துர்கா மணிமாறனின் ‘திரிபடாக்கா’ நடனக்குழு வழங்கும் ‘மகாலயா’ எனும் பரதநாட்டிய நிகழ்ச்சி, மே 11ஆம் தேதி இரவு 7 மணிக்கு ‘அலியான்ஸ் ஃபிரான்செஸ்’ அரங்கில் நடைபெறவுள்ளது .
மனித உடலை ஆத்மா அடங்கியுள்ள கோயிலாகக் கருதுவதே ‘மகாலயா’ என்ற பெயருக்குக் காரணம் என்கிறார் துர்கா.
வேதாந்தம் விளக்கும் உடலின் பஞ்ச கோஷங்களைப் பற்றிய நடனம் இது. குருக்ஷேத்திரப் போரின் நாயகர்கள் அர்ஜுனன், கிருஷ்ணர் வாயிலாக இந்நடனம் பஞ்ச கோஷங்களைப் படைக்கிறது.
குருக்ஷேத்திரப் போர், மனிதன் தன் உண்மை சுபாவத்தை உணரும் மனப் போராட்டத்தைச் சித்திரிக்கிறது. அதற்கு முதற்படி பஞ்ச கோஷங்கள் வர்ணிக்கும் சுயவிழிப்புணர்வே என்ற அடிப்படையில் இந்த நடனம் அமைகிறது.
பஞ்ச கோஷங்களில் மூன்றைத் திருமூலரின் திருமந்திர வரிகளைக் கொண்டு இந்நடனம் அமைக்கப்பட்டுள்ளது.
நடனத்தின் மற்றொரு கூறாக, தமிழர்களின் தற்காப்புக் கலையிலிருந்து வந்த மெய்ப்பாடம் இடம்பெறும். போருக்குச் செல்வதற்கு முன்னால் உடலைத் தயார்ப்படுத்துகிறது மெய்ப்பாடம்.
“பஞ்ச கோஷங்களை நேரடியாகப் படைப்பது கடினம். அதனால் மக்கள் அறிந்த குருக்ஷேத்திரப் போர், திருமந்திர வரிகள் மூலம் நாங்கள் படைக்கிறோம்.”
“மேலும், சிங்கப்பூரில் எந்த நடனத்திலும் திருமந்திரத்தையோ மெய்ப்பாடத்தையோ பயன்படுத்தி நான் கண்டதில்லை,” என்றார் துர்கா.
நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளை https://tinyurl.com/MahalayaDance இணையத்தளத்தில் வாங்கலாம்.