துரை மாடியிலிருந்து இறங்கி வந்தார். கூடத்தில் சக்கரநாற்காலி மூலையில் இருந்தது. வள்ளியைக் காணவில்லை. மனத்தில் திக்’கென்றது. குளியலறையில் பார்க்கலாம் என்று இரண்டடி எடுத்து வைத்தார். பூங்காவனம் எதிர்ப்பட்டாள்.
“அம்மா எங்கே?...”
“இங்கதான் டிவி பாத்துகிட்டு இருந்தாங்க...” இழுத்தாள்.
“வெளியில பாரு!..”
வீட்டைவிட்டு வெளியேறி முற்றத்தைக் கடந்து சாலை ஓரத்தில் நின்று வலது பக்கமும் இடது பக்கமும் பார்த்துவிட்டு உள்ளே வந்தாள்.
“வெளியில இல்லங்க அப்பா. நான் போய்ப் பார்த்துட்டு வாரேன்.” அவள் அவரை அப்பா என்றுதான் அழைப்பாள்.
“இரு. நான் போறேன்.” வலது பக்கம் திரும்பிய உடனே இடது பக்கமாக நடக்கத் தொடங்கினார். தரை வீடுகளைத் தாண்டியதும் ஓர் அடுக்குமாடி புளோக் நிமிர்ந்து நின்றது. அதையும் கடந்ததும் சாலையை ஒட்டினாற்போல அந்தச் சிறிய ‘உடற்பயிற்சி மூலை’ அமைந்திருந்தது. உடற்பயிற்சிச் சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்த பகுதியில் மட்டும் அடர் சிவப்பு வண்ணத்தில் மெத்தென்று கால்பதியும் பிளாஸ்டிக் கலந்த ‘ரப்பர் டைல்ஸ்’ வேயப்பட்டிருந்தது. மற்றபடி சுற்றிலும் சிமென்ட் தரை. ஓரத்தில் சில இடங்களில் மேற்கூரை வேயப்பட்டு அமருவதற்கு வசதியாக துவாரங்கள் இடம்பெற்ற இரும்பு இருக்கைகள் எதிரெதிரே அமைக்கப்பட்டிருந்தன. ஒரு மூலையில் வள்ளியும் டோரிசும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
இருக்கைகளுக்கிடையே ஒரு மீட்டர் இடைவெளி இருந்தது!
அவரைப் பார்த்ததும் வள்ளி கையை உயர்த்தி அழைத்தார். அருகில் சென்றதும் டோரிஸ் நலம் விசாரித்தாள். தாம் வள்ளியைத் தேடிக்கொண்டு வந்ததைக் கூறினார்.
“ஹய்யா, ஜாங்கான் தக்குட்லா! சயா அடா...” தான் இருப்பதால் பயப்பட வேண்டியதில்லை என்று மலாய் மொழியில் டோரிஸ் சிரித்துக்கொண்டே கூறினாள். துரை பதில் சொல்லவில்லை.
டோரிசுக்கு எண்பது வயது இருக்கும். பக்கத்து வீட்டில் வசிக்கிறாள். வள்ளிக்கு எழுபத்தைந்து வயதுதான். ஆனால், டோரிசைவிடத் தளர்ந்திருந்தாள். இருவரும் மிக நெருக்கமான தோழிகள். துரை அந்த ‘டெரஸ்’ வீட்டை முப்பது ஆண்டுகளுக்கு முன் வாங்கியதிலிருந்து பழக்கம்.
“டூடோலா...!” டோரிஸ் உட்காரச் சொன்னாள். துரை தன் மனைவி அமர்ந்திருந்த இருக்கையில் ஒரு மூலையில் அமர்ந்தார்.
“சொல்லிட்டு வர்றதில்லையா?...” மனைவியிடம் செல்லமாகக் கேட்டார்.
“டோரிஸ் வந்தா. நானும் வந்துட்டேன்...’ கல்யாணி தன் செயலுக்கு நியாயம் கற்பித்தாள்.
“அவ போனா நீயும் போயிடுவியா?” வார்த்தை உதடுவரை வந்து நின்றது.
“சரி பேசிட்டு வா. பூங்காவனத்தை ஒதவிக்கு அனுப்பவா?”
“நான் மெதுவா நடந்து வந்திடுவேன்..” என்று கல்யாணி சொன்னதும் துரை புறப்பட்டார்.
மூன்றரை மாதமாக சிங்கப்பூர் ‘கொவிட்-19’ என்று அழைக்கப்படும் ‘கொரோனா’ உயிர்க்கொல்லிக் கிருமித்தொற்றால் அல்லோல கல்லோலப்பட்டது. வானொலியில், தொலைக்காட்சியில், செய்தித்தாளில் எங்கும் அந்தப் பொல்லாத கொள்ளை நோய்க்கிருமியைப் பற்றிய பேச்சுதான். அதுகுறித்த பாதுகாப்பு எச்சரிகைதான்!
சீனாவின் ‘வூகான்’ நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய கிருமித்தொற்று உலகை உலுக்கிக்கொண்டிருந்தது. வெளவால் மூலமாகவும் பாம்பின் மூலமாகவும் கிருமித்தொற்று தொடங்கியதாகப் பேச்சு அடிபட்டாலும் வெளவால்தான் காரணம் என்று பின்னாளில் சில ஊடகங்கள் உறுதியாகத் தெரிவித்தன! அது உண்மையாக இருந்தால் நல்லதுதான்!
ஏறக்குறைய கடந்த மூன்றரை மாதமாகக் காலையில் எழுந்ததும் ‘பிபிசி’, ‘சிஎன்என்’ தொலைக்காட்சியைப் பார்ப்பதும் செய்தியைக் கேட்பதும் காலை ஒன்பதரை மணிக்குச் ‘சன்’ செய்தியைப் பார்ப்பதும் இரவு 8.30 மணிக்கும் வசந்தம் செய்திகளைப் பார்த்து விவரங்களை அறிவதும் தலையாய வேலையாய்ப் போய்விட்டது துரை என்ற அண்ணாத்துரைக்கு.
சில வேளைகளில் காலையில் சன் நியூஸ் பார்க்க அவர் அருகில் வள்ளி ஆவலுடன் வந்துவிடுவார். வள்ளியை அதிகாலையில் அவர் எழுப்ப மாட்டார். தானாக எழுந்து வரட்டும் என்று இருந்து விடுவார். தமிழில் செய்தி வாசிப்பு இடம்பெற்றாலும் அவளுக்கு பெரும்பகுதிச் செய்தியை அவர்தான் விளக்கிச் சொல்ல வேண்டும். செய்தி வாசிப்பவர்களில் சிலர் அசுர வேகத்தில் வாசிப்பார்கள்! முற்றுப்புள்ளி, கால்புள்ளி இடம்பெறும் இடங்களில் இடைவெளி விடுவதற்கு மாத்திரை அளவு தமிழ் இலக்கணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியுமா என்பதே ஐயம்தான்! ஒரு பத்தியை விடுவிடு என்று படித்துவிட்டுத்தான் கொஞ்சம் மூச்சுவிடுவார்கள்! அவர்கள் என்ன சாதிக்க விரும்புகிறார்கள் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம் என்று பல வேளைகளில் துரை வருத்தப்படுவதுண்டு!
மலாய்மொழியை இரண்டாம்மொழியாகப் படித்தவர் வள்ளி. சிங்கப்பூர்ப் பேச்சுத் தமிழுக்குப் பழக்கப் பட்டவர். தமிழ் ராஜா ராணிப் படங்களிலும் புராணப்படங்களிலும் இடம்பெறும் செந்தமிழ் உரைநடை சுத்தமாக வள்ளிக்குப் புரியாது; அதனால் அப்படங்கள் பிடிக்காது.
ஆரம்பத்தில், சிங்கப்பூரில் மிகக் குறைந்த அளவில் இடம்பெற்ற கிருமித்தொற்றை அறிந்ததும் வள்ளிக்கு ஏகப்பட்ட பெருமை! “சிங்கப்பூர்ல நம்பளை எல்லாம் ‘கவர்மண்ட்’ நல்லா ‘ஜாகா’ பண்ணறாங்க! மத்த நாடுகளைப் பாருங்க, சிங்கப்பூரையும் பாருங்க!...” என்று பெருமை பேசினார். ஆனால், நாள் ஆக ஆக அதனால் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கு உயர்ந்ததும் பத்துப்பேர் இந்நோயால் இறந்து போனதை அறிந்ததும் வள்ளி அதிர்ச்சியடையத் தொடங்கினார். அதற்கேற்ப சிங்கப்பூரில் கிருமித்தொற்றுப் பரவல் அதிகரித்துக்கொண்டே சென்றது.
பள்ளிகள், கல்விக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் யாவும் மே மாதம் நான்காம் தேதிவரை மூடப்பட்டன. பிள்ளைகள் வீட்டிலிருந்தே இணையத்தில் நிகழ்நிலைவழியே படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. திடீரென்று தோன்றிய எதிர்பாராத சவாலைச் சமாளிக்க ஆசிரியர்கள் அரும்பாடுபட்டனர். ‘ஜூம்’, ‘எஸ்எல்எஸ்’, ‘ஸ்கைப்’ போன்ற இணையச் செயலிகளைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் பாடங்களை நடத்தினர். அங்கிங்கெனாதபடி எல்லா நிலைக் கல்வி நிலையங்களிலும் இம்முறை இடம்பெற்றது.
மிக அவசியம் இருந்தாலொழிய மக்கள் வெளியே செல்லக்கூடாது என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டனர். சிங்கப்பூரில் ஊரடங்கு இல்லை என்றாலும் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று அச்சமுற்ற பொதுமக்கள் கடைகளிலும் பேரங்காடிகளிலும் பொருள்களை வாங்கிக் குவித்தனர்.
“என்னங்க இது? சிங்கப்பூர்லயா இப்படி நடக்குது..?” அதிர்ச்சியோடு வள்ளி தன் கணவரிடம் கேட்டாள்.
“ஆமா! சுனாமி வந்திச்சில்லே, அது மாதிரி இதுவும் ஒரு சுனாமிதான்! சங்கடம்தான், கஷ்டம்தான்,” என துரை வருத்தத்தோடு கூறினார்.
“ஏங்க இப்படி?” வள்ளி புரியாமல் குழப்பத்துடன் கேட்டாள்.
“பேரிடர் எப்போது வரும்னு சொல்ல முடியாது வள்ளி.”
“இதுக்கு சிங்கப்பூர்ல கூடவா மருந்து இல்லே!” வள்ளி உண்மையாகவே கேட்டாள். சிங்கப்பூர் என்றால் அவ்வளவு பெருமை வள்ளிக்கு!
“சிங்கப்பூர்ல மட்டுமில்ல. அறிவியல்ல உச்சத்தில இருக்குற ஐரோப்பாவிலேயும் அமெரிக்காவிலும்கூட மருந்து இல்ல..”
“அமெரிக்காவிலேயுமா?..”
“ஆமா. அமெரிக்காவில, இந்த வியாதி வந்தவங்க எண்ணிக்கை மில்லியனைத் தாண்டிருச்சு! நெருக்கி நூறாயிரம் பேருக்குமேல அமெரிக்காவில இந்தக் கிருமியால பாதிக்கப்பட்டு செத்துப் போயிட்டாங்க! மத்த வியாதிக்குக் கொடுக்கிற மருந்தைக் கொஞ்சம் மாத்திக் கொடுத்து சாகிறவங்க எண்ணிக்கையைக் கொறைக்கப் பார்க்கிறாங்க!”
“ஐயோ, மூத்த பையன் மாறன் அங்கதானே இருக்கிறான்?”
“கலிஃபோர்னியாவில அவ்வளவு மோசமில்லே. கிளினிக்கை மூடிட்டு வீட்டுலதான் இருக்கிறானாம்! இமெயில் போட்டுருக்கான்”
“சிட்னியில...?”
“அங்கே பரவாயில்ல! உலகம் முழுவதிலும் இந்தக் கதிதான் வள்ளி!..”
முதல் நாள்தான் மூத்தவன் மாறனும் இளையவன் குமரனும் கைபேசியில் பேசினார்கள். தாங்களும் மனைவி பிள்ளைகளும் சுகமாக இருப்பதாகச் சொன்னார்கள். அவர்கள் இருவரையும் வெளியே போகாமல் பத்திரமாக இருக்கச் சொல்லித் திரும்பத்திரும்பத் வேண்டிக் கொண்டார்கள். ‘வர வர இவளுக்கு ஞாபக மறதி மோசமாகிக் கொண்டே போகிறது’ என்று துரை தனக்குள் வருத்தத்துடன் சொல்லிக் கொண்டார்.
துரையும் வள்ளியும்தான் அந்த ஈரடுக்குத் தரைவீட்டில் இருக்கிறார்கள். உதவிக்கு பூங்காவனம் இருக்கிறாள். தமிழ்நாட்டிலிருந்து வந்த பெண். பட்டுக்கோட்டை வட்டாரத்தைச்சேர்ந்த ஆவிக்கோட்டை அவள் சொந்த ஊர். மிகவும் அக்கறையோடு அவர்களைப் பார்த்துக் கொள்வாள். தமிழ் படித்தவளாக இருந்ததால் ‘யு டியூப்’பில் கொரோனா பற்றிய பல தகவல்களைப் பார்த்து வள்ளியிடம் சொல்லுவாள். காணொளியையும் வள்ளியிடம் காட்டுவாள். அவர்களுக்கு வேண்டிய உணவு வகைகளைப் பக்குவமாகத் தயாரித்துக் கொடுப்பாள். வள்ளி வேண்டாமென்றாலும் பிடிவாதமாகச் சக்கரநாற்காலியில் உட்கார வைத்து மாலையில் அந்தத் தனியார் பேட்டையைச் சுற்றி வருவாள். கொஞ்ச நாட்களாக வள்ளியால் நிதானமாக நடக்க முடியவில்லை. அதனால், மருத்துவரின் ஆலோசனைப்படி சக்கரநாற்காலி ஏற்பாடு செய்திருந்தார் துரை. சில வேளைகளில் ஊன்றுகோலுடன் வள்ளி மெதுவாக நடந்தும் போவாள். அப்படி நடந்துசெல்ல அவளுக்குப் பிடிக்கும். துரை ஒன்றும் சொல்லமாட்டார். துணைக்குப் பூங்காவனத்தை அனுப்பி வைப்பார்.
பூங்காவனம் எவ்வளவுதான் அன்போடும் அக்கறையாடும் பார்த்துக் கொண்டாலும் பெற்ற பிள்ளைகள் பக்கத்தில் இருப்பது போலாகுமா? இருவரும் வெளிநாட்டுக்குப் படிக்கப் போனார்கள். மாறன் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே ஓர் அழகான அமெரிக்கப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். ‘லிபரல் ஆர்ட்ஸ்’ பயில ஆஸ்திரேலியா சென்ற குமரன் ஒரு பர்மியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். இரண்டு திருமணங்களையும் வள்ளியும் துரையும் மகிழ்ச்சியோடு நடத்தி வைத்தார்கள். இருவருக்கும் ஆணொன்றும் பெண் ஒன்றுமாக இரண்டிரண்டு குழந்தைகள். பேரப்பிள்ளைகளைப் பக்கத்திலேயே வைத்துக்கொள்ள முடியவில்லையே என்ற கவலைதான்! என்ன செய்வது? வாரந் தவறாமல் ‘ஸ்கைப்’பில் பேசிக் கவலையைத் தீர்த்துக் கொண்டார்கள். மாறனின் மகள் எலிசபெத் அழகோ அழகு, கொள்ளை அழகு!
அவர்கள் வசித்த பகுதியில் இருந்த காப்பிக் கடைகளில் நாற்காலி மேசை எல்லாம் அகற்றப்பட்டுக் காலியாக இருந்தன. உணவுக் கடைகளிலும் அப்படித்தான். கடைகளைத் திறந்து வைத்திருந்திருந்தார்கள். பொருள் வேண்டுவோர் வாங்கிச் செல்லலாம். அங்கேயே உணவருந்தவோ காபி குடிக்கவோ முடியாது. நாடு முழுவதும் இதே நிலைதான்!
‘அல்ஜுனிட்’ பூங்காவில் மனிதர்களைக் காண முடியவில்லை. வாளிப்பான உடல் அமைப்போடு கூட்டம் கூட்டமாக நடைப் பயிற்சியும் உடற்பயிற்சியும் செய்ய வரும் நேப்பாளப் பெண்களை அரிதாகவே காண முடிந்தது. ஓர் ஓரத்தில் அமைந்திருந்த உடற்பயிற்சி மூலையை ஆரஞ்சு நிறத்தாலான துளைகள் உடைய ‘பிளாஸ்டிக் பாய்கள்’ கொண்டு மறைத்திருந்தார்கள். அப்பகுதியைச் சுற்றிச் சிவப்பு, வெள்ளை நிறத்தில் அமைந்த நாடாவால் சுற்றிக் கட்டி இருந்தார்கள். யாரும் அக்கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்கு அந்த ஏற்பாடு! அந்தப் பூங்கா வெறிச்சோடிக்கிடந்தது. பொதுவாக ஒரு நிலைகுத்திய நிலை!
“நீ அடிக்கடி வெளியே போகாதே வள்ளி. வீட்டுக்குள்ளேயே இருக்கணும்னு சொல்லி இருக்கிறாங்கள்ளே..!” துரை மெதுவாக ஆரம்பித்தார்.
“நம்ப பக்கத்திலதான் ஒன்னும் இல்லையே!..” வள்ளியின் குரலில் நம்பிக்கை ஓங்கியிருந்தது.
“இப்பவெல்லாம் காத்துல கொரோனா கிருமி பரவுதுன்னு சொல்றாங்க! வெளியில போனா முகக்கவசம் போடனும். நம்பள மாதிரி வயசானவங்க கண்டிப்பா போடனும்!..”
“அதெல்லாம் ஒன்னும் வராதுங்க.”
“அது எப்பிடி சொல்றே வள்ளி! இப்ப ஊரு இருக்கிற நெலமையில, எல்லாம் நல்லா நடக்கும்னு நீ எப்பிடி நம்புறே? நான் சொல்றதைக் கேளு. டோரிசைப் பாக்குறதையும் பேசுறதையும் கொறைச்சிக்க. அதுதான் நல்லது.” துரையின் குரலில் கண்டிப்பு தொனித்தது.
“என்னங்க நீங்க! டோரிசைப் பார்க்காதேன்னு சொல்றீங்க? அவ நல்லாதானே இருக்கிறா..?” கொஞ்சம் சூடா கேட்டாள் வள்ளி.
“எப்போதும் நல்லா இருக்க முடியாதுல...” துரை அழுத்தமாகக் கூறினார்.
வள்ளியின் முகத்தில் வியப்பு! ‘என்ன இந்த மனுசன்! டோரிசைப் போயி இப்பிடி! அல்லாம்மா..’ வள்ளிக்குக் கேட்க சகிக்கவில்லை! எழுந்து சமையலறைக்குப் போனாள்.
வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் வேண்டுகோளில் இருந்த தீவிரத்தன்மை வள்ளிக்குப் புரியவில்லையே என்பதில் துரைக்கு ஏகப்பட்ட வருத்தம்!
தன் வீட்டிலிருந்து மதில் சுவரில் எட்டிப் பார்த்து டோரிசோடு சற்று நேரம் பேசுவது வள்ளிக்குப் பிடித்தமான ஒன்று. கடந்த ஒரு வாரமாக டோரிசைப் பார்க்க எட்டி எட்டிப் பார்க்கிறார். அவளைப் பார்க்க முடியவில்லை! என்னவாக இருக்கும் என்று துரையிடம் கேட்டார். அவரும் அப்பொழுதுதான் முதல் தடவையாக அதைப் பற்றி நினைத்துப் பார்த்தார். அண்மையில் டோரிசைப் பார்த்ததாக நினைவில்லை. பக்கத்து வீட்டில் டோலிசும் அவள் மகன் வில்லியமும்தான் இருக்கிறார்கள். வில்லியமுக்கு அவர் இளைய மகன் குமரன் வயதுதான். துரை அங்கு குடி வந்த ஓராண்டிலேயே வில்லியமின் தந்தை வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால் விவாகரத்து வாங்கிக் கொண்டு போய்விட்டார். வில்லியமையும் கண்ணில் காண முடியவில்லை!
பிற்பகல் 2 மணி இருக்கும். வீட்டின் அழைப்பு மணி அலறியது!
துரை வாசல் அருகில் நின்று கொண்டு தானியங்கிக் கதவைத் திறந்தார். திமுதிமுவென நான்கைந்துபேர் நுழைந்தனர். துரைக்கு ஒன்றும் புரியவில்லை! வள்ளியும் எழுந்து வந்தார்.
“என்னங்க...?” தன் கணவனிடம் மெதுவாகக் கேட்டார். தெரியவில்லை என்று துரை உதட்டைப் பிதுக்கினார்.
“நாங்கள் சுகாதார அமைச்சிலிருந்து வந்திருக்கிறோம்...” என்று சொல்லிக்கொண்டே கழுத்தில் தொங்கிய அடையாள அட்டையை ஒருவர் காண்பித்தார். ரிச்சர்ட் லீ என்ற பெயர் அவர் புகைப்படத்திற்குக் கீழே தெரிந்தது. மற்றவர்கள் கழுத்திலும் அது போன்ற அட்டைகள் தொங்கின.
“என்ன விஷயம்?...” துரை தயக்கத்துடன் கேட்டார்.
“உங்கள் பக்கத்து வீட்டில் இருக்கிறாரே டோரிஸ், அவர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்!..” இடது பக்கத்து வீட்டைக் காட்டி ரிச்சர்ட் விவரித்துக் கொண்டிருக்கும்போதே வள்ளி “ஹா...” என்று அலறினார்.
“சச்சூ!.. பேசாம இரு!.. சொல்லுங்க!...”
“அதனால, அவரோட தொடர்பில இருந்தவங்கள விசாரிக்க வந்திருக்கிறோம்!...” என்று ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டே வள்ளியிடம் பல கேள்விகள் கேட்டார்கள்.
“கடைசியாக டோரிசை எங்கு சந்தித்தீர்கள்? எப்போது சந்தித்தீர்கள்? அதன் பிறகு, நீங்கள் எங்கு போனீர்கள்? யார் யாருடன் பேசினீர்கள்?” என்று வள்ளியிடம் பற்பல கேள்விகளைக் கேட்டார்கள். இறுதியில், “பதினான்கு நாட்கள் வள்ளி வீட்டில் தனியறையில் இருக்க வேண்டும்; அது குளியல் அறையுடன் கூடிய அறையாக இருந்தால் மேல்! மற்றவர்களுடன் தேவை இருந்தால் மட்டும் அறையில் இருந்தவாறே பேசலாம்; கொஞ்சம் கதவைத் திறந்து உணவு தரலாம்; அவர் முற்றாகத் தனிமைப்படுத்தப்பட வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை உடல் வெப்ப அளவைத் தெரியப்படுத்த வேண்டும். தேவை ஏற்பட்டால் சுகாதார அதிகாரிகள் தொடர்புகொண்டு விசாரிப்பார்கள். வெளியே வரக் கூடாது; மீறி வெளியே வருவது கண்டுபிடிக்கப்பட்டால் பத்தாயிரம் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும்,” என்றும் எச்சரிக்கை விடுத்தார்கள். அவர்கள் விளக்கி முடிக்கும்போது வள்ளிக்கு மயக்கமே வந்துவிட்டது. அவர்கள் வலது பக்கத்தில் இருந்த திரு லிம் வீட்டில் விசாரணைக்குச் சென்றார்கள்.
அதிர்ச்சியுடன் உள்ளே வந்து வள்ளி நாற்காலியில் சரிந்தாள். கலவரத்துடன் தன் கணவரின் முகத்தைப் பார்த்தாள். சமையலறைக் கதவோரத்தில் பூங்காவனம் மிரள மிரள விழித்தபடி நின்று கொண்டிருந்தாள்.
“இந்தக் கிருமித்தொற்று ஒடனே தெரியாது. பதினைஞ்சு நாளைக்குப் பிறகுதான் கண்டுபிடிக்க முடியும். நீ பயப்படாதே! நம்ப நல்லதுக்குத்தான் இந்த ஏற்பாடு எல்லாம். ஒரு முன்னேற்பாடுன்னு வச்சுக்கயேன்...” துரையின் குரல் கம்மியது.
“ரொம்ப மோசமான கிருமி. இல்லேன்னா, இதுவரைக்கும் அமெரிக்காவிலேயும் ஐரோப்பவிலேயும் ஐயாயிரம் பத்தாயிரம் இருபதினாயிரம்னு ஜனங்க கொத்துக்கொத்தா சாவாங்களா?” துரை வருத்தத்தில் உறைந்துபோனார்.
“ஊர்ல எப்படி இருக்கு..?” என வள்ளி கேட்டார். அவர் ஊர் என்று குறிப்பிட்டது தமிழ்நாட்டை என்பது துரைக்கு நன்றாகத் தெரியும்.
“அங்க பரவாயில்ல. தமிழ்நாட்டில அவ்வளவு மோசமில்ல,” என்று துரை சொன்னார். குரலில் பழைய தெம்பு இல்லை. அதைக் கேட்டதும் வள்ளிக்குக் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது.
‘நான் தொடக்கத்தில் இருந்தே சொன்னேன். யாருக்கு என்ன இருக்குதுன்னு சொல்ல முடியாது. நாமதான் கவனமா இருக்கணும். நம்ம வயசு அப்படி! ஒடம்பில நமக்கு ஏற்கெனவே ஏகப்பட்ட கோளாறு இருக்கு! சொன்னதைக் கேட்டாதானே!’ துரை தனக்குள் வருத்தப்பட்டாலும் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மேல்மாடியில் உள்ள படுக்கையறை வள்ளிக்கு ஒதுக்கப்பட்டு, வள்ளி தனிமைப்படுத்தப்பட்டார்!
வள்ளி தனிமைப்படுத்தப்பட்டு ஐந்து நாள்கள்கூட ஆகவில்லை! டோரிஸ் மருத்துவமனையில் இறந்து போனாள். வள்ளியின் மனத்தில் திகில் நிறைந்த போராட்டம்! கலவரம்! அச்சம்! வெளியில வரவும் முடியல. அறைக்குள்ளேயே அடங்கிக் கிடப்பது வள்ளிக்குப் புது அனுபவம்! ஒரு சிறைக்குள் இருப்பதுபோல் இருந்தது. டோரிசின் பிரிவை எண்ணி குமுறிக்கொண்டு வந்த அழுகையை வள்ளியால் கட்டுப்படுத்த முடியவில்லை! ‘வள்ளிக்குப் பயம் பற்றிக்கொண்டது. ஆறுதல் சொல்லக்கூட இந்த நேரத்தில அவர் இருக்க முடியவில்லையே!’ என்று வள்ளி அழாத நாளில்லை!
‘வருசப் பொறப்பு (சித்திரைப் புத்தாண்டு) நெருங்கிக் கொண்டிருக்கு! தேக்காவுக்குப் போகணும்; சூடம், சாம்பிராணி, ஊதுவத்தி, பூ, பழம் எல்லாம் புதுசா வாங்கணும்! பாயசம் வைக்கணும், ‘வெஜிடபிள்’ பிரியாணி ஆக்கணும்! எவ்வளவு வேலை இருக்கு! இந்த நேரத்தில என்னை ‘ரூம்’ல போட்டு அடச்சி வச்சிட்டாங்களே!’ வள்ளியின் ஆதங்கம் அளவிட முடியாததாய் இருந்தது.
பத்துநாள் கழிந்த பின்னர், நள்ளிரவில் வள்ளிக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. தாங்க முடியவில்லை.
கதவைத் திறந்து கொண்டு “என்னங்க, என்னங்க.. எங்க இருக்கிறீங்க?..” என்று அலறினாள். பக்கத்து அறையில் படுத்திருந்த துரை எழுந்து ஓடிவந்தார். பூங்காவனமும் வந்துவிட்டாள்.
“ஒடம்பு ரொம்ப காயுதுங்க..! தாங்கமுடியல. குளிரில ஒடம்பு நடுங்குது!” வள்ளி முணகினாள். அவள் உடல் வெடவெடவென நடுங்கிக் கொண்டிருந்தது. நெற்றியைத் தொட்டுப்பார்த்த துரைக்குச் சுரீர் என்றிருந்தது. உடம்பு அனலாய்க் கொதித்தது! அடுத்த அரைமணி நேரத்தில் பொது மருத்துவமனையில் வள்ளியைச் சேர்த்த பிறகுதான் அவருக்கு மூச்சுவிட முடிந்தது. ஆனால், மருத்துவமனை உள்ளே வள்ளி மூச்சுவிடத் திணறிக்கொண்டிருந்தாள். உடனே அவசர சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு போய்விட்டார்கள்.
துரையால் வள்ளியைப் பார்க்க முடியவில்லை. நீண்ட நேரம் காத்திருந்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகுதான் கண்ணாடி வழியே வள்ளியைப் பார்க்க முடிந்தது. முகத்தில் ‘வெண்டிலேட்டர்’! ஏகப்பட்ட ஒயர்கள்! தடிப்பான வெள்ளை நிறப் போர்வை. வள்ளி படுத்திருப்பது தெரியவில்லை. படுக்கைதான் தெரிந்தது. இப்படி ஒரு நிலை ஏற்படுமென்று துரை எதிர்பார்க்கவேயில்லை. அவரும் எண்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்தார். திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சி! முதுமைத் தளர்ச்சி! துரையால் கண்ணாடி அருகில் நிற்க முடியவில்லை. மெதுவாக வெளியேறி பூங்காவனத்தை உள்ளே போகச் சொல்லிவிட்டு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தார். அப்பொழுதுதான் வெளியூரில் இருக்கும் பிள்ளைகளுக்குத் தகவல் சொல்லவில்லையே என்ற நினைப்பு வந்தது.
செய்தியை அறிந்ததும் மாறன் ஸ்கைப்பிலேயே ஓலமிட்டு அழுதான். அவனால், அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்பாவிடம் என்ன பேசுவதென்றும் தெரியவில்லை! அவருக்கு எப்படி ஆறுதல் கூறுவதென்றும் புரியவில்லை. அந்த அளவிற்கு அவன் உடைந்து போயிருந்தான். குமரனால் செய்தியைக் கேட்டுத் தாங்க முடியவில்லை! மற்றவர்களைவிட அவன்தான் வள்ளியிடம் மிக நெருக்கம்!
“அம்மாவை எப்படியாவது குணமாக்கி வீட்டுக்குக் கொண்டு வந்திருங்கப்பா!..” என்று விக்கி விக்கி அழுதுகொண்டே குமரன் கூறியதைக்கேட்டு துரையும் குலுங்கிக் குலுங்கி அழுதார். உடன்பிறப்புகள் இருவரும் இந்த நேரத்தில் சிங்கப்பூருக்கு உடனே பறந்து வரத்தான் விரும்பினார்கள்! ஆனால், எல்லா விமானப் பயணங்களும் நிறுத்தப்பட்டுவிட்டனவே!
பட்டப் படிப்பு! சொந்தத் தொழில்! ஆயிரம் ஆயிரமாகச் சம்பாத்தியம்! என்ன பயன்? வயதான பெற்றோர் துக்கத்தில் இருக்கும்போது அவர்களின் பக்கத்தில் இருக்க முடியவில்லையே! இரத்த உறவு இருந்தும் அது உதவி செய்ய இயலாதிருக்கும்போது அந்த உறவு இல்லாததற்கு நிகர்தானே!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐந்தாம் நாள் வள்ளியின் ஆவி பிரிந்தது!
‘கொள்ளை நோய் கொரோனா’ என்ற அடைமொழிக்கேற்ப வள்ளியை அது கொள்ளை கொண்டுபோய்விட்டது! வள்ளியை வழியனுப்பிவைக்க துரையும் பூங்காவனமும் மண்டாய் தகனச்சாலைக்கு சென்றிருந்தார்கள். சவக்கிடங்கிலிருந்து வள்ளியை நேராக மண்டாய்க்குக் கொண்டுபோக துரை இணக்கம் தெரிவித்திருந்தார். அவர்கள் இருவரைத்தவிர, அங்கு வந்திருந்தவர்கள் பத்துப் பேர் இருக்கும் என்று பூங்காவனம் கூறினாள். அவர்கள் யார் யார் என்று விசாரிக்கத் துரைக்குத் தோன்றவில்லை; அதற்கு உடலில் தெம்பும் இல்லை!
உலகெங்கும் கொரோனா என்ற பேரிடி தாக்கிக்கொண்டிருந்தபோது, தன் வீட்டிலும் அந்த இடி விழும் என்று துரை எதிர்பார்க்கவில்லைதான். வள்ளிக்கு துரை கணவர் மட்டுமில்லை. நல்ல நண்பர், நல்ல சேவகர், நல்ல வேலைக்காரர்.
வள்ளிக்கு மலாய் உணவு உண்பதில் மிகுந்த விருப்பம். சிங்கப்பூரில் உள்ள எல்லா புகழ்பெற்ற மலாய் உணவகங்களுக்கும் சலிக்காமல் அழைத்துச் சென்றுள்ளார். சந்தை, பேரங்காடி, தேக்கா, கேலாங் கடைத்தொகுதி என்று வள்ளி விரும்பும் இடங்களுக்கெல்லாம் முகம் சுளிக்காமல் அழைத்துச் சென்றிருக்கிறார்.
வெங்காயம் ஒரு கடையிலும் கருவாடு வேறொரு கடையிலும் ஊர்ப்பூண்டு இன்னொரு கடையிலுமாகப் பார்த்துப் பார்த்துப் பொருள் வாங்குவது வள்ளியின் வழக்கம். மறுவார்த்தை பேசாமல் வள்ளி சொல்லும் கடைகளுக்கெல்லாம் இன்முகத்தோடு அழைத்துச்செல்வார்.
வள்ளி உள்ளூரில் பிறந்தவராக இருந்தாலும் தமிழ்நாட்டிற்குப் போவதில் அலாதிப் பிரியம் அவருக்கு! வருடத்திற்கு இரண்டு முறையாவது ‘டி நகர்’ போய் வந்தால்தான் வள்ளிக்கு நிம்மதி ஏற்படும். துரை தவறாமல் அழைத்துச் செல்வார்.
இப்போது வீட்டில் தனியாக அவர் மட்டும்!
எங்கேயும் போக அவருக்கு விருப்பமில்லை. பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, வள்ளியைப் பார்த்துக்கொள்வதில், தான் நேரத்தைச் செலவிடுவதாக இதுவரை அவர் எண்ணி இருந்தார்.
உண்மையில் அந்தச் சிறு சிறு வேலைகள்தான் தன்னை இயங்க வைத்திருக்கின்றன! வள்ளிதான் தன்னை இயக்கி வந்திருக்கிறார் என்று இப்போது அவரால் புரிந்துகொள்ள முடிகிறது!
‘வள்ளி இல்லாமல் இனி எப்படிக் காலம் தள்ளப்போகிறேன்!’ துரைக்கு மலைப்பாக இருந்தது!
“பூங்காவனம்...!”
“அப்பா, இதோ வந்திட்டேன்..!” பூங்காவனம் பரபரப்பாக ஓடி வந்தாள்.
“தொண்டை கரகரப்பா இருக்கு. கொஞ்சம் சூடா வெந்நீர் கொண்டா.!..”
“கரகரப்பா இருக்கா...?”
- முற்றும் -