வலசை போகும் பறவைகள், புலம்பெயர்ந்து வரும் பறவைகள், உள்ளூர்ப் பறவைகள் எனப் பல பறவை இனங்களைச் சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் கண்டு மகிழலாம்.
பூங்காக்களுக்கும் இயற்கைப் பாதுகாப்பு வனப்பகுதிகளிலும் செல்வதன் மூலம் இப்பறவைகளைப் பற்றிப் பல தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
குன்றின்மேல் நின்றோ கூண்டின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைவிடங்களுள் ஒதுங்கிக்கொண்டோ, இயற்கையோடு பறவைகளைக் கண்டு மகிழ ரைஃபிள் ரேஞ்ச் இயற்கைப் பூங்காவிற்குச் செல்லலாம்.
ஆகஸ்ட் முதல் ஏப்ரல் வரை உள்ளூர் பறவையினங்களையும் புலம்பெயர்ந்து வரும் பறவையினங்களையும் ஆராய சுங்கை பூலோ ஈரநிலக் காப்பகம் சரியான தேர்வாக விளங்கும்.
சிங்கப்பூரின் பழைமையான நீர்த்தேக்கமான மெக்ரிச்சி நீர்த்தேக்கத்தில் 11 கிலோமீட்டர் நீளமுடைய நடைபாதையில் நடைப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள பறவைகளை ரசிக்கலாம்.
சிங்கப்பூரின் மிக உயர்ந்த இயற்கை முனையில் நின்று, பறவைகளோடு பல்லுயிரியல் நிறைந்த மழைக்காட்டையும் இயற்கை வளங்களையும் அனுபவிக்க புக்கிட் தீமா இயற்கைப் பாதுகாப்பு வனப்பகுதிக்கு பயணம் மேற்கொள்ளலாம்.
பறவை ஆர்வலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்:
- பறவை இனங்கள், வழக்கமான வாழ்விடங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்வது பறவைகளை வேறுபடுத்தவும் கண்டறியவும் உதவும்.
- பறவைகள் பெரும்பாலும் காலை நேரத்தில் சுறுசுறுப்பாக இருப்பதால், அந்நேரத்தில் பூங்காக்களுக்குச் செல்வதன் மூலம் பல வகையான பறவைகளைக் காணலாம்.
தொடர்புடைய செய்திகள்
- பறவைகள் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில், பச்சை அல்லது பழுப்பு நிற ஆடைகளை அணிவது சிறப்பு.
- பறவைகளைத் தொந்தரவு செய்யும் வகையில் சத்தம் போடுவதையும் கூடு கட்டும் பறவைகளின் இருப்பிடத்தை இணையத்தில் பதிவிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
- பறவைகளை உன்னிப்பாகக் கவனிக்கத் தொலைநோக்கிகளையும் அழகிய தருணங்களைப் படம்பிடிக்க புகைப்படக்கருவியையும் எடுத்துச் செல்லலாம்.
- சென்ற இடங்கள், பார்த்த பறவை இனங்கள் என உங்கள் அனுபவங்களைப் பதிவு செய்துகொள்வது முக்கியம்.