உலகம் முழுவதும் மார்ச் 30ம் தேதி இட்லி தினம் கொண்டாடப்படுகிறது.
ஆரோக்கிய உணவுகளில் தலையாய இடம் பெற்றுள்ளது இட்லி என்று சொன்னால் அது மிகையில்லை.
எளிதில் செரிக்கக்கூடியது என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்த உணவாக விளங்குகிறது இட்லி. நோயாளிகளுக்கும் ஏற்ற உணவு இது என்பது கூடுதல் சிறப்பு.
தென்னிந்தியாவில் புகழ்பெற்ற உணவாக இருந்தாலும், எண்ணெய் அல்லது கொழுப்புச் சத்து மிகுந்த பொருள்கள் இல்லாமல் ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கப்படும் இட்லியின் புகழ் இப்போது உலகெங்கும் பரவியுள்ளது என்றே கூறலாம்.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் மார்ச் 30ஆம் தேதியை உலக இட்லி தினமாகக் கொண்டாடிவருகின்றனர். இதற்கு வித்திட்டவர் ‘மல்லிப்பூ இட்லி’ உணவக நிறுவனர் இனியவன் என்று கூறப்படுகிறது.
ரவா இட்லி, பொடி இட்லி, காய்கறி இட்லி, காஞ்சிபுரம் இட்லி, பிட்ஸா இட்லி எனப் பலவகைகள் இப்போது வலம்வந்தாலும், பாரம்பரிய முறையில் அரிசி, உளுந்தை ஊறவைத்து, அரைத்து, புளிக்கவைத்து மறுநாள் சுடப்படும் பஞ்சு போன்ற இட்லியுடன் சட்னி அல்லது சாம்பார் சேர்த்து உண்பது தனிச் சுவை என்கின்றனர் உணவுப் பிரியர்கள்.