மதிப்பெண்களைத் தாண்டி, ஆர்வமுள்ள துறையில் கவனம் செலுத்தினால் உறுதியாக வெற்றி கிட்டும் என நம்புகிறார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்மாணவர் மித்ரா ரென் சச்சிதானந்தன்.
கணினிப் பொறியியல், வணிகத் துறையில் இளநிலைப் பட்டம் பயிலும் 25 வயதான மித்ரா, ‘சேஞ்ச் எக்ஸ்’ எனும் நீடித்த நிலைத்தன்மை நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
சிறு வயதில் இயற்கையுடன் நேரம் செலவிடுவது, ‘கயாக்கிங்’ படகு வலித்தல், முக்குளித்தல் ஆகிய நீர் விளையாட்டுகளில் ஈடுபட தன் பெற்றோர் ஊக்குவித்ததை நினைவுகூர்ந்த இவர், அதனால், இயல்பாகவே இயற்கைமீது தீராக் காதல் ஏற்பட்டதாகக் கூறுகிறார்.
உணவை வீணாக்காமலிருப்பது, பிளாஸ்டிக் உள்ளிட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பொருள்களைத் தவிர்ப்பது, வாங்கிய பொருளை விரைவில் தூக்கிப்போடாமல் முடிந்தவரை பயன்படுத்துவது உள்ளிட்ட நீடித்த நிலைத்தன்மைக்கு வழிவகுக்கும் பல பழக்கங்கள் இயல்பிலேயே தங்கள் குடும்பத்தினரிடம் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் மித்ரா.
பொறியியல் படிப்பில் சேர்ந்தபின், உணவகங்களில் வீணாகும் உணவு குறித்த உண்மையான கவலை தனக்கு ஏற்பட்டதால், அதைத் தவிர்க்க தனது தொழில்நுட்பக் கல்வி எந்த வகையில் உதவும் எனச் சிந்திக்கத் தொடங்கினார் இவர்.
இதன் விளைவாக, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உணவு வீணாவதைத் தவிர்க்கும் முயற்சியில் மித்ரா இறங்கியுள்ளார். உணவகங்களின் கடந்த காலத் தரவுகளின் அடிப்படையில் எதிர்காலத் தேவைகளை முன்கூட்டியே கணிக்கும் அமைப்பையும் இவர் உருவாக்கி வருகிறார்.
அதன் அடிப்படையில், எவ்வளவு மூலப்பொருள்கள் வாங்க வேண்டும், எவ்வளவு சமைக்க வேண்டும் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டால், அதிகளவு உணவு சமைக்கப்பட்டு வீணாவது, கையிருப்புச் சமையல் பொருள்கள் பயன்படுத்தாமல் வீணாவது ஆகியவை தவிர்க்கப்படும் என்கிறார் மித்ரா.
இத்தகைய நேரடிப் பயன்கள் மட்டுமின்றி, மிகையான உணவு சமைக்கப் பயன்படும் தண்ணீர், எரிபொருள் எனப் பலவற்றை வீணாக்காமல் காக்கலாம் என்றும் இவர் சொல்கிறார்.
ஆண்டிறுதிக்குள் இந்த அமைப்பை நிகழ்நேரச் சோதனைக்கு தயார்செய்யும் நோக்கில் நடைபோட்டு வரும் இவருக்கு, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம், பாடம் தாண்டிய திறன்களை அங்கீகரிக்கும் வகையில் உபகாரச் சம்பளம் வழங்கியுள்ளது.
இந்த உபகாரச் சம்பளம் தனக்கும் தன்னைப் போன்ற மேலும் சிலருக்கும் வழங்கப்பட்டிருப்பது, மதிப்பெண்களால் மட்டும் வெற்றி கிட்டிவிடாது என்பதற்கு எடுத்துக்காட்டு என்கிறார் மித்ரா.
வெவ்வேறு துறைகளில் திறமையும் ஆற்றலும் கொண்ட மாணவர்கள் அங்கீகரிக்கப்படுவது பெருமையாக இருப்பதாகக் கூறிய இவர், சாதிக்க வேண்டும் என்கிற ஊக்கத்தை மற்ற மாணவர்களுக்கு இது தருவதாகவும் சொன்னார்.