அந்த அலுவலகம், ‘கோரப்பட்ட’ நேரம் - அதாவது காலை பதினோரு மணி ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினர், வேலையைத் துவக்கவில்லையானாலும், வேலைக்காக கூடிவிட்ட வேளை.
இவர்களுக்காக, ‘காபி’ வாங்கிக்கொண்டு திரும்பிய வேதமுத்து, அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தவுடனேயே, என்னமோ - ஏதோவென்று எக்கி எக்கி ஓடினான். யூனிபார பழுப்பு சட்டைக்கு மேல், பூணுல் போட்டது மாதிரியான வெள்ளை பிளாஸ்டிக் பட்டையின் அடிவாரத்தில் தொங்கிய ‘இரண்டு லிட்டர்’ பிளாஸ்க். கிட்டத்தட்ட அறுந்து விழப்போனபோது, அவன் வாசற்படிக்கு வந்துவிட்டான். அங்கே கண்ட காட்சியைப் பார்த்ததும், ஒரு காலை வாசல் படியில் வைத்து, தூக்கிய மறுகாலை, தரையில் பதிய வைக்காமல், நிலைப்படியினை ஆதாரமாய் பிடித்தபடி அவன், ஒற்றைக் காலில் நின்றபோது - அந்த அலுவலகத்திற்குள் ஏறிக் கொண்டிருந்த ஒற்றைக் குரல், இப்போது எகிறியது.
‘என்னம்மா... காது குத்தறே... ஒருத்தன் போயிட்டா... ஆபீஸே போயிடுமா என்ன... முதலமைச்சர், கவர்னரை வீட்டுக்கு அனுப்பினாலும் கவர்னர், முதலமைச்சரை வீட்டுக்கு அனுப்பினாலும் சர்க்கார்னு ஒண்ணு இருக்கத்தானமா செய்யும்? இந்திராகாந்தி இல்லைன்னா கவர்ன்மெண்ட் இல்லாமல் போயிருமா என்ன? அப்படி இருக்கையிலே... இவன் சுண்டக்காய் ஆபீஸரு... பிள்ளைக்காப் பயல்... இவன் போயிட்டால்... எங்க பணமும் போகணும்னு அர்த்தமா... தெரியாமத்தான் கேக்கேன். விளையாடுறதுக்கு ஒனக்கு வேற ஆளு கிடைக்கலையா...’
செம்மண் நிறத்திலான திரைத் துணியால் ‘கோஷா’ போடப்பட்ட கிழக்குப் பக்கத்து ஆபீஸர் அறைக்கும், காலிழந்த நாற்காலிகளையும், ஓட்டை ஒடிசல் மேஜைகளையும் கொண்ட மேற்கு பக்கத்து ‘மூளி’ அறைக்கும் இடைப்பட்ட செவ்வக அறைக் கூடத்தில், கடற்கரைப் பாண்டி, நர்த்தனமே ஆடினார்.
காலில் சலங்கையில்லாக் குறையைப் போக்குவது போல், இருபக்கமும் போடப்பட்ட மேஜை நாற்காலியைத் தட்டியபடியே அங்கும் இங்குமாய் ஆடியும் ‘பாடியும்’ அவர் சுழன்றபோது - அதிகாரி அறைக்கு வெளியே, நான்கு அடி இடைவெளியில், அதன் வாசலுக்கு முன்பக்கமாய் போடப்பட்ட ‘எஸ்’ நாற்காலியில் நுனிக்கு நகர்ந்துவிட்ட அக்கவுண்டண்ட் பாத்திமா, மேஜையில் கையூன்றி, அதன்மேல் முகம் போட்டுக் கிடந்தாள்.
கடற்கரைப் பாண்டியின் குரல் ஏற ஏற, அவருக்கு பயப்படவில்லை என்பதுமாதிரி முகத்தை நிமிர்த்தினாள். அதேசமயம், உடல் எதிர் விகிதாச்சாரத்தில் கூனிக் குறுகியது. கூடவே, ஜன்னலுக்கு வெளியே, பிற அலுவலகவாசிகளும், ‘பப்ளிக்கும்’ ஜன்னல்களை மொய்த்தார்கள்.
போதாக்குறைக்கு. அவள் ஏதோ செய்யத்தகாத தப்பைச் செய்து விட்டதுபோன்ற பார்வை...
இதனால் பாத்திமா, தனது பச்சைச் சேலையால் தலைக்கு முக்காடு போட்டு, தென்னை ஓலைகளுக்குள் மின்னிய செவ்விளனீர் போல் முகங்காட்டி தன்னை வேடிக்கை பார்த்த கூட்டத்திற்கு ஒரு தன்னிலை விளக்கம்போல் கடற்கரைப் பாண்டியைப் பார்க்காமல், அந்தக் கூட்டத்தை ஓரங்கட்டிப் பார்த்தபடியே பேசினாள்.
‘அவர் டிரான்ஸ்பரில் போனாலும்... இன்னும் வீட்டைக் காலி பண்ணல... எப்படியும் வருவாரு... வந்துதான் ஆகணும்... அநேகமாய் ஒரு வாரத்துல...’
‘ஒரு வாரம்... ஒரு வாரமுன்னு மூணுமாசமா... இப்படித்தான் சப்பக்கட்டு கட்டுறேம்மா... மூணு மாசமா சம்பளம் வாங்காமல் இருந்திருப்பானா... மூணுமாசமா வீட்டுக்குச் செலவழிக்காமல் இருந்திருப்பானா... மூணுமாசமா... பெண்டாட்டிகிட்டே...’
‘பெரியவரே...’
பாத்திமா, காதுகளைப் பொத்திக்கொண்டு, தலையைக் குனிந்து கொண்டாள். அழுதாளோ இல்லையோ, அழுவதுபோல் முகத்தை அப்படி பண்ணினாள். இவளுக்கு வேண்டியதுதான், என்பதுமாதிரி இதுவரை வேடிக்கை பார்த்த சகாக்களில் அருதிப் பெரும்பான்மையினருக்கு அந்த ஆசாமியின் பேச்சு அதிகப்படியாய் தோன்றியது.
‘கிரேட் ஒன்’ கிளார்க் ஜோதியம்மா, பாத்திமாவின் பக்கத்தில் போய் நின்று கொண்டாள். அவள் போனதாலயே, ‘கிரேட் டு’ ஆறுமுகமும், அவளை பின் தொடர்ந்தான்.
எந்த பாத்திமாவுக்கு பாதுகாவலாய் நிற்க போவதுபோல் போனானோ, அந்த பாத்திமாவை விட்டு விட்டு, பழகுதற்கு ‘இனிய’ ஜோதிக்கு மெய்க்காவலன்போல் மெய்யோடு மெய்ப்பட நின்றான்.
அந்த ஆசாமியின் ஆட்டத்திற்கு ஜால்ரா போடுவதுபோல் அரசாங்க கவர்களில் சாப்பா போட்டுக் கொண்டிருந்த ‘டெப்திரி’ சாமிநாதன், அங்கிருந்தபடியே, கடற்கரைப் பாண்டியன் முதுகைப் பார்த்து முறைத்தான்.
‘பராஸ்’ (மேஜை நாற்காலி களை துடைப்பவர்) சண்முகம், கையில் பிடித்த ஈரத் துணியை பிழிந்தபடியே, தகராறுக்கு உரிய இடத்தை நோக்கிப் பாய்ந்தான்.
வெளியே கூடிய கூட்டத்தை துரத்திவிட்டு உள்ளே வந்த பியூன் வேதமுத்து அந்த ஆசாமியை கையைப் பிடித்து வெளியே கொண்டு விடலாமா என்பதுபோல் யோசித்தான். இதற்குள், அந்த ஆசாமியான கடற்கரைப் பாண்டி சவாலிட்டார்.
‘நீ அழுதாலும் சரி... இந்த பயலுக அடிச்சாலும் சரி... போவதாய் இருந்தால், மூவாயிரத்து முந்நூறு ரூபாயோடத்தான் போவேன். இல்லாட்டா, இங்கிருந்து இம்மியும் நகரமாட்டேன்... ஒங்களால ஆனதை நீங்க பாருங்க... என்னால ஆனதை நான் பாக்கேன்...’
அந்த அலுவலகவாசிகள், ஆடிப்போனார்கள். ஏற்கனவே அடிபட்டதுபோலவே அரற்றும் கடற்கரைப் பாண்டியை விட்டு, சிறிது விலகி நின்றார்கள்.
கிரேட் டு ஆறுமுகம், கிரேட் டு ஜோதியை தோளைப் பிடித்து இருக்கையை நோக்கி, மெல்லத் தள்ளிவிட்டு, அந்த சாக்கில் அவனும் நடந்தான்.
ஆக மொத்தத்தில், எல்லோரும் மூச்சைக்கூட மெல்ல விட்டார்கள். ஆனால், வேதமுத்துதான், பாத்திமாவிற்கு கேடயம்போல், நின்றுகொண்டு ‘யோவ்’ என்று ஊளையிட்டான்.
இது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிவிட்டது. இதனாலேயே, கடற்கரைப் பாண்டி ஒரு காரியம் செய்தார்.
கடற்கரைப் பாண்டி, திடீரென்று ஆபீஸர் அறை முக்காட்டுத் துணியை சுருட்டி நிலைப்படிக்கு மேலே உள்ள பக்கவாட்டுக் கம்பியில் சொருகிவிட்டு, அந்த அறைக்குள் ஓடினார். அங்கே உள்ள சன்மைகா போட்ட வளைவு மேஜையை ஒரு பக்கமாய் இழுத்துப்போட்டுவிட்டு, அதற்குப் பின்னால், புத்தம் புதிதாய் கிடந்த மெத்தை நாற்காலியை இழுத்தபோது, சக்கரச் செருப்புகள் போட்ட அதன் கால்கள், அவர் பக்கமாய் நகர்ந்தன.
நீல கலர் நாற்காலி. பின் வளைவாய் வளைந்து, இரு பக்கமும் யானைத்தந்தம் போல் வழுவழுப்பான கைபிரேம்கள் கொண்ட கலைவடிவு.
ஒருவர் படுக்க இருவர் உட்காரும் அளவிற்கான சுகமான இருக்கை. உட்கார்ந்திருப்பவர் பின்னால் சாயச் சாய, அதற்கு ஏற்ப அது வளைந்து கொடுக்கும். முன்னால் நகர நகர, தன்னைத் தானே முன்பக்கமாய் மாற்றிக்கொள்ளும். அப்படிப்பட்ட முதுகு மெத்தை.
இப்படிப்பட்ட இந்த நாற்காலியை, வாசல் முனைக்குக் கொண்டு வந்துவிட்ட கடற்கரைப்பாண்டி, அதன் உச்சியை, ஆபீஸரின் தலையாய் அனுமானித்து, வலது கையால் அதை திருகியபடியே, இடது கையை ஆட்டி ஆட்டிப் பேசினார்.
‘இது எவன் அப்பன் வீட்டுச் சொத்து? பணம் கொடுக்க வக்கில்ல... வகையில்ல. இந்த லட்சணத்துல... நீ வேற, இதுல கால்மேல் கால் போட்டு உட்கார்ந்தே...
இதோ இந்த ரூமுக்குள்ள, மல்லலாக்கப்படுத்து உட்கார நல்லா இருக்கே பெரியவரேன்’னு சொன்ன வாயி... இப்ப ஏமா பேச மாட்டேங்குது.’
பாத்திமாவுக்கு வெட்கமாகி விட்டது. கண்களைக் குறும்புத்தனமாய் படரவிட்ட வெட்கமல்ல. நிர்வாணப் பட்டது மாதிரியான அவமானகரமான வெட்கம்.
அலுவலக சகாக்களைப் பார்க்காததுபோல் பார்த்தாள். அவர்கள் தன்னையே தரம் தாழ்த்திப் பார்ப்பதுபோல் இருந்தது.
பொதுவாக, ஒரு அதிகாரியின் நாற்காலியில், அலுவலர்கள் உட்காருவது இல்லை. கூடாது. அப்படி உட்கார்ந்தால் அது இன்டிஸ்ஸிப்ளின். ஆனால், இந்த பாத்திமாவோ அலுவலகத்தில் எவரும் இல்லாத சமயங்களில், மூட்டைப்பூச்சிகள் வாழும் தனது நாற்காலிக்கு காலால் ஒரு உதை கொடுத்துவிட்டு, அதோ அந்த அறைக்குள் போய் இந்த அரியாசன நாற்காலியில் உட்காருவாள்.
முதுகைப் பின்னால் வளைத்து, கால்களை முன்னால் நீட்டி அந்த நாற்காலியையே கட்டிலாக்கி, மெய்மறந்து கிடப்பாள்.
பிறகு நிமிர்ந்து உட்கார்ந்து, தானே ஆபீஸரானதுபோல் கற்பனை செய்துகொண்டு, எதிர்ச் சுவரில் பொருத்திய கண்ணாடியை எழுந்து நின்று பார்ப்பாள்.
பிறகு மீண்டும் கம்பீரமாய் உட்கார்ந்து, மேஜையில் உள்ள பென் செட்டில் பச்சைப் பேனாவை எடுத்து, ‘பேடில்’ கையெழுத்துப் போடுவாள். பச்சையாய் இனிஷியலிட்டு ரசிப்பாள். (பச்சை இங்க் பேனாவை ஒரு ஆபீஸர் மட்டுமே பயன்படுத்தலாம்.
இப்படி பல நாள் நடக்கும் சங்கதியை இந்தக் கிழம், வழக்கமாய் பாக்கி கேட்க வந்த ஒரு நாள் பார்த்துவிட்டது.
என்ன செய்வது என்று புரியாமல் அவள் தடுமாறிபோது கடற்கரைப் பாண்டிக்கு அதுவே வெல்லக்கட்டியாகியது. வீறிட்டுக் கத்தினார்.
“ஏம்மா நீயும்... அவன் கூட ஜீப்பில ஏறி வந்தியே... அவனுக்கு இந்த நாற்காலிய செலக்ட் செய்து கொடுத்தது நீதானே.
“அப்போ ஒனக்கும் காசு கொடுக்கிறதுல ஒரு பொறுப்பு இருக்குதுல்ல? ஏன் பேசாமல் அப்படி பாக்கிற தெரியாமத்தான் கேட்கேன்... எதுக்காக நாம் வேட்டி... சேலை உடுத்துறோம்.”
அலுவலக சகாக்களுக்கு பாத்திமா, ஜீப்பில் ஆபீஸரோடு போன விபரம் மட்டும்தான் கேட்டது. அந்த விவரத்திலேயே அவர்கள் நின்று நிதானித்து சுவைஞர்களாகி விட்டதால், அவர் சொன்ன ‘வேட்டி சேலை’ விவகாரம் கேட்கவில்லை.
‘ஜீப்பில இவள் ஆபீஸரோட முன்னால உட்கார்ந்திருப்பாளா, இல்ல பின்னால இருந்திருப்பாளா..’ என்ற ஆராய்ச்சியில் அவர்கள் மூழ்கியபோது, வேதமுத்து ஒருவன் மட்டுமே சுயமாய் நின்றான்.
நிலைமை ‘கட்டுக்கு’ மீறிப் போவதைப் புரிந்துகொண்டு, கடற்கரைப் பாண்டியை அதட்டினான்.
‘யோவ்... இதுக்கு மேல... ஒனக்கு மரியாதி இல்ல... மொதல்ல எதைக் கேட்டாலும், முறையாய்க் கேட்க தெரிஞ்சிக்கணும்?
வேதமுத்து, கடற்கரைப் பாண்டியை கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக, நெருங்கிப் போனான். ஆனால், அவரோ, அவனைப் பார்ப்பதற்கு முகத்தைகூட நிமிர்த்தவில்லை. எவனோ ஒருத்தன் எதிரில் நிற்கிறான் என்ற அனுமானத்துடன் கத்தினார்.
‘என்னய்யா... மொறையக் கண்ட.. பொல்லாத மொறைய மொதல்ல என்ன விஷயம்னு கேளு... அதுதான் முறை... மூணு மாசத்துக்கு முன்னால... இங்கே ஒருத்தன் இருந்தானே... சூட்டும் கோட்டுமாய்... சொட்டத் தலையன்... ஆபீஸராம் ஆபீஸரு... இவனுவல்லாம் ஆபீஸரானதால்தான் இப்போ இந்தியாவே நாறுது, அவனும், இந்த பொண்ணும் எங்க பர்னிச்சர் கடைக்கு ஜீப்புல வந்தாங்க... இந்த நாற்காலி வேணுமுன்னாங்க. இதை மூவாயிரத்தி முன்னூறு ரூபாய்க்கு பேசி முடித்து அங்கேயே அசோக முத்திரத் தாளுல ஆர்டர் கொடுத்தாங்க ‘கிரிடிட் பில்’ தந்திங்கன்னா... அதை ஹெட் ஆபீசுக்கு அனுப்பி அங்கே இருந்து செக் வந்து... அதை மாத்துறத்துக்கு நாளாகும்... அதனால கேஷ் பில்லா கொடுங்க... ஒரு வாரத்துல பணம் வந்துடுமுன்னு சொன்னாங்க... நானும்... அந்த ஜீப்பையும்... அதுல வந்த மூஞ்சிகளையும் பார்த்து நம்பிட்டேன். மூணு மாசமாயிட்டது... இன்னும் பணம் வந்தபாடில்ல. வரும் என்கிறதுக்கு அத்தாட்சியும் இல்ல... சீவி சிங்காரிக்க தெரியுது... சொன்ன வாக்கை காப்பாற்ற தெரியல்ல... தூ....”
எல்லோரும் சும்மா நின்றபோது, கடற்கரைப் பாண்டியிடமும் ஒரு நியாயம் இருப்பதைப் புரிந்துகொண்ட வேதமுத்து, இப்போது இதமாகப் பேசினான்.
‘பெரியவரே உங்களுக்கு மனசு சரியில்ல. இன்னிக்குப் போயிட்டு நாளைக்கு வாங்க... பேசிக்கலாம்...’
ஒனக்கு ராமபிரான்னு நெனப்போ... என் நிலம ஒனக்கு தெரியுமாய்யா? ஒங்கள மாதிரி நான் சர்க்கார் மாப்பிள்ளை இல்லய்யா...
காலையில எட்டு மணிக்குக் கடைக்குப் போய்... கூட்டிப் பெருக்கி, தண்ணி தெளிச்சு, ஒவ்வொரு மேஜையாய் நகர்த்தி... திங்கள் கிழமையிலிருந்து ஞாயிற்றுகிழமை மத்தியானம் வரைக்கும் உழச்சும் இருபது வருஷத்துல தொளாயிர ரூபாய் சம்பளத்துல கஷ்டப்படுற தொழிலாளிய்யா...
முதலாளி இல்லாத சமயத்துல கேஷ் பில் போட்டு இந்த நாற்காலிய கொடுத்தேன். இப்போ, எங்க முதலாளி நானும் கூட்டுக் களவாணி என்கிறான்.
பணத்தை வட்டியோட கட்டாட்டால் போலீஸ்ல ஒப்படைப்பாராம். சர்க்கார் முத்திரையோட ஒரு ஏழைய ஏமாத்துறது நியாயமாய்யா..? பேச வந்துட்டான் பேச. நான் லாக்கப்புக்கு போனா, எவன்யா ஜாமீன் எடுப்பான்? என் குடும்பம் நடுத்தெருவுல நிக்கப் போவுது... வேணுமுன்னா வந்து வேடிக்க பாருய்யா...’
இப்போது கடற்கரைப் பாண்டியின் ஓங்காரக் குரல், உடைந்து ஓலமிட்டது. எல்லோரும், அவரை ஒருமித்தும், ஒரே முனைப்பாகவும் பார்த்தார்கள். உயரத்துக்கு ஏற்ற உடம்பில்லாதவர்... பைசா நகரம்போல் ஒடிந்து விழப் போவது மாதிரியான முன்வளைவு. வெடுவெடுப்பான பார்வை... முண்டா பனியனைக்காட்டும் காட்டா மோட்டா கிழிசல் சட்டை. நார் நாராய் போன நாலுமுழ வேட்டி...
தலையில் கைவைத்தபடியே தரையில் உட்கார்ந்த கடற்கரைப் பாண்டியை பார்க்க சகிக்காத வேதமுத்து, பாத்திமாவிடம் கிசுகிசுத்தான்.
மேடம்... ஓங்க பணத்துல இருந்து கொடுத்துடுங்க. அப்புறமாய் ஆபீஸர்கிட்ட வாங்கிக்கலாம்.’
‘ஒன்கிட்ட சொல்லக் கூடாது... ஆனாலும் சொல்ல வேண்டிய கட்டாயத்துல சொல்றேன் முத்து... ஆபீஸ் சம்பளத்தை ‘அவர்’கிட்ட அப்படியே கொடுத்திடணும். அப்புறம் தினமும் பஸ் சார்ஜ்க்கும், ஒரு கப் காபி குடிக்கிறதுக்கும் அவர்கிட்ட கையேந்தி பிச்சை வாங்கணும்... இதுதான் என்னோட பிழப்பு...
பாத்திமா ஏதோ பணம் கொடுப்பாள் என்பது மாதிரி வேதமுத்துவின் கிசுகிசுப்பின் மூலம் நம்பிக்கை பெற்ற கடற்கரைப் பாண்டி, அவள் கையை விரித்து பதிலுக்கு கிசுகிசுப்பதில், ஏமாற்றமடைந்து ஒப்பாரி போடுவதுபோல் பேசினார்.
ஏமா... உனக்கும் புள்ளக்குட்டி இருக்கு... என் வயிற எரியவிடாதே.
பாத்திமாவுக்கு திடீரென்று, இன்னும் மஞ்சள் காமாலை சுகமாகாத தனது மூன்று வயது மகளின் நினைவு மனதை உடனடியாய் அரித்தது.
இந்த ஆசாமியின் சாபத்தால், மரணம் மகளை பறித்துவிடக் கூடாது என்கிற பயம்.
அப்படி பயப்பட பயப்பட அதுவே கோபமாய் குணமாறியது.
ஆபீஸரைக் காட்டிக் கொடுத்தால், அவன் தனது அந்தரங்க குறிப்பேட்டில் வில்லங்கம் செய்து, அதனால் நெருங்கி வரும் பதவி உயர்வு ஓடிவிடக் கூடாதே என்று இதுவரை பல்லைக் கடித்து பொறுத்தவள்.
இப்போது வட்டியும் முதலுமாய் முழங்கினாள். ஆபீஸ் ரகசியத்தை எல்லோருக்கும் கேட்கும்படி கத்தலாகச் சொன்னாள்.
“நாற்காலி பணம் மூணு மாசத்துக்கு முன்னாடியே வந்துட்டுது... இங்க இருந்த ஆபீஸ்ருதான் முழுங்கிட்டான். கவலப்படாதிங்க பெரியவரே... இப்பவே மெட்ராசுல இருக்கிற எங்க டெப்டி டைரக்டருக்கிட்ட டெலிபோன்ல பேசி, நடந்ததைச் சொல்றேன்... உங்க மொதலாளிக்கும் டெலிபோன்ல விஷயத்தை சொல்றேன்...”
‘சாகப் போறவனுக்கு பாலு கேட்டால், பசுமாடு குட்டி போடட்டும்னு சொல்ற கதை மாதிரி இருக்கு...’
பாத்திமாவின் முகம் இறுகியது. கடற்கரைப் பாண்டி சொன்னதை காதுகள் உள்வாங்கவில்லை.
தொடர்ச்சி அடுத்த வாரம்