சென்னையில் நடக்கவுள்ள ஜீ தமிழ் ‘சரிகமப சீனியர்ஸ்’ 4ஆம் பருவத்துக்கான மாபெரும் தேர்வுச் சுற்றுகளுக்கு சிங்கப்பூரின் துர்கா வைஷ்ணவி வெங்கடேஸ்வரன், 25, தகுதிபெற்றுள்ளார்.
சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தாதியாகப் பணிபுரியும் வைஷ்ணவி, ஒரு தீவிர ‘சரிகமப’ ரசிகர். அதன் காரணமாக மார்ச் 31ஆம் தேதி, கோலாலம்பூரின் ‘விஸ்மா துன் சம்பந்தன்’ வர்த்தக மையத்தில் நடந்த முதற்கட்டத் தேர்வுச் சுற்றுகளில் அவர் ஆவலோடு பங்குபெற்றார்.
200க்கும் மேற்பட்ட போட்டியாளர்களின் மத்தியில், மலேசியாவில் நடந்த இரு சுற்றுகளையும் வெற்றிகரமாகக் கடந்த அவர், மலேசியாவின் திவ்யா சந்திரன், 23, அருளினி ஆறுமுகம், 22, ஆகியோருடன் சென்னையின் மாபெரும் தேர்வுச் சுற்றுகளில் பங்குபெறுகிறார்.
‘யார் அந்த ஸ்டார்’ 2020 போட்டியில் ‘சின்னக் குயில்’ சித்ராவின் முன்னிலையில் பாடி, காலிறுதிச் சுற்று வரை முன்னேறிய வைஷ்ணவி, அப்பொழுதிலிருந்தே சங்கீதம் கற்கவும் தொடங்கினார்.
மலேசியாவில் நடந்த தேர்வுச் சுற்றுகளை ஏப்ரல் 27, 28ஆம் தேதிகளில் சிங்கப்பூர் நேரப்படி இரவு 7 மணிக்கு ஜீ தமிழ் ஆசிய பசிபிக் ஒளிவழியில் காணலாம். ‘சரிகமப சீனியர்ஸ்’ நான்காம் பருவம் ஜீ தமிழ் ஒளிவழிகளில் மே 4ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கும்.