‘டிரஸ்ட் பேங்க்’ மின்னிலக்க வங்கி தொடங்கி செப்டம்பர் 1ஆம் தேதியுடன் ஈராண்டுகள் நிறைவடைந்தன.
ஏறத்தாழ 800,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள இவ்வங்கி, அதிவேக வளர்ச்சியைக் கொண்டுள்ள மின்னிலக்க வங்கிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
மூன்று நிமிடக் கணக்குப் பதிவு நேரம், முழுமையான மின்னிலக்கக் கடன்பற்றுத் துணை அட்டை பயன்பாடுகளினால் கிடைக்கும் வெகுமதிகள் ஆகியவற்றால் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்ற இந்த வங்கி இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டுப் பல புதிய திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்துள்ளது.
முற்றிலும் புதுமையான ‘கேஷ்பேக்’ அட்டையை அறிமுகம் செய்துள்ளது ‘டிரஸ்ட்’ வங்கி. பல்வேறு வகையான ‘கேஷ்பேக்’ அட்டைகளை ஒப்பிடுகையில் எளிய பயனர் அனுபவத்தை அளிக்கும் வெளிப்படைத்தன்மை நிறைந்த அட்டையாக இது விளங்கும் என்றது வங்கி.
வாடிக்கையாளர்கள் விரும்பும் செலவின வகைகளுக்கு 15 விழுக்காடு வரை வெகுமதிகளை இந்த அட்டை வழங்கும். தவிர, அகோடா, கால்டெக்ஸ், சிடிஜி, டெலிவரூ, கேஎஃப்சி உள்ளிட்ட பங்காளித்துவ நிறுவனங்களின் சேவைகளுக்கு 20 விழுக்காடு வரை சலுகைகள் பெறலாம்.
வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை வங்கியில் இணையும் புதிய வாடிக்கையாளர்கள் எல்லாச் செலவினங்களுக்கும் 1.5 விழுக்காடு ‘கேஷ்பேக்’ பெறுவார்கள் என்று வங்கி அறிவித்துள்ளது.
குறிப்பாக ‘டிரஸ்ட் பேங்க்’ கடன்பற்று அட்டை தொடர்ந்து எவ்வித வருடாந்தரக் கட்டணமும் இன்றி செயல்படும். வெளிநாடுகளுக்குக் கூடுதல் கட்டணம் இன்றிப் பணம் அனுப்பும் சேவைகளும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு $1 மில்லியன் மதிப்புள்ள இலவசப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை வங்கியின் கடன்பற்று அட்டையை வாங்குவோர்க்கும் நண்பர்கள், உறவினர்களை வாடிக்கையாளர்களாக இணைப்பவர்களுக்கும் பரிசுக் குலுக்கலில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி, குலுக்கல் முறையில் வெற்றி பெறும் வாடிக்கையாளர்க்குப் பரிசு வழங்கப்படும். மேலும், கடன்பற்று அட்டையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 3,000 வெள்ளி வரை மின்னிலக்க ‘ஸ்கிராட்ச் கார்ட்’ வழங்கப்படும்.

