சென்னை: சென்னையின் சில பகுதிகளில் காகங்கள் இறந்து கிடந்தது குறித்து கால்நடை ஆய்வு நிலையம் ஆய்வு மேற்கொண்டது. அதில், எச்1என்1 எனப்படும் பறவைக் காய்ச்சல் பாதிப்பால் அந்தக் காகங்கள் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
அதையடுத்து, சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு தமிழகத்துக்கு வலியுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழகச் சுகாதாரத்துறை பறவைக்காய்ச்சலுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்குத் தொற்றுப் பரவுவதற்கு வாய்ப்புள்ளது எனவும் அவற்றின் கழிவுகளில் இருந்து மனிதர்களுக்கு எளிதில் இந்த நோய் பரவக்கூடும் என்றும் கால்நடை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட பறவையிடம் இருந்தோ, மனிதரிடம் இருந்தோ மற்றவர்களுக்கு, `வெஸ்ட் நைல் வைரஸ்’ பாதிப்பை கொசுக்கள் கடத்தும் என்பதால், நோய்ப் பரவல் வாய்ப்பு அதிகம் உள்ளது.
அதனால், காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சு திணறல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுமாறு தமிழகச் சுகாதாரத்துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், சென்னையைத் தொடர்ந்து, திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் காகங்கள் உயிரிழந்தன. கிண்டி உயிரியல் பூங்காவில் பறவைகள் உயிரிழந்ததால், பூங்கா மூடப்பட்டது.
இது குறித்து தமிழக பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், “தமிழகத்தில் பறவைக் காய்ச்சலால் காகங்கள் உயிரிழந்தாலும், மனிதர்கள் பாதிப்படையவில்லை. காகங்கள் உயிரிழப்பது தொடர்ந்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
“பறவைக் காய்ச்சலால் கோழிகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, கோழி இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும். தமிழகம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை எடுத்து வருகிறது. எனவே, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்,” என்று அது தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தமிழகத்தில் பறவைக் காய்ச்சலால் காகங்கள் இறந்தாலும், மனிதர்களுக்குப் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இதுவரையிலும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், மக்கள் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கிண்டி சிறுவர் பூங்காவில் பறவைக் காய்ச்சலால் 40க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்ததால், தீவிரத் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பறவைக் காய்ச்சல் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள கிண்டி சிறுவர் பூங்காவில் வேடந்தாங்கல், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. குறிப்பாக கரண்டிவாயன், வண்ண நாரை, வெள்ளை அரிவாள்மூக்கன், சாம்பல் வங்காள கழுகு உள்ளிட்ட 10 வகையான 200க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன.

