மதுரை நகரின் பாரம்பரியச் சுவையுடன், சுவாரசியமான புதிய உணவு வகைகளை உள்ளடக்கிய ‘குமார் மெஸ்’ உணவகத்தின் மூன்றாவது கிளை பிப்ரவரி 5ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது.
அப்பர் டிக்சன் ரோட்டிலும், கிளமெண்டி வட்டாரத்திலும் இரு கிளைகள் அமைந்துள்ள நிலையில், தற்போது வெர்டுன் சாலையில் மூன்றாவது கிளை திறக்கப்பட்டுள்ளது.
இக்கிளையை, முஸ்தஃபா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முஸ்தாக் அகமது சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுத் திறந்துவைத்தார்.
“சிங்கப்பூரில் உள்ள மக்களுக்கு மதுரை மண்ணின் சுவையைக் கொண்டு சேர்க்கவும், இந்தியாவிலிருந்து வந்து இங்கு பணியாற்றுவோர்க்குச் சொந்த ஊரின் நினைவைக் கொடுக்கவும், பல நாடுகளிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளுக்குத் தனித்துவமான உணவை அளிக்கவும் விரும்பி இந்த உணவகத்தை தொடங்கினோம்,” என்றார் குமார் மெஸ் நிறுவனர் மாணிக்கம் குமரேசன், 41.
“முஸ்தஃபா கடைத்தொகுதிக்கு அருகில் அமைந்துள்ளதால், அனைத்துத் தரப்பினரும் வருவார்கள், ஆதரவளிப்பார்கள் என நம்புகிறோம்,” என்றார் அவர்.
திரைப்பட நடிகர் வடிவேலுவின் பிரபல வசனத்தின் அடிப்படையில் அமைந்த ‘அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்’, வாளியில் வழங்கப்படும் ‘கைதி’ (திரைப்பட பாணி) கோழி பிரியாணி ஆகியவை இங்கு சிறப்பு என்றார் திரு குமரேசன்.
மேலும், மதுரை நகரின் சிறப்பான ‘பன்’ பரோட்டா, ‘பன் பட்டர்’, ஜிகர்தண்டா, மட்டன் சுக்கா, பருத்திப்பால் ஆகியவற்றையும் மக்கள் சுவைக்கலாம் என்றார்.
சைவப் பிரியர்களுக்காக, காரசாரமான ‘புரூஸ் லீ பேபிகார்ன்’ வறுவல் அறிமுகம் கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஏறத்தாழ 60 பேர் ஒன்றாக அமர்ந்து உணவுண்ணும் வகையில் மூன்றாவது கிளை உணவகம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், காலை 11 மணி முதல் இரவு 1 மணி வரை சேவை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார் குமரேசன்.

