அக்டோபரில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளை (பிசிஎஃப்) ஜூன் 25, 26ஆம் தேதிகளில் குவோகோ டவரின் வெளிப்புறத்தில் ‘பொசம் படிஸ்’ எனும் சாலை காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை இளம் பெண் மற்றும் ஆண் ஊழியர்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு மத்திய வர்த்தக வட்டாரத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா இதில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மார்பகப் புற்றுநோயைப் பற்றி தகவல் அளிக்கும் பல்வேறு விளக்கப்படங்களும் சுவரொட்டிகளும் காண்பிக்கப்பட்டன. மேலும், பிசிஎஃபுடன் இணைந்து பங்காளிகளாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நிறுவனங்கள் கூடங்கள் அமைத்து வெவ்வேறு பொருள்களை விற்றதோடு பல்வேறு சேவைகளையும் வழங்கின. விற்பனை மூலம் திரட்டப்பட்ட நிதியில் ஒரு பங்கு பிசிஎஃபிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
‘பொசம் படிஸ்’ என்று அழைக்கப்படும் தொண்டூழியர்களும் பிசிஎஃப் உறுப்பினர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மார்பகப் புற்றுநோய் குறித்து வெளிப்படையான கலந்துரையாடலை பொதுமக்களிடையே ஊக்குவித்தனர்.
பொதுமக்களும் ‘பொசம் படி’யாக சேர்வதற்கு நேரடியாக பதிவு செய்துகொள்ள கூடம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. பதிவு செய்தவர்களுக்கு $150 மதிப்புள்ள அன்பளிப்புப் பை வழங்கப்பட்டது.
இன்றைய காலகட்டத்தில் இளம் பெண்கள் பலருக்கும் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதாகவும் இதை அறியாமல் பலர், அந்நோய் நடுத்தர வயதுப் பெண்களை மட்டுமே பாதிக்கும் என்ற தவறான மனப்போக்கை கொண்டுள்ளனர் என்றும் பிசிஎஃபின் பொது ஆதரவு, தகவல் தொடர்புத் தலைவர் நடாலி லாவ் சொன்னார்.
“தக்க நேரத்தில் பரிசோதனை செய்வது உயிரைக் காக்கும் என்ற முக்கியக் கருத்தை இளம் பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் அறிய வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
சில நேரங்களில், கணவர்தான் தம் மனைவிக்குப் பிரச்சினை இருப்பதை முதலில் கண்டுபிடித்ததாக பிசிஎஃப் உறுப்பினர்கள் பலரும் தன்னுடன் பகிர்ந்ததாக குமாரி லாவ் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் பொதுமக்கள் தாங்களாக முன்வந்து குறித்த நேரத்தில் உடல் பரிசோதனையும் மாதாந்திர சுய பரிசோதனையும் செய்துகொள்ள இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஒரு நினைவூட்டலாக அமையும் என நம்புகிறோம்,” என்றார் அவர்.