முன்பெல்லாம் புத்தாண்டு என்றாலே வெளிநாட்டு ஊழியர் வையாபுரி கிருஷ்ணன், 37, லிட்டில் இந்தியாவிற்குச் சென்று நண்பர்களுடன் மதுபானம் அருந்துவார்.
ஆனால் தம் 14 வயது மகளுக்கும் மூன்று வயது மகனுக்கும் முன்னுதாரணமாக இருக்கவும் அவர்களது கல்விச் செலவுகளுக்காகப் பணம் சேமிக்கவும் மதுப் பழக்கத்தைக் கைவிட்டார் கிருஷ்ணன்.
“சென்ற ஆண்டு நான் என் குடும்பத்துடன் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றேன். ஊரில் பட்டாசு வெடித்தோம். இவ்வாண்டு நான் இங்கு வந்துவிட்டதால் யாரும் எதுவும் கொண்டாடவில்லை,” என சற்று வருத்தத்துடன் கூறினார் கிருஷ்ணன்.
கிராஞ்சி பொழுதுபோக்கு நிலையத்தில் இதுவரை காணாத அளவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் அவரது மனவருத்தத்தைச் சற்று போக்கின. மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ குழு, வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளிலும் ஆறு பொழுதுபோக்கு நிலையங்களிலும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
“இங்கு சுவையான உணவு, கூடுதலான குளிர்பானங்கள்கூட தருகிறார்கள். சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு சிறப்பாக நடைபெற்றதாகவும் நண்பர்கள் கூறினர்,” என்றார் கிருஷ்ணன்.
முதன்முறையாக, கிராஞ்சி பொழுதுபோக்கு நிலையத்தின் அருகிலிருந்த திறந்தவெளியில் வாணவேடிக்கைகள் வெடித்து புத்தாண்டு வரவேற்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்காலிப் பாடகர் மோனீர் கான் பாட, வெளிநாட்டு ஊழியர்கள் பேரின்பத்தில் ஆடி கூக்குரலிட, பின்னிரவு 1 மணி வரை அவ்விடமே திருவிழாக்கோலம் பூண்டது.
கொட்டும் மழையால் சந்தேகமான தொடக்கம்
மாலை 6 மணியளவில் கனமழை பெய்ததால், வாணவேடிக்கைகள் இடம்பெறுமா என்பது சற்று சந்தேகமாக இருந்தது.
ஆனால், மழையால் கொண்டாட்ட உணர்வை நனைக்கமுடியாது என்ற தீர்மானத்தோடு, வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடங்கள், வேலையிடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகளில் வந்திறங்கினர்.
தொடர்புடைய செய்திகள்
இரவு 7 மணியளவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான விளையாட்டுகள் தொடங்கிவிட்டன. பெரிய திரையில் ‘அமரன்’ படம் திரையிடப்பட்டது, ஊழியர்களின் இன்பத்தை அதிகரித்தது.
இசை, நடனத்துடன் சூடுபிடித்த கொண்டாட்டம்
கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமான இசை, நடன நிகழ்ச்சி சற்று தாமதமாக இரவு 7.30 மணியளவில் தொடங்கியது. தமிழ்நாட்டுப் பாடகர்கள் அருள் பிரகாசம், செளந்தரியா, மக்களுக்குப் புத்துணர்ச்சியூட்டினர்.
நேப்பாளத்தைச் சேர்ந்த நிகழ்ச்சி நெறியாளர், மலேசிய நடனக் குழுவின் ஆடல்கள் மேடையை அதிரவைத்தன. வெளிநாட்டு ஊழியர்களுக்கு இடையே நடனப் போட்டிகளும் நடைபெற்றன.
மோனீர் கானுக்கு அமோக வரவேற்பு
இரவு 10.30 மணி வரை தமிழ்ப் பாடல்களையே கேட்டுவந்த பங்ளாதேஷி ஊழியர்கள், பிரபல பெங்காலிப் பாடகர் மோனீர் கானை ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
அவர் செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் பாடிமுடித்துவர தாமதமாகிவிட்டது. மோனீர் கான் வருவதைக் கேட்டதும் ஊழியர்கள் திறந்தவெளித் திடலுக்கு ஓடினர். இரவு 11.20 மணிக்கு அவரும் பங்ளாதேஷி நகைச்சவை நடிகர் ஹருன் கிசிங்கரும் வந்தனர். நள்ளிரவு 12.20 மணி வரை அவர்கள் ஊழியர்களை மகிழ்வித்தனர்.
நெடுநேரமாகத் தமிழ்ப் பாடல்கள் கேட்காததால் தமிழ் ஊழியர்கள் சிலர் ஆவேசமடைந்தனர். அதனால், மோனீர் கான் விடைபெற்றதும் தமிழ்ப் பாடல்கள் மீண்டும் ஒலித்தன.
2025ல் ஆசை, லட்சியம்
‘ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் ஏஸ்’ தொண்டூழியர் அலி முகமது அய்யுப், மோசடித் தடுப்பு, தவறான பழக்கங்களிலிருந்து மீள்தல் போன்றவற்றில் தாம் பெற்ற பயிற்சி மூலம் சக ஊழியர்களுக்கு உதவி வருகிறார்.
“நான் சிங்கப்பூரில் பணியாற்றத் தொடங்கியபோது பல விஷயங்களில் சிரமப்பட்டேன். சம்பாதித்த பணம் குடும்பச் செலவுகளுக்கே போய்விட்டது. 2025க்கான என் லட்சியம், கூடுதலாக சேமிப்பதே,” என்றார் அவர்.
“பாதுகாப்பாக பணியாற்றி வீடு திரும்பவேண்டும். 2025ல் அதுவே என் ஆசை,” என்றார் ராஜாமணி சந்தோஷ்குமார்.

