விடிந்தது தெரியாமல்
பேசிக்கொண்டேயிருந்தபோது
சொற்கள் தித்தித்தன..
'அப்புறம்' எனும் சொல்
உரையாடலின் சுவாசம்..
கைபேசித் தொடுதிரை
குழிஆடி ஆகி
கைரேகை தேய்ந்ததும்,
மூக்கு, கண்ணாடியைச்
சுமப்பதும் நிரந்தர சேதாரம்..
அருவியில் குதூகலித்து
சமவெளியில் நடந்தோடி
கடல்சேர்ந்துக் காணாமற்
போகும் நதி போலானது நேசமும்..
காலையின் நறுமணம்
மாலையில் இருப்பதில்லை
மலர்களிடம்..
மலரினும் மெல்லியதன்றோ?
காலம் சலிப்பைத் தந்தாலும்
நினைவுகளுக்கு முதுமையில்லை..
இனித்த சொற்கள்
கசப்பதை விடவும்
வலிகள் குறைவுதான்
பிரிவுக்கு..

