சிறப்புக் கல்வி ஆசிரியர்களின் சம்பளம் இந்த ஆண்டுமுதல் படிப்படியாக உயரும். நாடாளுமன்றத்தில் இம்மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட இந்தச் செய்தியைக் கேட்டு மகிழ்ந்தோரில் 30 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் சிறப்புக் கல்வியாளர் சாந்தா ராமனும் ஒருவர்.
1993ல் இத்துறையில் சேர்ந்த திருவாட்டி சாந்தா ராமன், 54, தற்போது ‘மைண்ட்ஸ் உட்லண்ட்ஸ் கார்டன்ஸ்’ பள்ளியில் பாடப்பிரிவுத் தலைவராக இருக்கிறார்.
பலதரப்பட்ட தேவைகளுடைய மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி அவர்களின் வாழ்க்கையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதில் அலாதி இன்பம் காண்பதாக அடித்தளத் தலைவராகவும் செயல்படும் திருவாட்டி சாந்தா கூறுகிறார்.
சிறப்புக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கும் அவர்களது உதவியாளர்களுக்குமான சம்பளம், இவ்வாண்டு உயரவுள்ளது.
ஆசிரியர்கள் 12 விழுக்காடு வரை சம்பள உயர்வு பெறுவர். ஆசிரியர்களின் உதவியாளர்களின் சம்பளம் 15 விழுக்காடுவரை ஏற்றம் காணும். 2024க்கும் 2026க்கும் இடைப்பட்ட காலத்தில் அரசாங்க நிதியுதவி கட்டம் கட்டமாக உயரும்.
சிங்கப்பூரில் தற்போது 1,700 ஆசிரியர்களும் 800 உதவியாளர்களும் பணியாற்றுகின்றனர்.
கல்வி அமைச்சின் இந்த முடிவு, சிறப்புத் தேவை கல்வியாளர் பணியின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் நல்லதொரு படி என்று திருவாட்டி சாந்தா கூறினார்.
“சம்பள மறுஆய்வு, நல்ல திறனாளர்களை ஈர்க்க உதவும். மாணவர்கள் அதனால் ஆதாயம் அடைவர்,” என்று அவர் கூறினார்.
சிறப்புத் தேவை ஆசிரியர் துறைக்கான முதலீடு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பது இவர் விருப்பம்.
“ஆசிரியர்கள் தங்கள் நிபுணத்துவத்தை மேம்படுத்தும் வாய்ப்புகளைப் பெறவேண்டும். மாணவர்களுக்கான வசதிகளும் வளங்களும் மேம்படவேண்டும்,” என்று அவர் கூறினார்.
சிறப்புத் தேவை மாணவர்களைப் பராமரிப்பவர்கள், தங்களது வேலையால் ஏற்படும் மன உளைச்சலைச் சமாளிப்பதற்குக் கூடுதல் ஆதரவும் தேவை என்பதும் அவர் கருத்து.
“மாணவர்களின் வாழ்க்கையில் இவர்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றனர். பராமரிப்பாளர்கள் நலமாக இருந்தால் மாணவர்களின் நலன் மேம்படும்,” என்று திருவாட்டி சாந்தா கூறினார்.