‘அந்த ஐந்து பேரும் இந்த விடுதியிலிருந்து வெளியே போகாம பார்த்துக்கணும், ஹென்றி யோ’, என்று காவல்துறை துப்பறிவாளர் நட்சத்திரா உறுமினாள்.
‘இவர்கள்ல யாராவது ஒருத்தர்தான் இந்த ஆசாமியை கொன்றிருக்க வேண்டும்’, நடைபாதையில் கிடந்த உடலைப் பார்த்தவாறு, அவளது ஊகத்தை வெளிப்படையாகவே அவளது உதவியாளரிடம் கூறினாள்.
“இரண்டு மணி நேரத்துக்கு மேல் அடைமழை பெய்துகொண்டிருக்கு, யாரும் தப்பித்துப் போயிருக்க முடியாது.”
“மேடம், மேலும் கண்காணிப்புக் கருவி அந்த ஐவரையும் அடையாளம் காட்டுது, எல்லோரையும் உள்ளேயே இருக்கும்படி உத்தரவு போட்டிருக்கிறேன்,” என்று ஹென்றி யோ பதிலளித்தார்.
அது மலேசியாவின் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் மாச்சாப் பகுதியிலுள்ள ஒரு மாடிக் காப்பி விடுதி.
நெடுஞ்சாலையின் பக்கத்தில் ஒரு ஒதுக்குப்புறத்தில் இருப்பதால், கழிவறை மற்றும் இளைப்பார அங்கு சிலர் வண்டிகளை நிறுத்திவிட்டு ஓய்வெடுப்பது வழக்கம். காப்பி விடுதியை நடத்துபவர் திரு வோங். அன்று மதியம் அங்கு நடந்த கொலையைப் பற்றி தகவல் கொடுத்தவரும் அவர்தான்.
“அலுவலகம் பக்கத்துல இருக்கிறதால, இந்த கொலைய விசாரிக்கிறது நம்ம பொறுப்பா ஆயிடுச்சு, இனி மழை ஓய்ந்த பிறகுதான் தடவியல் வல்லுநர்கள் வருவாங்க. அதற்குள்ளாக என்னென்ன தடயங்கள் கிடைக்கின்றன என்று பார்ப்போம்,” நட்சத்திரா தனது வேலையில் மும்முரமானாள்.
தரையில் கிடந்த அசைவற்ற உடலை குனிந்து பார்த்துவிட்டு, ‘கொலை செய்யப்பட்டவரைப் பற்றி... ஏதேனும் தகவல் இருக்கா?’ நட்சத்திரா ஏறிட்டு ஹென்றி யோவைப் பார்த்தாள்.
“குப்பற கிடக்கிற உடலின் கால்சட்டைப் பின் பையில் எந்த பணப்பையும் இல்ல. ஆனா இவரு இந்த காப்பி விடுதிக்கு இப்போதுதான் முதல்முறையாக வந்திருக்கிறார் என்று விடுதியின் முதலாளி சொன்னாரு. வேற ஒண்ணும் தெரியல மேடம்,” எனப் பதிலளித்தார் ஹென்றி யோ.
உடலின் தலையைத் தொட்டுப் பார்த்த நட்சத்திரா, “மழுங்கிய ஆயுதத்தால தலையில அடித்திருக்கணும். வாங்க இரத்தக் கரை எங்கிருந்து தொடங்குதுன்னு போய் பார்ப்போம்,” என நகர்ந்தாள்.
ஒவ்வொரு அடியையும் மெதுவாக வைத்து, கண்களை எங்கும் சுழலவிட்டு நடந்தனர், நட்சத்திராவும் ஹென்றி யோவும்.
ஆங்காங்கே காய்ந்தும் காயாமலும் கிடந்த இரத்தக்கறை கழிவறையின் ஓர் அறையில் முடிந்தது.
விளக்கொளியில் கழிவறையின் அந்த அறை நல்ல வெளிச்சத்துடன் இருந்தது.
இந்த அறையில்தான் தலையில் அடிபட்டிருக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தாள் நட்சத்திரா.
ஆனால் ஆயுதம்..? அறையை ஒவ்வொரு அங்குலமாக நோட்டமிட்டாள். நீர்ப்பாய்ச்சியின் கொள்கலன் மூடியை நகர்த்தினாள்.
கொள்கலனில் உள்ள தண்ணீர் சிவப்பு நிறமாக இருந்தது. அடியில் உடைந்த ஒரு செங்கல். அதன் பக்கத்தில் தண்ணீரில் மிதந்துகொண்டிருந்தது ஒரு பணப்பை.
ஈரமாக இருந்த அதைத் திறந்து பார்த்தாள். கொலையுண்டவனின் அடையாள அட்டை இருந்தது.
பணப்பையை ஹென்றி யோவிடம் நீட்டினாள். என்ன செய்யவேண்டும் என்பது அவருக்குத் தெரியும் என்ற நம்பிக்கையில்.
நட்சத்திரா அங்கிருந்து வெளியேறினாள். அவளைப் பின் தொடர்ந்தான் ஹென்றி யோ.
வந்த வழியே திரும்பவும் நடைபாதைக்கு வந்தனர். நடைபாதையின் பக்கத்தில் ஒரு கல் இருக்கை. அதை நெருங்கி இருக்கையை ஆய்வுசெய்தாள்.
அங்கே, நன்றாகப் புகைத்து முடித்த ஒரு வெண் சுருட்டுத் துண்டு கிடந்தது. நடைபாதையின் இரு பக்கங்களிலும் செங்கற்கள் செங்குத்தாக வைக்கப்பட்டிருப்பதையும் அவர்கள் கவனித்தனர். அதில் ஓரிரு கற்கள் காணாமல் போயிருந்தன.
மீண்டும் நடைபாதையை கடந்து காப்பி விடுதியின் முன்புறத்துக்கு வந்தனர். முன் வாசலில் இருந்த இருக்கையில் அமர்ந்தனர். நட்சத்திரா சுற்றுமுற்றும் தன் கண்களை ஓடவிட்டாள்.
வாசலின் மேற்பகுதியில் கண்காணிப்புக் கருவி இருந்தது. காப்பி விடுதிக்குள் வரும் அனைவரும் கண்காணிக்கப்படுகிறார்கள் என்பதை நட்சத்திரா உறுதி செய்துகொண்டாள். ஆனால், இருக்கை அமைந்த பகுதி மற்றும் கழிவறைக்குச் செல்லும் நடைபாதை கண்காணிக்கப்படவில்லை என்பதையும் அவள் உணர்ந்தாள்.
கடந்த அரை மணி நேரமாக தன் குறிப்பேட்டில் சேகரித்து வைத்திருந்த தகவல்களை ஒன்றுவிடாமல் நட்சத்திராவிடம் ஒப்பித்தார் ஹென்றி யோ.
“நீங்க கொடுத்த அடையாள அட்டை கொலை செய்யப்பட்டவருடையது. பெயர் சிவசண்முகம். வயது நாற்பது. கட்டை பிரமச்சாரி. இராணுவத்தில் முழுநேர பயிற்றுவிப்பாளராக இருக்கிறார். பகுதி நேரத்துல குத்துச்சண்டை கற்றுக்கொடுக்கிறார். மேலும் இந்த ஒரு வாரமாக விடுப்பில் இருக்கிறார்.
“இவர்தான் இந்த காப்பி விடுதிக்குள் முதலில் நுழைந்தவர் என்று கண்காணிப்புக் கருவி காட்டுகிறது”.
“நன்று, விரைவாகவே தகவல்களை சேகரித்துவிட்டீர்களே. அதனால்தான் உங்களை எனக்கு உதவியாளராக வைத்திருக்கிறேன்...” என்று புன்னகைத்தவாறே, ‘சிவசண்முகத்துக்கு புகைபிடிக்கும் பழக்கம்...?” நட்சத்திரா கேள்வியை முடிப்பதற்குள், ‘ஆமாம்’ என்று கூறியதோடு எந்த வகையான வெண்சுருட்டு, எண்ணிக்கை போன்ற மற்ற விவரங்களையும் விவரித்தார் ஹென்றி யோ.
“அடுத்து காப்பி விடுதிக்கு வந்தவர், சரக்குந்து ஓட்டுநர் மாரிமுத்து. நாற்பத்தைந்து வயது. அவர் ஒவ்வொரு வாரமும் ஒரு சில நாட்களுக்கு இந்தக் காப்பி விடுதிக்கு வந்து கழிப்பறையைப் பயன்படுத்திவிட்டு செல்வது வழக்கம். இன்று பலத்த மழை பெய்துகொண்டிருந்ததால் உள்ளே தேனீர் அருந்த உட்கார்ந்துவிட்டார்”.
“அடுத்து நுழைந்தவர் டேவிட். வயது அறுபது. ஓய்வுபெற்ற ஆசிரியர். பக்கத்துல தங்கியிருக்கிறதால அவ்வப்போது இந்தக் காப்பி விடுதிக்கு வந்து தேநீர் குடிப்பது வழக்கம்.
“அவருக்கு திருமணம், பிள்ளை குட்டிகள்?’, என இடைமறித்தாள் நட்சத்திரா.
“திருமணமாகி முப்பது வருடங்களுக்கு மேல் ஆகுது. ஒரே பையன். பத்து வருடங்களுக்கு முன் இராணுவத்தில் சேர்ந்த போது ஒரு விபத்தில் சிக்கி இறந்ததாக தெரிகிறது. மூன்றாண்டுகளுக்கு முன் அவரது மனைவியும் இறந்துவிட்டதால இப்போது தனியாகத்தான் இருக்கிறார்,” என்று முடித்தார் ஹென்றி யோ.
“நான்காவது நபர். முப்பது வயதைக் கடந்த முன்னால் போதைப் புழங்கி, மதியரசன்.
“எந்தவொரு வேலையிலும் நீடித்து நிலைத்திருப்பதில்லை. இங்கு அடிக்கடி வருபவன். இந்தக் கடை உரிமையாளருக்கு நன்கு அறிமுகமானவன்.
“இவன் கொலையுண்ட சிவசண்முகத்தின் இராணுவ முகாம் உணவகத்தில் சில மாதங்கள் வேலை செய்துவிட்டு விலகியிருக்கிறான்.
“ஒரு சில சந்தர்பங்களில் இருவருக்கும் மோதல்கள் ஏற்பட்டிருக்காம். எல்லாமே சொற்ப விஷயங்களுக்காகத்தான். கொலை செய்யும் அளவுக்கு இவை இல்லை என்று தெரிகிறது’.
“ஐந்தாவது நபர் நாற்பது வயதுடைய ஹரி. தனியார் நிறுவனமொன்றின் நிறுவனர்.
“இவரும் கொலையுண்ட சிவசண்முகத்துடன் இராணுவத்தில் பணிபுரிந்திருக்கிறார்.
“இருவருக்கும் எந்தவித மனஸ்தாபமும் ஏற்பட்டதில்லை. இவரும் இந்தக் காப்பி விடுதிக்கு அடிக்கடி வருபவர்களில் ஒருவர்”.
ஹென்றி யோ கூறிய அனைத்தையும் நட்சத்திரா குறிப்பெடுத்துக்கொண்டாள்.
“காப்பி விடுதிக்குள் வந்தவர்களின் வரிசையை கண்காணிப்புக் கருவியிலிருந்து கிடைத்ததை வைத்துத்தானே சொன்னீர்கள், அதை உரிமையாளரிடம் உறுதிப்படுத்தினீர்களா?
“இல்லை”.
“கண்காணிப்புக் கருவி காப்பி விடுதியின் வாசலில் வருவோரை கவனிக்கிறது, ஆனால் வலது புறம் திரும்பி நடைபாதை வழி சென்று கழிப்பறை மற்றும் அந்த இருக்கையில் இளைப்பாறுபவர்களை அது கண்காணிக்கவில்லை.
“ஆக, விடுதிக்குள் சென்றவர்களின் வரிசை நீங்க சொன்ன மாதிரி இருக்காது,” என்று திடமாகக் கூறிய நட்சத்திரா தொடர்ந்தாள்.
‘மேலும் விடுதிக்குள் புகைபிடிக்க அனுமதியில்லை. அதனால சிவசண்முகம் அந்த இருக்கையில் அமர்ந்து புகைபிடித்திருக்கவேண்டும். உரிமையாளர் சிவசண்முகத்தை உயிரோடு நேரில் பார்த்திருக்க வாய்ப்பில்லை, கண்காணிப்புக் கருவியில்தான் பார்த்திருப்பார்.
சில தகவல்களை ஹென்றி யோவிடமிருந்து கேட்டு மறுபடியும் உறுதிப்படுத்திக்கொண்டாள். தனது கைக்கடிகரத்தை பார்த்தாள். மாலை மணி ஐந்து எனக் காட்டியது.
குறிப்புகள், படங்கள் சேகரிக்க ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டதை அப்போதுதான் அவள் உணர்ந்தாள். சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தாள்.
இருவரும் காப்பி விடுதிக்குள் நுழைந்தனர். இடையே, காப்பி விடுதியின் உரிமையாளரை சந்தித்து பேச்சுக் கொடுத்தாள் நட்சத்திரா.
‘வரிசையா... யார் யார் விடுதிக்குள்ள வந்தாங்கன்னு சொல்லமுடியுமா?, அவள் திரு வோங்கை கேட்டாள்.
“முதல்ல இங்க வந்தவர், மாரிமுத்து, அப்புறம்... மதியரசன்...பிறகு... ஹரி... கடைசியா டேவிட்...” என்று வரிசைப்படுத்தினார் திரு வோங்.
“முதல்ல வந்த மாரிமுத்துவுக்கும் கடைசியாக வந்த டேவிட்டுக்கும் எவ்வளவு நேர இடைவெளி இருக்கும்?”
அவள் சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக்கொள்ள இந்தக் கேள்வியைக் கேட்டாள்.
“ஒரு மணி நேரம் இருக்கும்,” என்று பதிலளித்தார் உரிமையாளர்.
ஹென்றி யோவை தனியே அழைத்து, முதியவர் டேவிட்டை காப்பி விடுதியில் இருந்த அலுவலக அறைக்கு அழைத்து வரச் சொன்னாள். அமைதியாக ஹென்றி யோவுடன் அறையினுள் நுழைந்தார் டேவிட்.
‘சிவசண்முகத்தைக் கொலை செய்தது நீங்கள்தானே டேவிட்?’, சீறினாள் நட்சத்திரா. ஹென்றி யோ வியப்பில் விழித்தான்.
“அவனுடைய சந்தேகம் போதைப் புழங்கி மதியரசன்மீது இருந்தது. எந்தவித சலனமுமின்றி டேவிட் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
“பத்து வருடங்களுக்கு முன், என்னுடைய ஒரே மகன் இராணுவத்தில் பணியாற்றத் தொடங்கினான். அவனுடைய பயிற்றுவிப்பாளராக இருந்தவன் சிவசண்முகம். சிவசண்முகத்தின் கைத்தொலைபேசியைத் தற்செயலாக என் மகன் தட்டிவிட்டதால் மூர்க்கத்தனமாக குத்தி தாக்கப்பட்டான். அதன் விளைவாக மருத்துவமனையில் பல மாதங்கள் சிகிச்சை பெற்றுவந்தான்.
“ஒவ்வொரு நாளும் என் மனைவியும் நானும் அவனை பார்த்து அவன் நிலைக்காக வருத்தப்பட்டோம். கும்பிடாத தெய்வங்கள் இல்லை. ஆறு மாதத்துக்குப் பிறகு மருத்துவர்களும் கைவிரித்துவிட்டார்கள். நாங்கள் எங்க ஒரே பிள்ளைய இழந்தோம்.
“ஆனா... ஆனா.. சிவசண்முகத்துக்கு எந்தத் தண்டனையும் கிடைக்காம தப்பித்துக்கொண்டான். மகன் இறந்த வேதனையில் என் மனைவிக்குப் புத்தி பேதலித்துபோனது.
“அந்த ஏழு வருடங்கள்ல, நான் எத்தனை துன்பங்களை அனுபவித்தேன்னு உங்களுக்கு தெரியுமா? என் மனைவி இறந்து மூன்றாண்டுகள் ஓடிவிட்டன. என் குடும்பத்தை சின்னாபின்னாமாக்கியவனை சும்மா விடலாமா?
“அதான்... அதான்.... அவனை.....” முடிக்காமல் பலமாக சிரித்தார் டேவிட்.
நட்சத்திராவும் ஹென்றி யோவும் முதியவர் டேவிட்டின் நிலைக்காக பரிதாபப்பட்டனர். ஆனாலும் குற்றவாளி தண்டனை பெற்றுத்தானே ஆகவேண்டும்.
“சரி, இவரை காவலில் தடுத்து வையுங்கள். ஹென்றி யோ,” என்று கூறி நகர்ந்தாள் நட்சத்திரா.
நட்சத்திராவின் அபார புலனாய்வுத் திறமையில் மூழ்கிப்போனார் ஹென்றி யோ!
என்ன நடந்திருக்கும் என அவரது மனத்திரையில் காட்சிகளாகப் பதிவாயின.
முதலில் வந்த சிவசண்முகம், விடுதிக்குள் செல்லாமல் நேரே நடைபாதையில் கிடந்த இருக்கையில் அமர்ந்து புகைபிடித்துக்கொண்டிருக்கிறான்.
அடுத்து வந்த மாரிமுத்து, கழிப்பறையை பயன்படுத்திவிட்டு தேநீர் அருந்த விடுதியினுள் சென்றிருக்கிறார்.
மூன்றாவதாக வந்தவர், டேவிட். அவர் காப்பி விடுதிக்குள் செல்லவில்லை.
புகைபிடித்துக்கொண்டிருந்த சிவசண்முகத்தை அடையாளம் கண்டுக்கொண்டார்.
அவரும் அந்த இருக்கையில் சிவசண்முகத்துடன் சிறிது நேரம் உட்கார்ந்திருக்கிறார்.
அப்போதுதான் பழிவாங்கும் எண்ணம் அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும்.
சிவசண்முகம் புகைபிடித்து முடித்த பிறகு கழிப்பறைக்குச் சென்றிருக்கிறான்.
டேவிட், செங்கல்லுடன் பின் தொடர்ந்திருக்கிறார். கழிப்பறையில் சிவசண்முகத்தின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார்.
மழை பலமாகப் பெய்துகொண்டிருந்ததால் வேறுவழியின்றி டேவிட் கடைசி ஆளாக விடுதிக்குள் சென்றிருக்கிறார்.
மதியரசன் மற்றும் ஹரி கழிவறைப் பக்கம் போகாமல் நேரே விடுதிக்குள் சென்றிருக்கிறார்கள்.
தலையில் பலத்த அடிபட்ட சிவசண்முகம் நடைபாதையில் தள்ளாடி விழுவதைப் பார்த்த காப்பி விடுதி உரிமையாளர், காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்.
முற்றும்