38.
தமிழ் முரசுடன் தன் ஓவியப்பயணத்தைப் பகிர்ந்த ஓவியர் ஹனிஃப், 38. - படம்: ரவி சிங்காரம்

காண்பதை உயிரோட்டமாக வரையும் ஓவியர்களின் இடையே, வாழ்வோடு தன் கற்பனையையும் இணைத்து கேலிச்சித்திரம், அறிவியல் புனைவு அம்சங்களோடு ஓவியம் தீட்டுகிறார் 38 வயது ஓவியர் முகமது ஹனிஃப்.

அவரது ஓவியங்களுக்குக் கூடுதல் பரிமாணங்களைச் சேர்க்க உதவுகிறது, அவர் வரலாற்றில் மேற்கொண்டுவரும் ஆய்வுப் பயணம்.

“ஒரு காலகட்டத்தில், நம் வரலாற்று, கலாசாரத்தைப் பற்றி அறிந்துகொள்வதில் பெரும் நாட்டம் எனக்கு ஏற்பட்டது.

“சிங்கப்பூரையும் தாண்டி, அக்கால இந்திய, இஸ்லாமிய மக்களின் வாழ்வுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன்,” என்கிறார் ஹனிஃப்.

தொன்மைவாய்ந்த வரலாற்றுக் கதைகளைக் காலங்கடந்து கூறும் இந்திய கலைப் படைப்புகள் அவரது சிந்தையைக் கவர்ந்தன. அர்த்தமுள்ள கதைகள் சொல்லும் ஓவியங்களை வழங்கவேண்டும் என்ற புத்துணர்ச்சியையும் அவருக்குக் கொடுத்தன.

அம்முயற்சியில், சிங்கப்பூர் சமுதாயத்திற்கு முக்கிய பங்காற்றியோரை ஓவியமாக வரையும் ஆர்வமும் அவருள் எழுந்தது. அப்பொழுது அவருடைய கவனத்துக்கு வந்த முதல் பெயர் தமிழ் முரசு நிறுவனர் தமிழவேள் கோ.சா எனும் கோ.சாராங்கபாணி.

“சிங்கப்பூரில் தமிழர்களுக்கும் தமிழுக்கும் உரிய உன்னத நிலை வழங்கப்படவேண்டும் என்பதற்கு திரு கோ.சா பாடுபட்டார்.

“கோ.சா அன்று போராடவில்லையெனில் இன்று தமிழ்மொழி நம் தேசிய மொழிகளில் ஒன்றாக இருக்குமா என்பது சந்தேகம்தான்,” என்கிறார் ஹனிஃப்.

எனக்கு கோ.சாரங்கபாணி மீதும் அவரது தமிழ்ப்பணி மீதும் அளவுகடந்த மரியாதை உள்ளது.
ஓவியர் ஹனிஃப்

“சிங்கப்பூர்த் தமிழ்ச் சமுதாயத்திற்கு மெருகேற்றிய மற்றொருவர் திரு நாராயண பிள்ளை. அவரது வர்த்தகத் திறன்கள், தமிழர்களுக்கு வழங்கிய ஊக்குவிப்பு ஆகியவற்றால் அவர் நன்மதிப்புப் பெற்றார்.

“திரு நாராயண பிள்ளை சிங்கப்பூரின் ஆகப் பழமைவாய்ந்த கோவிலான ஸ்ரீ மாரியம்மன் கோவில் கட்டப்படுவதற்கும் வித்திட்டார்,” என்கிறார் ஹனிஃப்.

அதனால், அவர்களின் சரித்திரங்களையும் தன் கைகளால் பதிக்கவேண்டும் என்ற முனைப்புடன் அவர்களது உருவப்படங்களை மின்னிலக்க முறையில் வரைந்தார் ஹனிஃப்.

சர் ஸ்டாம்ஃபர்டு ராஃபிள்ஸ் சிங்கப்பூரில் கால்பதித்ததன் இருநூற்றாண்டு நிறைவை ஒட்டி 2019ல் நடந்த சிறப்புக் கண்காட்சியில் அவர் வரைந்த ‘கோ.சா’, ‘நாராயண பிள்ளை’ உருவப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றைத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் பார்வையிட்டார்.

தமிழ் முரசு 2023 ஆகஸ்ட் 19ஆம் தேதி நடத்திய முதல் ‘தோசை பிரேக்ஃபாஸ்ட் கிளப்’ நிகழ்ச்சியில், அதிபர் தர்மன் சண்முகரத்தினத்திற்கு (இடம்) ஹனிஃப்பின் ‘கோ சாராங்கபாணி’ ஓவியத்தை வழங்கினார் தமிழ் முரசு ஆசிரியர் ஜவஹரிலால் ராஜேந்திரன்.
தமிழ் முரசு 2023 ஆகஸ்ட் 19ஆம் தேதி நடத்திய முதல் ‘தோசை பிரேக்ஃபாஸ்ட் கிளப்’ நிகழ்ச்சியில், அதிபர் தர்மன் சண்முகரத்தினத்திற்கு (இடம்) ஹனிஃப்பின் ‘கோ சாராங்கபாணி’ ஓவியத்தை வழங்கினார் தமிழ் முரசு ஆசிரியர் ஜவஹரிலால் ராஜேந்திரன். - படம்: எஸ்பிஎச் மீடியா

அதைத் தொடர்ந்து, தமிழ் முரசு சென்ற ஆண்டு நடத்திய முதல் ‘தோசை பிரேக்ஃபாஸ்ட் கிளப்’ நிகழ்ச்சியில், அதிபர் தர்மன் சண்முகரத்தினத்திற்கு ஹனிஃப்பின் ‘கோ சாராங்கபாணி’ ஓவியம் வழங்கப்பட்டது.

இப்போது தன் கலைப்பயணத்தின் அடுத்த அத்தியாயத்திற்குச் சென்றுள்ளார் ஹனிஃப். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வரைபட வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ள அவர், 2019ல் ‘தாடிவைத்த கரடி’ (இன்ஸ்டகிராம் தளத்தில் @bearded_bear_photography_sg) எனும் நகைச்சுவைப் பெயருடன் ஒரு புகைப்பட நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

“மக்களின் ஆக மகிழ்ச்சியான தருணங்களைப் புகைப்படங்களாகப் படம்பிடிக்கும்போது அதில் ஒரு தனி சுகம் உள்ளது,” என்கிறார் ஹனிஃப்.

குறிப்புச் சொற்கள்