“தேசிய தின அணிவகுப்பில் பாடல் படைப்பது என்பது உண்மையிலேயே அருமையான அனுபவம். சிங்கப்பூர் மக்கள் இத்தனை பேர் தேசிய தினக் கொண்டாட்டத்திற்காக ஒன்றாகத் திரள்வதைக் காணும்போது, அவர்களது உற்சாகத்தை உணரமுடிகின்றது. இது தனிச்சிறப்புமிக்கது,” என்றார் என்டியுசி பே தேசிய தின அணிவகுப்புக் கொண்டாட்டங்களில் ‘ராப்’ பாடல் படைத்த யங் ராஜா.
“பல்லின மக்கள் ஒன்றாகக் கூடித் தேசிய தினத்தைக் கொண்டாடியதைக் காணும்போது மகிழ்ச்சியாக இருந்தது.” என்றனர் இரண்டாம் முறையாக ஒன்றாகத் தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொண்ட ஒலி ஒளி நிபுணர் ஜெய் குமார், 30 மற்றும் பள்ளி ஆலோசகர் ஷாமினி, 30.
“எங்கள் தோழி தேசிய தின அணிவகுப்பின் இறுதி அங்கத்தில் ‘ஹரைசன்’ பாடலைப் பாடினார். அவரை ஆதரிக்க வந்தோம்.” என்றார் கிரிஷ் நடராஜன், 29.
முதல் ஆண்டாக தேசிய தின அணிவகுப்புக்கு வந்திருந்த அமிதா, 54, அவரது 25 வயது மகன் குஷல், இருவரும் ஒளியூட்டும் கைக்கடிகாரத்துடன் தேசிய தினப் பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர்.
“அனைவரது தேசப் பற்றையும் இவ்வாண்டு தேசிய தினம் வெளிப்படுத்தியது. அனைவருடனும் ஒன்றாக இந்த உணர்வில் மிதக்கும்போது புல்லரிக்கிறது.” என்றார் அமிதா.
தங்களது இரட்டை ஆண் குழந்தைகளான ஆதன், ஆரணனுடன் இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பைப் பார்க்க வந்திருந்தனர் சத்தியசிவன், 35 - துர்காஷினி, 32, இணையர்.
“இருவருக்கும் இன்னும் இரண்டு வயதுகூட பூர்த்தியாகவில்லை என்றாலும் எதிர்காலத்தில் அவர்கள் தேசிய சேவை ஆற்ற வேண்டிய நாள் கட்டாயம் வரும். நாட்டுப்பற்றை இளவயதிலேயே அவர்கள் உணர வேண்டும் என்பதால் அவர்களைத் தேசிய தின அணிவகுப்புக்கு அழைத்து வந்தோம். முதன்முறையாக வாணவேடிக்கைகளைக் கண்டு இருவரும் மகிழ்ந்தனர்,” என்றார் சத்தியசிவன்.