சர்க்கரைவள்ளிக் கிழங்கு நீண்ட நாள் நோயின்றி உயிர் வாழ உதவும் அருமையான உணவுப்பொருள் என்று இந்தியாவின் பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையின் தலைமை ஊட்டச்சத்து வல்லுநர் சைத்ரா சந்தீப் தெரிவித்துள்ளார்.
ஊதா நிறச் சர்க்கரைவள்ளிக் கிழங்குகள் உடலில் உள்ள அணுக்களைப் பாதுகாக்கும் ‘ஆன்டிஆக்சிடன்ட்’ எனும் பொருளை அதிகம் கொண்டுள்ளதாகப் பல்வேறு ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
மற்ற நிறங்களில் உள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கிலும் ‘ஆன்டிஆக்சிடன்ட்’ அதிக அளவில் உள்ளது.
எடுத்துக்காட்டாக, ஆரஞ்சு நிறச் சர்க்கரைவள்ளிக் கிழங்கு கண் பிரச்சினைகளைச் சரிசெய்ய உதவும். மூத்தோரிடையே கண் பிரச்சினை அக்கறைக்குரிய ஒன்றாக உள்ளது.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடலில் உள்ள வீக்கங்களைக் குறைக்கவும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. இதனைச் சிறுவயதிலிருந்தே உட்கொண்டால் அது கணையத்தையும் பாதுகாக்கக்கூடும்.
பிள்ளைகளுக்கு நல்ல உணவு
நல்ல மாவுச்சத்து நிறைந்த உணவுப் பொருளான சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வளரும் பிள்ளைகளுக்கு அருமையான உணவு.
‘சீரியல்’ போன்ற காலை உணவுகள் பதப்படுத்தப்பட்ட மாவுச்சத்துகளைக் கொண்டுள்ளன. அவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
இருப்பினும், நல்ல மாவுச்சத்துகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கும்; உடல் எடையைக் குறைக்க உதவும்; நீண்ட காலத்திற்கு ஒட்டுமொத்த உடல்நலத்தையும் வலுப்படுத்தும்.
தொடர்புடைய செய்திகள்
சர்க்கரைவள்ளிக் கிழங்கை எவ்வாறு சமைப்பது?
சர்க்கரைவள்ளிக் கிழங்கை நீரில் வேகவைத்து, பின் ஆறவைத்து உட்கொள்வதே சிறந்தது. அதனை அடுப்பிலும் வேகவைத்து எடுக்கலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கை அதிக நேரத்திற்குச் சமைத்தால் அவற்றின் ‘பேட்டா கெரட்டின்’ அளவு குறையும்.
அதனால், தோலை அகற்றாமல் அவற்றை குறைவான நேரத்திற்குச் சமைப்பது நல்லது என்று சைத்ரா கூறுகிறார்.
எப்போது, எவ்வளவு சாப்பிடலாம்?
சர்க்கரைவள்ளிக் கிழங்கை 100 கிராம் என மிதமான அளவில் உட்கொள்ளவேண்டும். நீரிழிவு பாதிப்பு இருப்போர் 50 கிராம் மட்டுமே சாப்பிடவேண்டும். அவற்றை வாரத்திற்கு இரண்டு முறை உட்கொள்ளலாம். காலை உணவாக உட்கொள்வது நல்லது. நண்பகல் உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், இரவு நேரங்களில் அதனைத் தவிர்ப்பது நல்லது.


