எல்லாருக்கும் மதிப்பளிக்கும் சமுதாயத்தை உருவாக்கும் முயற்சி

இளையர்-முதியோர் உறவுப்பாலமாக விளங்கும் அமைப்பு

2 mins read
18728319-54fc-4915-8615-eb7f5629d85e
இளையர்களை முதியோர் பராமரிப்பில் ஈடுபடுத்தும் ‘டிரைஜென்’ தொண்டூழிய அமைப்பு. - படம்: டிரைஜென்
multi-img1 of 2

இளையர்கள் ஆற்றும் சின்னஞ்சிறு உதவிகளும் பலரது வாழ்க்கைக்கு மருந்தாக இருக்கும்.

முதுமையில் தனிமையில் வாடும் பலருக்கு, எளிதாகப் பிறர் தரக்கூடிய புன்சிரிப்பும் அன்பு வார்த்தைகளும் மருந்தாகின்றன.

தொடர்ந்து வளர்ந்துவரும் சிங்கப்பூரின் சுகாதாரத்திற்கும் சமூகப் பராமரிப்புக்கும் பங்களிக்கும் இளையர்களின் ஆர்வத்தையும் உழைப்பையும் ‘டிரைஜென்’ (TriGen) தொண்டூழிய அமைப்பு தனது 10ஆம் நிறைவாண்டு கொண்டாட்டத்தின்போது அங்கீகரித்தது.

மருத்துவ மாணவர்களால் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, ‘ஹெல்த்ஸ்டார்ட்’, ‘ஹோம்கேர்’ போன்ற திட்டத்தின்வழி மூத்தோருக்கும் இளம் தலைமுறையினருக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கிறது.

மீள்திறன், பரிவு, வாழ்க்கைத் தொழிலில் சிறப்பதற்கான முனைப்பு ஆகியவை ‘டிரைஜென்’ அமைப்பின் அடிநாதங்களாக உள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளாக 800 சுகாதாரத் தொண்டூழியர்களையும் 1,200 இளம் தொண்டூழியர்களையும் அது ஈடுபடுத்தியுள்ளது. இதனால் 700க்கும் அதிகமான முதியவர்கள் பயனடைந்துள்ளனர்.

இத்திட்டத்தின் மூலம் அன்பும் அருளும் நிறைந்த இளம் தலைவர்கள் பேணப்பட்டு, அவர்கள் சிங்கப்பூரின் சுகாதாரத் துறையை எல்லோரையும் ஒருங்கிணைக்கும் விதமாக வடிவமைக்க வேண்டும் என விரும்பப்படுகிறது.

தகவல், மின்னிலக்க மேம்பாட்டு, சுகாதாரத் துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம், ஸ்கேப் கட்டடத்தில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

“இத்திட்டம், சுகாதாரச் சேவையை வழங்குவது பற்றி மட்டுமன்று. ஒவ்வொரு தனிநபருக்கும் மதிப்பளிக்கும் பரிவுமிகு சமூகத்தை உருவாக்குவது பற்றியது,” என்றார் அவர்.

திட்டத்தில் சேரும் ஒவ்வோர் இளையரும் தமக்குரிய தனித்துவத் திறன்களையும் வளங்களையும் கொண்டுவந்தது எல்லோரும் ஒருசேர காட்டும் நோக்கில் இணைவதாக திருவாட்டி ரஹாயு பாராட்டினார்.

“நம் சுகாதாரக் கட்டமைப்பு எப்போதுமே சிக்கலானது. புரிந்து செயல்படுவதற்குக் கடினமானது. முதியோரைப் பராமரிப்பதற்கான ஆற்றலையும் அறிவையும் இளையர்களிடத்தில் வளர்ப்பதன் மூலம் இளையர்கள் அவற்றைத் தங்கள் குடும்பத்தினரின் நலனுக்காகப் பயன்படுத்தலாம்,” என்று நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில் அவர் கூறினார்.

2020 முதல் தொண்டாற்றிவரும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவ மாணவர் ராயன் கிருஷ்ணன், 21, சுகாதாரத் துறையில் பணியாற்றுவோர், தங்கள் பராமரிப்பில் உள்ள நோயாளிகளின் உடல்நலத்தை மட்டுமின்றி மனநலத்தையும் கவனிக்கவேண்டும் என்று கற்றுக்கொண்டதாகக் கூறினார்.

தேசிய சேவையாற்றும் ஷிவாகிரி நாதன் ஜெயன், 21, இதே மனநிறைவைத் தாமும் உணர்வதாகக் கூறினார்.

“முதியோரிடம் எப்படி பேசவேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன். முதியோருக்கும் எங்களுக்கும் இடையேயான நல்லுறவு வளர்கிறது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்