வாழ்க்கை என்றும் சுவைக்கும்

1 mins read

எண்ணும் எழுத்தும்

இல்லாதிருந்தால்

ஏற்றம் எங்கே கிடைக்கும்

கூட்டிப் பெருக்கி

வகுத்துக் கழித்து

வாழ்ந்து பார்த்தால் சிறக்கும்

சொல்லும் செயலும்

பொருந்தா திருந்தால்

வெறுப்புதானே வளரும்

அறமும் புறமும்

அகலாது இருந்தால்

அமைந்த வாழ்க்கை

இனிக்கும்

நினைப்பும் மறப்பும்

நிகழாது இருந்தால்

நீங்கா பகையும் விலகும்

மனதில் மறதி

இருந்தால்தானே

மன்னித் தருள பிடிக்கும்

வேண்டி விரும்பி

வரவேற்றாலே

வேண்டா விருப்பு விலகும்

அகமும் புறமும்

வெவ்வே றானால்

அமைந்த வாழ்க்கை கசக்கும்

இன்ப துன்பம்

மாறா திருந்தால்

இயல்பாய் எப்படி நடக்கும்

எங்கும் எதிலும்

இயல்பாய் இருந்தால்

எல்லாம் இங்கே கிடைக்கும்

பிறப்பும் இறப்பும்

இல்லா திருந்தால்

இடங்கள் எங்கே இருக்கும்

இனிப்பும் கசப்பும்

புளிப்பும் துவர்ப்பும்

இருந்தால் தானே சுவைக்கும்