ரமலான் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 15ஆம் தேதி), 60க்கும் மேற்பட்ட ‘டெலிவரூ’ ஓட்டுநர்களும் தொழிலாளிகளும் ஒரு நற்செயலில் இறங்கினர்.
அவர்கள் டாருல் தக்ரிம் ஜாமியா முதியோர் இல்லத்தின் 100 இல்லவாசிகளுடன், நோன்பு துறப்பிலும், ‘மக்ரிப்’ இரவு தொழுகையிலும் இணைந்தனர். அவர்கள் இல்லவாசிகளுக்கு உணவு விநியோகித்து ரமலான் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர்.
முன்னதாகவே வந்த தொண்டூழியர்கள், நோன்பு துறப்பு நேரம் வரை விளையாட்டுகள், உரையாடல்களின்மூலம் இல்லவாசிகளுக்குக் களிப்பூட்டினர். அவர்கள் நோன்பிருக்காத இல்லவாசிகளையும் இம்முயற்சியில் இணைத்து உணவு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியைத் தாண்டி இல்லத்தில் தொண்டுபுரிய ‘டெலிவரூ’ ஓட்டுநர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
‘டெலிவரூ’வின் #ByYourSide எனும் இவ்வாண்டின் இயக்கத்தின்கீழ் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
“இந்த இயக்கம், அன்பாக நடந்துகொள்வது, அனைவரையும் உள்ளடக்குவது ஆகிய நெறிகளைப் பிரதிபலிக்கிறது. நம் வயதான இல்லவாசிகள் சமூகத்தில் வகிக்கும் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது,” என்றார் ஜாமியா சிங்கப்பூர் துணை தலைவர்களில் ஒருவரான திரு சிராஜ் சல்மான்.
“இந்த புனிதமான மாதத்தில், மகிழ்ச்சியைப் பரப்ப விரும்பினேன். என் குழுவினர், ஓட்டுநர்களுடன் முதியோரும் கொண்டாட்டத்தில் மகிழ்ந்ததைக் கண்டு மனங்குளிர்ந்தேன்” என்றார் ‘டெலிவரூ’ செயல்பாடுகளின் தலைவர் கர்டாவ்யா போலா.
‘டெலிவரூ’, இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது இது முதன்முறையல்ல.
சென்ற ஆண்டு கொவிட்-19 தொற்றுகாலத்தின் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதால் ரமலானை முழு அளவில் கொண்டாட, ‘டெலிவரூ சிங்கப்பூர்’ #ComingBackTogether எனும் இயக்கத்தை நடத்தியது.
அப்போது டாருல் மக்மூர் பள்ளிவாசலுடன் இணைந்து நான்கு நாள்களில் பள்ளிவாசல்களுக்குச் சென்ற 1,000 பேரை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியது ‘டெலிவரூ’.
2021ல் ‘டெலிவரிங் ஸ்மைல்ஸ்’, 2022ல் ‘ஹீரோஸ் டு ஹீரோஸ்’ ஆகிய இயக்கங்களின்மூலம், வெளிநாட்டு ஊழியர்கள் நிலையத்துடனும் மற்ற அறநிறுவனங்களுடனும் இணைந்து நோன்பு துறப்புக்காக 7,600க்கும் மேற்பட்ட உணவுகளை வழங்கியது ‘டெலிவரூ சிங்கப்பூர்’.