கர்நாடக இசை ஆர்வலர்களால் இவ்வாண்டு தொடங்கப்பட்ட சிங்கை பல்லிய அரங்கு, இனி கர்நாடக இசைப் போட்டியோடு இணைந்த கச்சேரியை ஆண்டுதோறும் நடத்தவுள்ளது.
இயோ சூ காங் எம்ஆர்டி நிலையம் அருகே உள்ள அடித்தள மன்றத்தில் விசாக தினத்தன்று (மே 22) நடைபெற்ற அதன் தொடக்க விழாவில், 40க்கும் மேற்பட்ட பிரிவுகளில் ‘சிங்கைப் பல்லிய விருது’ என்ற பெயர்கொண்ட கர்நாடக இசைப் போட்டிகள் நடைபெற்றன.
அவற்றில் ஐந்து வயதுச் சிறுவர் முதல் பெரியவர் வரை 150 போட்டியாளர்கள் பங்குபெற்றனர். சிறப்பாகச் செய்த சிறுவர்கள் பின்னர் மேடையில் பாடினர்.
அன்று மாலை ‘சேட்டாஸ்’ இணை நிறுவனரும் வயலின் வித்துவானுமான பம்பாய் வி ஆனந்த் மற்றும் குழுவினர் படைத்த இசைக் கச்சேரி நடைபெற்றது.
மிருதங்கத்திற்கு ஆர்.சுப்பிரமணியம், கடத்திற்கு மகேஷ் பரமேஸ்வரன், வயலினுக்கு வேதக்ஞா நரசிம்ஹா என பிரபல இசைக் கலைஞர்கள் பக்கவாத்தியம் வாசித்தனர்.
ஒன்றாகவும் தனித்தனியாகவும் வாசித்து இசைக் கலைஞர்கள் பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்து கரகோஷம் பெற்றனர்.
“சிங்கைப் பல்லிய அரங்கை தொடங்குவதற்கு மூன்று முக்கிய நோக்கங்கள் இருந்தன. போட்டிகளை நடத்தி தொடர் கற்றலை ஊக்குவித்தல், திறன்களைக் கண்டறிந்து மேடையேற வாய்ப்பளித்தல், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே கருத்துப் பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும் வளர்ச்சிக்கு ஆதரவான சூழலை ஏற்படுத்துதல்,” என்றார் சிங்கைப் பல்லிய அரங்கின் இணை தோற்றுநர் ராஜ கோபால்.
2012ல் ஆக அதிகமான தப்லா கலைஞர்கள் ஒன்றாக வாசித்தல், 2022ல் ஆக அதிகமான கலைஞர்கள் பஞ்சரத்தின கீர்த்தனைகளை ஒன்றாக வாசித்தல் ஆகிய சாதனைகளுக்காக மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற மிருதங்கக் கலைஞர் ஆதித்யா ராஜ்குமார், 20, சிறப்பிக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியின் முடிவில் போட்டியின் வெற்றியாளர்களுக்கு மொத்தம் 108 பரிசுகள் வழங்கப்பட்டன.
“இதுவே என் முதல் போட்டி. இதற்காக கடந்த ஒரு மாதமாகப் பயிற்சிசெய்தேன். நான் நான்கு ஆண்டுகளாகப் புல்லாங்குழல் கற்றுள்ளேன்,” என்றார் புல்லாங்குழல் வாசித்தல் போட்டியில் மூன்று பரிசுகளைப் பெற்ற புனீத் கிஷோர், 14.

