குத்துக்காலிட்டு, எவரையும் மதிக்காமல் உட்கார்ந்திருந்தவளிடம் சுற்றியிருந்தவர்கள், ஏதோ முழு மூச்சாய் இராணுவ இரகசியத்தைக் கேட்பது போல கூர்மையாய் கவனம் அனைத்தையும் அவள் மீதே செலுத்தினர்.
அவளது முகம் கடுகடுப்பில் இரத்த ஓட்டம் முழுவீச்சில் முகத்தில் பாய்ந்து முகம் சிவப்பாய் இருந்தது. யாரையோ தகாத வார்த்தைகளால் ஏசிக்கொண்டிருந்தாள். இது எதையும் கண்டுகொள்ளாமல் நடமாடும் கவிதைகளென பள்ளிப் பிள்ளைகள் ஹோ.. என்ற சத்தத்துடன் வெளியே வந்தது, மடைதிறந்த வெள்ளம் போல இருந்தது.
ஏதோ பூச்சந்தையில் நுழைந்ததைப் போல ஒரு தோற்றம். வெவ்வேறு வகையான பூக்கள். மலர்ந்த பூக்கள் நடந்தன!
வீட்டு வேலைகளை முடித்து பள்ளிப் பிள்ளைகள் போகும் வழியில் புளோக்கின் கீழ்த்தளத்தில் அமர்ந்து அனைத்துப் பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டேயிருப்பேன். ஆனால் யாரிடமும் பேசியதில்லை. பேச வேண்டிய அவசியம் இருக்கவில்லை, கவனிப்பே போதுமானதாக இருந்தது.
பேச்சுக்கு அப்பாற்பட்ட மௌனம் எனக்குப் பிடித்திருந்தது.
பல சோகங்களுக்கு வடிகாலாகவும், புதுப்புது எண்ணங்கள் பிறக்கும் போதி மரமாகவும் அந்த இடம் இருந்தது.
வழக்கம்போல் நான் உட்காரும் இடத்தில் ஒரு பள்ளி மாணவி அமர்ந்திருந்தாள். அது என் இடம் எனச் சொல்லவேண்டும் என்று மனம் சொன்னாலும், அன்று மனதின் பேச்சைக் கேட்கத் தயாராயில்லை.
என்ன நடக்கிறது என பார்க்கும் ஆவலில் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டேன்.
பன்னிரண்டு வயதைத் தொட்டிருப்பாள், ஆனால் அவள் உடல் வயதைக் கூட்டிக் காட்டியது.
முகத்தில் ஏதோ ஏக்கமும் விரக்தியும் குடிகொண்டு எல்லாவற்றையும் அச்சமில்லாமல் எதிர்கொண்டாள்.
ஒருத்தி மட்டும் அவள் கூட்டத்தில் தப்பித்தவளைப் போல சாந்தமான இலட்சணங்களுடன், அந்த அசிங்க சொற்களுக்குப் பழக்கப்படாதவளாய் முகத்தைச் சுழித்து பின் அக்கம் பக்கம் பார்த்து “சரி விடு பவ்யா,” என்றாள்.
எனக்கு யார்டா இவளுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத பெயரை வைத்திருக்கிறார்கள் எனத்தோன்றியது.
யாழி... நீ வாயை மூடு என சமாதானம் பேச வந்தவளை கண்ணிமைக்கும் நேரத்தில் எட்டி ‘பளார்’ என யாரும் எதிர்பார்க்காத வினாடியில் கன்னத்தில் கொடுத்த அடியில் யாழி கலங்கி அதீத அவமானத்தில் தலைகுனிந்து பையை எடுத்துக்கொண்டு விருட்டெனப் போய்விட்டாள்.
அவளைத் தொடர்ந்து மற்றவர்களும் ஒவ்வொருவராக வெளியேறியவுடன், அவள் மெல்ல தன் அழகிய விழிகளை உருட்டி சுற்றும் முற்றும் பார்த்தாள்.
அழகிய சுருள் கேசம் பராமரிப்பில்லாமல் வறண்டு போய் பறந்தது. அதை அலட்சியமாக கோதி பின்னே தள்ளினாள். நானோ ஏதாவது சொல்வாளோ என ஆர்வமாகப் பார்த்தவாறே, என் புத்தகத்தின் அடுத்த பக்கத்தைப் பயத்தை மறைத்துக்கொண்டு சரக்கென திருப்பினேன். ஆழ்ந்து படிப்பதைப் போல நடித்த என்னை அருகில் வந்து முறைத்துப் பார்த்தாள்.
நான் எதோ தேர்வுக்குப் படித்து சோர்வு அடைந்தவளைப் போல மெல்ல எழ முயன்றவளை, ‘ஆண்டி’ என அழைத்த அவள் குரல் நிறுத்தியது. என்ன என்பதைப் போல நின்ற என்னிடம் இன்னும் நெருங்கி வந்தவள்’ பசிக்குது காசு இருக்கா நாளைக்கு தருகிறேன்’ என்றாள்.
எனக்கு தாயுள்ளம் தழுதழுக்க காசு இல்லை, வீட்டுக்கு வர்றியா சாப்பாடு இருக்கு என்றதும் ‘ஐம் நாட் எ பெகர்..’ என, கோபமாக விருட்டென பையை மாட்டிக்கொண்டு கோபமாகப் போனவளை... பார்த்து சிரிப்பும் ஆச்சர்யமும் கலந்து என்னடா பொண்ணு இவ, என அவள் பின்னால் மனதிற்குள் நிறைய பேசிக்கொண்டேன். ஆனால் என் மனம் அவளின் மேல் ஈடுபாடு கொண்டது.
என்னால என்னவென்று புரிய முடியாமல், அவளைப் பற்றிய யோசனையை மட்டும் சுமந்து வீடு வந்தேன்.
பின்னொருநாள் நீண்ட பள்ளி விடுமுறைக்குப்பின் ஹாக்கர் சென்டர்லில் தேநீர் குடிக்க நேர்ந்த போது ‘பஜாரி’யாக மாறி அங்கிருந்த பெரிய தொட்டியில் கல்லெடுத்து வீசினாள் அது ‘சடக்’ என்ற சத்தத்துடன் தெறித்துச் சிதறியது, கண்டுகொள்ள அவளுக்கு ஏது நேரம், யாரோ ஒரு பையனை விரட்டிக்கொண்டு ஆவேசமாக ஓடியவளை ஹாக்கர் சென்டர் பரோட்டா கடையில் வருத்தகோழித் துண்டுகளுக்கு நடுவே ஒரு தலை நடப்பதற்கு சாட்சியாக எட்டிப் பார்த்துவிட்டு பின்பு அதே வேகத்தில் உள்ளே சென்று விட்டது.
அவரது பார்வையில் அது ஒன்றும் பெரிய காரியமில்லை, பழகிய காரியம் போல ஒரு ஏளனம் தெரியவே, நான் மெல்ல பரோட்டாக் கடையை நெருங்கினேன்.
ஊரில் நேரத்திற்குப் பேருந்து வருமா? எனக்கேட்க பெட்டிக் கடையில் ஏதாவது வாங்கியவாறே பேச்சுக்கொடுத்து கேட்டு பயணப்பட்டவள். இது ஒரு எழுதப்படாத நாகரிகம். அதைப் பயன்படுத்திப் பார்க்கலாம் எனத்துணிந்தேன்.
“அண்ணே முட்டை பரோட்டா என ஆரம்பித்து... விசாரித்தேன். பன்னிரண்டு மணியுடன் முடிந்தது” என்றார். அவர் நான் சோறு வாங்க வந்திருப்பேன் என எதிர்பார்த்திருப்பார் போல. என் முகத்தை வேண்டா வெறுப்பாய் பார்த்தும் பார்க்காதவாறு பதில் சொல்லிவிட்டு திரும்பிக் கொண்டார். எதற்கும் தேவைப்படும் என்று ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு நகர்ந்தேன்.
தோல்வியைத் தழுவி, ஆனாலும் மீசையில் மண் ஒட்டாமல் திரும்பினேன். அவளுடைய பழுப்பு நிறக்கண், அந்தமுடி, அவள் பாய்ந்து பாய்ந்து ஓடியது எல்லாமே எனக்கு பழைய ஞாபக வீணையை மீட்டின. அதிலிருந்து வெளிவரவே விருப்பம் கொண்டேன். சட்டென அந்த இடத்தை விட்டு எழுந்து, வேறு இடத்தை மாற்றினால் ஞாபகம் சற்று ஓய்வு எடுத்து பார்வைக்கு அடுத்த சூழல் தெரியும், ஆகவே நான் தைரியசாலி எனக்காட்ட இடம் மாறினேன் அவளைப்பற்றி அறிய முற்பட்டேன்.
யாரிடம் கேட்பது எப்படிக் கேட்பது என புரியாமல் மனம் கவர்ந்த எழுத்தாளரின் புதிய புத்தகமொன்று வீட்டில் இருந்தால் எவ்வாறு எப்படி படித்துவிடத் துடிப்போமோ அதைப் போல சொல்ல முடியா ஆர்வமுற்றேன்.
பள்ளிச்சீருடையை வைத்து அருகில் இருந்த உயர்நிலைப்பள்ளி என்பதை மட்டுமே என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது.
ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும்போதுதான் தயக்கமாக இருக்கும். ஆர்வப்பட்டு விட்டால் கை வந்து சேர்ந்துவிடும். மக்களை உற்றுநோக்குவதில் எனக்கு ஆர்வம் அதிகம். அதனால் பள்ளிக்கு அருகில் உள்ள உள்ள பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்தேன்.
அங்கே வயதான பாட்டி ஒருவரும் பணிப்பெண் ஒருவரும் அமர்ந்திருந்தனர்.
முதலில் மகளாக இருக்குமோ என நினைத்தேன். பிறகு பணிப்பெண் இப்போதுதான் வந்து இறங்கியிருக்கிறார் என்பது அவர் மலங்க மலங்க சுற்றி சுற்றிப் பார்த்த விதமும், என்முகத்தை உற்றுப்பார்த்துப் பேச விழைந்த, சினேக சிரிப்பும் உணர்த்தியது.
எங்கே மருத்துவமனைக்கா? என்றேன். சிநேகத்துடன் பாட்டி ஆமாம் என்றார். ஊரா என்றார் ஆமாம் என்ற தலையசைப்புடன்.
பாவ்யா அவ்வழியே என்று மில்லாமல் இவளா அவள் என அமைதியே வடிவாய்க் கடந்து சென்றாள்.
பணிப்பெண் “அம்மா பவி போறா” பாட்டியின் ஒளிமங்கி, நிறைய காட்சிகளைப் பார்த்துப் பார்த்து சலித்து, வெளியில் சுறுக்கங்களாகவும் உள்ளே காட்சிகள் விட்டுச்சென்ற அழுக்குகளின் எச்சங்களைச் சுமந்த, பஞ்சையான கண்கள் சற்றுப் பெரியதாகி பிரகாசமாகி புள்ள பக்கத்தில் போகும் போது சொல்லமாட்ட,” என அதட்டினார்.
அவளின் அம்மா ஒற்றைப் பெற்றோர். அப்பப்போ வெளியூர்களுக்குச்செல்லும் வேலை ஆதலால் இவளைக் கவனிக்க ஆளில்லை.
வயதான தனது பாட்டியிடம் விட்டுச் சென்றிருக்கிறார். பாட்டியைப் பார்த்துக்கொள்ள பணிப்பெண் என சகல வசதிகளுடன் தான் விட்டுச் சென்றிருக்கிறார்.
அவள் அம்மாவுக்கும் பாவம் சின்ன வயது தானே என்ற பணிப்பெண்ணை பாட்டியம்மா ஒரு முறை முறைத்தார்.
என்னதான் உலகம் மாறிவிட்டாலும் பெண்களுக்கு ஒரு சட்டம் தான்.
ஆயிரம் பாரதிகள் வந்தாலும் கவிதைதான் எழுதமுடியும் மனதில் தங்கிய நாற்ற எண்ணத்தை மாற்ற முடியாது.
*
சரி நாம கதைக்கு வருவோம். தேடல் தொடர்ந்தது என்னவோ அவளுக்கு ஏதாவது செய்யணுமுன்னு மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
பள்ளிவிட்டு வள்ளிநாயகி வந்துவிடுவாள் என்ற நினைவு முன்தள்ள சமைக்கவில்லை என்று ஞாபகத்தில் உரைக்க வீட்டை நோக்கி நடக்கவில்லை ஓடிவந்தேன்.
வள்ளியை சாப்பிடவைத்து பாடம் சொல்லிக்கொடுத்து நிமிர்கையில், கணவர் வரும் நேரமானது. அவர், மகிழ்ச்சியாக கடிதம் ஒன்றை என்னிடம் கொடுத்து அமலா பார் இதை என்றார்.
எப்போதும் எனக்கு வந்த கடிதங்களை அவர் பிரிக்கவே மாட்டார். என்ன என்றும் கேட்பதில்லை. அதுவே வழக்கம். சமூக மற்றும் குடும்ப நல அமைப்பில் இருந்து வந்த கடிதம் அது. அலுவலகத்திற்கு வரச்சொல்லி இருந்ததைப் பார்த்ததும் என்னவாக இருக்கும்.... என யோசித்தவாறு வேலையைத்தொடர்ந்தேன்.
மடியில் தூங்க வேண்டும் என வள்ளி காத்திருந்து தனது பெரிய கரடி பொம்மையுடன் தூங்கிப்போனாள்.
மறுநாள் கிறிஸ்துமஸ் அலங்காரங்களைக் காண ஆர்ச்சர்ட் ரோடுக்குச் சென்றோம். அங்கு வண்ண வண்ண விளக்கு அலங்காரங்களைப் பார்த்து வள்ளியுடன் சேர்ந்து நானும் குழந்தையாகி பரவசமடைந்தேன்.
பிறகு ‘தேவதை உடை’ வாங்க அங்கிருந்த கடை ஒன்றில் தேடினோம். விலை மிகவும் அதிகமாகவே இருந்தது. அதோடு வள்ளி கேட்ட மாதிரி உடை அங்கு கிடைக்கவில்லை. நமக்கு தேக்கா தான் சரி, என தேக்காவுக்கு விரைந்தோம்.
வள்ளி மிகவும் சோர்வாகி அம்மா தூக்கம் வருது என்றவாறு உறங்கிவிட்டாள்.
சரி வீட்டுக்குப் போகலாம் என்ற எனது முடிவை வழக்கம் போல கணவர் ஏற்கவில்லை.
“காலையில் அழுவாள். உன்னால் சமாளிக்க முடியாது வாங்கீட்டுப் போகலாம்,” என்றவர் அவளை அனைத்துத் தூக்கிக் கொண்டார்.
அவளுக்குப் பிடித்த கடல் ஊதா வண்ணம் கிடைத்தது. ஆனால் மற்றவை.. அதன் அலங்காரம் அவளுக்குப் பிடிக்குமா என எனக்குச் சந்தேகமாக இருந்தது.
இதைப்புரிந்த என்னவர் ‘காலையில் அவளிடம் காட்டு, பிடிக்கவில்லை என்றால் மாற்றிவிடலாம். இல்லாவிட்டால் வேறு ஒன்று வாங்கிவிடலாம்,” எனச் சொல்லவே நான் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சுவிட்டேன். பிறகு வண்டி போன வேகத்திற்கு என் மனம் பின்னே சென்றது.
வள்ளியின் அம்மா என்ன செய்தார் எனத்தெரியாது. தற்போதைய தண்டனைக் கைதி, அப்பா குடும்பத்தை விட்டுப் போய்விட்டார்.
ஒரு பெண்ணின் சிரமத்திற்குப் பின்னே ஒரு ஆணின் பொறுப்பின்மை இருக்கும். அதற்கு இந்தக் குடும்பமும் விதிவிலக்கல்ல.
தனியே வள்ளியைப் பார்த்துக் கொள்ள ஆளில்லாமல் சிரமத்தை எதிர்நோக்கியபோது நானும் கௌரியை சுனாமிக்கு பலி கொடுத்து, இடமாற்றத்திற்கு சிங்கப்பூர் வந்ததும் ஏதாவது செய்யவேண்டும், சும்மா இருந்தால் பைத்தியம்தான் பிடிக்கும் என்று முயற்சி செய்ய, அந்த உந்துதல் சமூக குடும்பநல அமைப்பின் முன் நிறுத்தியது.
இதுபோன்று தாய் தந்தையரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு நம்மாலான ஒரு உதவி என ஆரம்பித்தேன்.
ஆறு மாதக் குழந்தையாக வள்ளியைப் பெற்றுக்கொண்டு இன்று அவள் தொடக்கநிலை இரண்டு படிக்கிறாள்.
அடிக்கடி எனக்குள் ஒரு மனப்போராட்டம் உண்டு, வள்ளி என்றைக்கு இருந்தாலும் அவள் அம்மாவிடம் போய்விடுவாள். என் அறிவை தயார் செய்து விட்டேன். மனம் தான் நம்ப மறுத்து பேராசை கொண்டுள்ளது.
வள்ளியால் நாங்களும் கிருஸ்துவத்தை உணர முற்பட்டோம். பின்பு அதுவாகவே மாறியிருந்தோம்.
கிறிஸ்துமஸ் தினம் வந்தது எனக்கு குடில் வைக்கத்தெரியாது என் தோழி திருமதி ராணி வீட்டில் கூட்டிக்கொண்டுபோய் காட்டிய போது, அம்மா எங்கள் பள்ளியிலும் இதேபோல வைப்பாங்க என பரவசப்பட்டாள்.
ராணி வீட்டில் விருந்து தடபுடலாய் நடக்கும். நாங்களும் குடும்பமாக கலந்துகொள்வது வழக்கம். வள்ளியைப் பார்த்ததும் ராணி ஓடிவந்து அள்ளியெடுத்துக் கொஞ்சினாள் ‘தேவதை போலவே இருக்கம்மா,’ என்றவுடன் என் மகள் அழகாய் வெட்கப்பட்டாள்.
நான் என் இதயத்தில் படம் பிடித்துவைத்துக்கொண்டேன். நண்பர்கள் சந்திப்பு அங்கேதான்.
எல்லோரும் வேலை நிமித்தம் பரபரப்பாக இயங்கினாலும் விருந்துகள் ஒன்றே இணைப்புப்பாலம். அதைத் தவற விடுவதேயில்லை.
குடும்பம் மற்றும் சமூக நல அமைப்புக்குப் போக வேண்டிய நாள் வந்தது.
வெளியில் உட்கார நேர்ந்தபோது உள்ளுக்குள் ஏதோ அடிவயிற்றைப் பிசைய என்னவோ தொண்டைக்கும் வயிற்றுக்கும் போராட்டமாக இருக்க தண்ணீர் குடிக்க தற்காலிக தீர்வாக அமைந்தது. ஏதேதோ கற்பனை எண்ணங்கள் மனதை உலுக்கின. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக என்னைக் கடந்து ஒரு உருவம் சென்றது. கண்களில் கண்ணீர் திரையிட்டாலும் அதையும் மீறி அந்த உருவம் பழகிய முகமாக.. ஐயோ பவ்யா.. என் கவலைகள் மறந்து என்ன நடக்கிறது என ஆர்வமானேன். அவள் அம்மா என நினைக்கிறேன் அக்கா போல அவளுடைய சாயலில் இருந்தாள். சிக்கென உடுத்தியிருந்தாள். கண்களும் கேசமும் பவியைப்போல.., வேறு ஒரு பெண்மணியும் சமூக நல அமைப்பின் ஊழியரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். பவி அழகாக சிரித்துக்கொண்டு தலையை அசைத்துக்கொண்டு இருந்தாள். அவளைப் பார்ப்பதற்கே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
நீண்ட நேரமாய் என்னைக் கவனித்த எனது அலுவலர் சிரித்துக்கொண்டே வெல்கம் மிசஸ் அமலா என்ற குரல் கேட்டு என் கவனம் திசை திரும்பியது.
வணக்கம் சொல்லிவிட்டு வள்ளி அம்மா அடுத்தவாரம் தண்டனைக்காலம் முடிந்து வெளியில் வருகிறார் என ஒரு பெரிய அணுகுண்டைத் தூக்கி என் தலையில் போட்டார். என் மனம் குமுறியது. கண்களில் கண்ணீராய் வெளியானது.
சமாளித்து வார்த்தைகள் எதுவுமில்லை பேச. முறைப்படி செய்ய வேண்டிய தாட்களில் கையெழுத்துப் போட்டு முடித்துக் கொண்டு வந்தேன்.
அப்பாவுடன் வள்ளி விளையாடிக் கொண்டிருந்தாள். அழுகையின் உச்சத்திலிருந்த என்னை என்னவர் தேற்றினார்.
அவரே சமைத்து எங்களைச் சாப்பிட வைத்து பின் “பெற்றவளுக்குத்தாம்மா பிள்ளை சொந்தம். நாமளும் கவலை மறந்தோம். அவளுக்கும் நல்ல வீடு அம்மா, அப்பா கிடைச்சுது. அவ்வளவு தான்,” என அவர் பேசியது அப்போதைக்கு ஏற்றுக்கொண்டாலும், வள்ளியின் அம்மா வரும் நாள் வந்தது.
வள்ளியின் அம்மா திருமதி டேவிட்டின் கண்களை நேருக்கு நேர் சந்திக்க என்னால் முடிய வில்லை.
எனக்கு ஒரு குற்ற உணர்ச்சி. அவரின் வாழ்க்கையே வள்ளிதான். நான் என் சுய நலமாய் எண்ணுகிறேனோ என்று... மனதைத் தேற்றிக்கொண்டேன்.
அவரோ என்னைக் கட்டித்தழுவி அக்கா என் பிள்ளை தேவனின் அருள் பெற்ற பிள்ளை.
இல்லாவிட்டால் உங்களைப் போல ஒரு வீட்டில் வளரும் வாய்ப்பு கிடைத்திருக்குமா? என உணர்ச்சி வசப்பட்டார்.
திருமதி டேவிட்டின் முகம் மிகத்தெளிவாக இருந்தது. அவர் அழுதிருப்பார் எனத்தெரிந்தது.
வெளியே தயக்கத்துடன் நின்றவரை உள்ளே வரச்சொல்லி அழைக்க, வள்ளிக்கு யார் எனத்தெரியாமல் “யார்ம்மா புது ஆண்டி” எனத் திக்கித்திணறி கேட்டாள்.
எனக்கு தூக்கி வாரிப்போட்டது இல்லடா.. என ஆரம்பிக்க இடையில் புகுந்த திருமதி டேவிட், அம்மா உன்னிடம் சொல்லவேயில்லையாடா தங்கம், நான் தான் உன் அத்தை என்றார்.
எனக்கு ஒன்றும் புரியாத குழப்பத்தில், என்னங்க குழந்தையிடம் போய்.. என இழுக்க, அக்கா என்னிடம் குழந்தை இவ்வளவு வசதியுடன் வாழுமா?
“உங்களிடம் இருப்பதுதான் சரி. பெற்றவள் எல்லாம் தாயாக முடியாது” என்று சொல்லி வள்ளியின் ஒளிப்படத் தொகுப்பை எடுத்துக்கொண்டு “முறைப்படி என்ன செய்ய வேண்டுமோ நான் ஏற்பாடு செய்கிறேன்,” என்ற படி விடைபெற்றுச் சென்றுவிட்டார்.
நான் அவர் போன திசையையே ஆனந்தக் கண்ணீருடன்... என் மனக்கண் முன் திருமதி டேவிட்டை மிக உயரத்தில் பார்த்தேன்.
அதிரூபன் ஏசு என்னை அன்பென்ற மழையில் நனைத்தது போல இருந்தது.
•