- அனுபமா உதிவ்
தோழா! வாவா! மேலே வாவா!
காலம் உண்டு! கவலை விட்டுவா!
மேகங்கள் சூழும் வானங்கள் மூடும்
இடிஇடிக்கக் கூடும் தனியாக வாடும்
தோழா வாவா! நேரம் உண்டு
விடியலும் உண்டு! வாவா கதிர்போலே!
இரவெல்லாம் விடியும் அடைமழை முடியும்
நிமிர்ந்திடும் செடியும் மேலேறும் கொடியும்
வண்ணத்துப் பூச்சி இறக்கைகள் விரிக்கும்
எண்ணத்துச் சிறகை விரித்துவை தோழா!
நம்பிக்கை நாட்கள் நகர்ந்திடும் முன்னே!
நதிகள் என்றும் திரும்பாது பின்னே!
கோலங்கள் அழிந்தால் வாசல்கள் உண்டு!
வாசல்கள் இல்லா வீடுகள் உண்டோ?
தோழா! வாவா! தோள்கள் உண்டு!
நாளை நமதே! நம்பிக்கை கொண்டு!
மேற்கு இருந்தால் கிழக்கும் உண்டு!
விடியும் இன்று மேலே வாவா!