நார்த் கோஸ்ட் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில், 250 வெளிநாட்டு ஊழியர்களுக்கு நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சனிக்கிழமை மார்ச் 16ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 8.10 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ எனும் உத்தரவாதம், பராமரிப்பு, ஈடுபாட்டுக் குழுவும் பங்காளிகளும் இணைந்து ஏற்பாடு செய்தன.
பங்காளித்துவ நிறுவனங்களிலிருந்து 70 தொண்டூழியர்கள் உணவைச் சமைக்கவும் பொட்டலமிடவும் விநியோகிக்கவும் உதவினர்.
பங்காளிகளில் இந்திய முஸ்லிம் சமூக சேவை சங்கம் (இம்சா), அன்-நூர் மற்றும் அன்-நஹ்தா பள்ளிவாசல்கள், எஃப்-ஃப்ரை, ஹோப் இனிஷியேட்டிவ் அலாயன்ஸ், லவ் அண்ட் கம்ஃபர்ட், மேரிகோல்ட் போன்ற அமைப்புகள் இணைந்தன.
“வெளிநாட்டு ஊழியர்களுக்காக நாம் பண்டிகைக் காலங்கள் மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் பங்காளிகளுடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.
“ரமலான் மாதம் சார்ந்த நிகழ்ச்சிகள் சிங்கப்பூர் முழுவதும் நடக்கின்றன. பல தங்குமிடங்கள், முதலாளிகள், அறநிறுவனங்கள், பள்ளிகள் ஆகியவை தாமாகவே முன்வந்து அவற்றுக்கு ஏற்பாடும் செய்கின்றன,” எனப் பாராட்டினார் ‘ஏஸ்’ குழுத் தலைவர் டங் யு ஃபாய்.
“‘இம்சா’ ஒவ்வொரு ரமலான் காலத்திலும் சமூக நோன்பு துறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது. சென்ற ஆண்டு, ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு வார இறுதியிலும் நோன்பு துறப்பு நிகழ்ச்சிகளை அடித்தள அமைப்புகளுடன் இணைந்து நடத்தினோம்.
“சென்ற ஆண்டு முதன்முறையாக மனிதவள அமைச்சுடன் இணைந்து உணவைத் தயாரித்து வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பொட்டலமிட்டு அனுப்பினோம்.
“ஆனால், இம்முறை ஊழியர்களுடனே அமர்ந்து, பேசி, நோன்பைத் துறந்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.” என்றார் 14 வயதிலிருந்து இம்சாவில் தொண்டூழியராக இருந்துவரும் இம்சா துணைத் தலைவர் அனிசா ஃபருவீன், 34.
“நாடு விட்டு இங்கு வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களுடன் குடும்பமாக நோன்பு துறப்பதில் ஒரு தனிச் சிறப்பு உள்ளது,” என்றார் ஆறு ஆண்டுகளாக இம்சாவில் தொண்டூழியம் புரிந்துவரும் முகமது முஜ்ஜம்மில், 37. அவரது மனைவியும் இரு மகன்களும் உணவு தயாரிப்பிலும் விநியோகத்திலும் பங்குபெற்றனர்.
நோன்பு துறப்புக்கான உணவு என்றாலும், முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு ஊழியர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.