கண்ணில் தென்பட்டது மிகப்பழைய திருக்குறள் புத்தகம். என் அம்மாவின் நெற்றியைப்போல இருக்கிறது.
எல்லாப் பக்கங்களும் பழைய பழுப்பு வண்ணத்தில் இருக்கின்றன. ஒருவித வாசம் பழைய புத்தகங்களுக்கு இருக்கத்தான் செய்கிறது.
சில பக்கங்கள் உடைந்துவிடுமளவிற்கு உலர்ந்திருக்கின்றன. காப்பிக்கறையும் சில பக்கங்களில். சிலபக்கங்கள் கிழிந்திருந்தாலும் புத்தகம் அழகாக இருக்கிறது.
தமிழ் எழுத்துகள் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட வடிவத்தில் அற்புதமாக இருக்கின்றன. தமிழ் எழுத்துக்களில் உயிர் இருப்பதை உணர முடிகிறது.
யாரோ ஒருசிலர் சிரமப்பட்டு அச்சில் ஏற்றியிருக்கிறார்கள் என்பதை தெளிவாகக் காணமுடிகிறது.
இரண்டாம் பக்கத்தில் தாடிமீசையுடன் கறுப்பு வெள்ளை திருவள்ளுவர் படம் அலங்கரித்திருக்கிறது. புத்தன் போலும் காட்சி அளிக்கிறார் திருவள்ளுவர்.
ஒரு சில அதிகாரங்களைத் திருப்பினேன். சில வார்த்தைகளுக்கு சில வரிகளுக்கு என் அப்பாவின் கண்டிப்பைபோல் சிவப்புக்கலரில் அடிக்கோடிடப்பட்டு இருக்கின்றன.
அன்புடைமை, ஒழுக்கமுடைமை, கல்வி, கேள்வி, தவம், வாய்மை என்று எனக்குப்பிடித்த அதிகாரங்களை படித்துப்பார்க்கிறேன். புத்துணர்ச்சிபெறுகிறேன்.
பெற்றோர்களும் சில ஆசிரியர்களும் முன்னோர்களும் நண்பர்களும் சான்றோர்களும் எனக்குப் பிடித்தோரும் நினைவிற்கு வருகிறார்கள்.
என்னை இகழ்ந்தோரும் நினைவிற்கு வருகிறார்கள். அவர்களால்தான் நான் இத்தனை சாதிக்கமுடிந்தது என்று அவர்களையும் போற்றுகிறேன்.
இந்தப்புத்தகத்தின் மீதேறி பறவைகள் விளையாடி இருக்கவேண்டும். எச்சங்கள் இருக்கின்றன. இந்தப் புத்தகம் மழையில் பலமுறை நனைந்தது தெரிகிறது. கரையான் அரிப்பும் தென்படுகிறது. வீட்டில் இடப்பற்றாக்குறையாலோ அல்லது தமிழ் படிக்கத்தெரிந்த அடுத்த தலைமுறை இல்லாததாலோ அல்லது இல்லத்தில் அறச்சிந்தனைகள் மக்கிப்போனதாலோ அல்லது கணிப்பொறி உலகில் மவுசு குறைந்ததாலோ அல்லது போகிப்பண்டிகைக்கு ஏதாவது கொடுப்பதுபோல ஏதோவொரு காரணத்தினால்தான் இந்த அழகிய புத்தகம் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசப்பட்டிருக்கவேண்டும்.
ஆறுமாத காலமாக யாரும் குப்பைத்தொட்டியை சுத்தம் செய்ததாகவும் தெரியவில்லை. அப்படியொரு துர்நாற்றம் வயிற்றைப் புரட்டுகிறது.
யார் வீசினார்களென்று தெரியாது! மூச்சை அடக்கி முத்துக்குளிப்பதுபோல் புத்தகத்தை எடுத்தேன். சுத்தப்படுத்தி என் வீட்டின் பூசையறையில் வைத்திருக்கிறேன் பத்திரமாக.
நாலு வீடு தள்ளி இருக்கும் வீட்டில், கடந்த ஆறு மாதங்களாக படுத்தப்படுக்கையாய் இருந்த எண்பது வயது ஆசிரியர் சந்திரன் அவர்கள் இறந்த செய்தியை என் மனைவி சொன்னாள். அவர் திருக்குறளில் தோய்ந்தவர் என்று எனக்குத் தெரியும். எத்தனையோமுறை என்னிடம் திருக்குறளை விளக்கியிருக்கிறார்.
அலைமோதுகின்றன நினைவலைகள். உடனே பூசை அறையிலிருந்து திருக்குறள் புத்தகத்தை எடுத்துக்கொண்டு அன்னாரின் பூத உடலைப் பார்க்க கிளம்பினேன். அவரின் இதயமருகே திருக்குறள் புத்தகத்தை வைத்து வணங்கினேன். என்னையே வெறித்துப்பார்த்த அவரின் மூத்தமகன், திருக்குறள் புத்தகத்தைத் தொட்டுப்பார்த்து தடவிக் கொடுத்து கதறி அழுதான்.