சிறுகதை எழுதியவர்: சிவக்குமார் கே.பி.
பரத்தின் மனம், அன்று நள்ளிரவு தாண்டியும் தன் குரங்குத் தன்மையை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது. அவனும் புரண்டு புரண்டு பார்த்துப் பார்த்தான். மனதை அமைதிப்படுத்த முயன்றான். அதை கொஞ்சம் கெஞ்சினான். ஏன்? அதட்டிக்கூட பார்த்தான். ஆனால் அந்த மனம் என்ற குரங்கு, உறக்க தேவதையின் பிடியில் நள்ளிரவு ஆகியும் சிக்கவேயில்லை. பரத்தோடு அது கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டேயிருந்தது. அப்படி அலைபாய காரணம், அடுத்து விடியப்போகும் நாள், அவன் வேலையில் ஒரு முக்கியமான நாள் என்று அது அவனோடு பேசிக்கொண்டேயிருந்தது.
“நான் கஷ்டப்பட்டு போட்ட இந்த ‘ப்ராஜெக்ட் ப்ரோபோசல்’ல ‘மீட்டிங்க்’ல ஒத்துக்கிட்டாங்கன்னா அது பெரிய வெற்றி.
“பல வருஷமா காத்துக்கிட்டிருந்த ப்ரோமோஷன் கிடைக்க, இந்த வெற்றியைக் காட்டி கேட்க வேண்டியதுதான்” என்று மனம் தாவியது.
‘நாளைக்குன்னு பார்த்து ‘சிஇஓ’கூட இந்த மீட்டிங்கிற்கு சிங்கப்பூர் வரார்னு கேள்விப்பட்டேன். அவர் முன்னாடி பேசி, அசத்திடவேண்டியதுதான். பரத்! உனக்கு நல்ல நேரம்டா’ என்று மனம் பல திசைகளில் தாவிக்கொண்டிருந்தபோது அவனருகே ஏதோ கையசைவதை உணர்ந்தான்.
“காவ்யா...! நீ இன்னுமா தூங்கலை? மணி எத்தனை தெரியுமா? நாளைக்கு ஸ்கூலுக்கு சீக்கிரம் கிளம்பணும்..’’ என்று அவன் அவளை அதட்டியபோது, தன் வலது கை கட்டை விரலை அவசர அவசரமாக வாயில் வைத்து சப்ப ஆரம்பித்தாள் பரத்தின் ஏழு வயது மகள் காவ்யா. அப்படி விரலை சப்பியவாறு, மெல்ல அவளருகே இருந்த தலையணையை அகற்றிவிட்டு, அவனுடைய காதில் ஏதோ சொல்ல வந்தாள்.
“அப்பா.. அப்பா..’’ என்று ரகசியமாக, “நாளைக்கு ஸ்கூல் ஸ்டேஜ்ல நான் பேசப்போறேன். எல்லாரோட அப்பா அம்மாவும் வராங்க. நீங்களும் வரீங்க தானே?’’ என்றாள்.
“அப்பாவுக்கு, நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதனால, அம்மா மட்டும்..” என்று அவன் எதார்த்தத்தைச் சொல்ல ஆரம்பித்தபோது, அவளின் உதடுகள் பிதுங்கின.
“சரி சரி... இப்போ அழுது ஊர கூட்டாதே. நாளைக்கு, நானும் வரேன். இப்போ தூங்கு..’’ என்று அவள் மனம் குளிர சமாதானப்படுத்தினான். அதைக் கேட்டதும், அவனைப் பார்த்து சற்று சிரித்தவாறே, மீண்டும் காவ்யா தன் கட்டை விரலைச் சப்பி தூங்கச் சென்றாள்.
இப்போது அப்பாவும் மகளும் அவரவர் நாளையை எதிர்நோக்கி தூங்க ஆயத்தமாயினர்.
*
“காவ்யா! மணி ஆறு. எழுந்திரு. சீக்கிரம் பஸ் பிடிக்கணும். இன்னிக்கி அப்பாவுக்கும் சீக்கிரம் கிளம்பணும்,’’ என்று தான் கிளம்பிக்கொண்டிருக்கும்போதே காவ்யாவை எழுப்பினான் பரத்.
“அப்பா, நான் என்ன பேசப்போறேன் தெரியுமா?’’ என்று கண் முழித்தவுடன் அவள் கேட்ட முதல் கேள்விக்கு, “எல்லாம் பஸ்சில போகும்போது பேசிக்கலாம். இப்போ நீ சேட்டை பண்ணாம அம்மா சொல்லறபடி கிளம்பு,’’ என்று அவள் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
மணி ஏழு. அப்பாவும் மகளும் இப்போது பஸ் எண் 47 வருகைக்காகக் காத்திருந்தனர்.
“சே..., இன்னிக்கின்னு பார்த்து இந்த பஸ் கூட படுத்தணுமா? அடக்கடவுளே!’’’ என்று அவன் முணுமுணுத்ததை காவ்யா கேட்டதும், “என்னப்பா?’’ என்று அந்த வயதில் எல்லாம் அறிய கேட்கும் ஆவலோடு கேட்டாள்.
“...உம் எல்லாம் உன்னாலதான்.. சீக்கிரம் கிளம்புன்னு சொன்னேன்ல,’’ என்று சொல்லி அடிக்கடி மணியையும் அந்த சாலையையும் பார்த்தவனிடம் அவள் எதுவும் பேசவில்லை.
ஒரு வழியாக பஸ் எண் 47 வந்து அவர்கள் ஏறியதும், மீண்டும் மணியைப் பார்த்தான் பரத். “பரவாயில்லை. இப்பவாச்சும் வந்துச்சே!!. இனி ஆடிஅசைஞ்சு ஊர்வலத்துல போகுற மாதிரி போகாம, கொஞ்சம் சீக்கிரம் போனா நல்லா இருக்கும். ஒன்பது மணிக்குள்ள ஆஃபிஸ் போயிடணும். அப்போதான் பத்து மணி மீட்டிங் முன்னாடி கொஞ்சம் தயார் பண்ணிக்கலாம்,” என்று அன்றைய தினத்தின் எதிர்பார்ப்பில் மூழ்கினான்.
பஸ்சில் உட்கார்ந்ததுதான் தாமதம், “அப்பா, நான் என்ன பேச போறேன் தெரியுமா?’’ என்று காவ்யா பேச ஆரம்பித்தாள்.
“உ..ம்’’ என்று மட்டும் பதிலளித்த பரத், அவன் கைபேசியைப் பார்க்க ஆரம்பித்துவிட்டான். அன்று முக்கியமான மீட்டிங் வேறு இருந்ததால், அவன் கவனம் அனைத்தும் கைபேசியில்தான் இருந்தது.
என்றைக்கும் போல், அன்றைக்கும் காவ்யா வழிமுழுக்க ஏதோ பேசிக்கொண்டேயிருந்தாள். ஆனால், அன்று சற்று மாறுதலாக நிறையவே பேசினாள் என்று மட்டும் பரத் உணர்ந்தான்.
ஒரு பத்து நிமிடம் கழித்து, தன் கைபேசியிலிருந்து கவனத்தை விலக்கி, அவளைப் பார்த்தான்.
அவர்களின் நேர் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த ஒரு வயதானவரிடம் அவள் ஏதோ கையசைத்து பேசிக்கொண்டிருந்தாள். அவரும் அவள் பேசியதை நிதானமாகக் கேட்டுக்கொண்டு அவள் சிரிக்கும்போதுகூட சேர்ந்து சிரித்துக்கொண்டிருந்தார்.
“ஓ! இந்த தாத்தாவா! ஆமாம், இவருக்கென்ன? ஒரு கவலையும் இல்லை” என்று நினைத்தான் பரத்.
தினம் அந்த பஸ்சில் அந்த தாத்தா வருவதை அவன் பார்த்திருந்ததால், காவ்யா அவரோடு பேசுவதை அவன் தடுக்கவில்லை.
பஸ் இப்போது அவள் பள்ளியின் முன் நின்றது. அவசர அவசரமாக அவர்கள் இறங்கியபோது, “குட்லக்’’ என்று அந்த தாத்தா காவ்யாவைப் பார்த்து கையசைத்தார்.
பள்ளிக்குள்ளே அவளை விட்டுவிட்டு பரத் கிளம்பத் தயாரானபோது, “அப்பா, 12 மணி, சரியா?’’ என்று சொன்னவளிடம், அவனுக்கு ஏனோ இப்போது பொய் சொல்ல மனம் வரவில்லை.
“பயப்படாம பேசணும் காவ்யா’’ என்று தன் வருகை பற்றி ஏதும் சொல்லாமல் அவன் கிளம்பியபோது, அந்த ஏழு வயது மனம், பல எதிர்பார்ப்புகளோடு அவனுக்குக் கையசைத்தது.
மணி ஒன்பது. ஆஃபீஸிற்குள் வந்தவனுக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. எப்போதும் சற்று தாமதமாக வரும் அவனுடைய சூப்பர்வைசர் ஷங்கர், அன்று ஏனோ, அவன் வருவதற்கு முன்னரே வந்திருந்தார்.
பரத் அவன் இருக்கையில் உட்கார்ந்ததுதான் தாமதம், அவரின் குரல் ‘பரத்’ என்று அழைத்தது.
“இந்த ப்ரோபோசல் பற்றி எனக்கு சில கேள்விகள் இருக்கு’’ என்று அவனிடம் அடுத்த ஒரு மணி நேரத்துக்கு அவர் அடுக்கடுக்காக கேள்வி கேட்டார். அப்படி கேட்டவரிடம், அவன் சேகரித்து, ஆராய்ந்த எல்லா விஷயங்களையும் எடுத்துரைத்தான்.
“சார். மணி பத்து. ‘சிஇஓ’ கூட இந்த மீட்டிங்கிற்கு வரார்னு கேள்விப்பட்டேன். நாம போகலாமா?’’ என்று ஆவலோடு கேட்டான் பரத்.
“அந்த மீட்டிங்கை இன்னிக்கி மதியம் தள்ளி வச்சுட்டாங்க. இன்னும் எப்போன்னு சரியா சொல்லலை,” என்று ஷங்கர் சொல்லிவிட்டு, ‘நீ உன் இடத்திலேயே இரு. எனக்கு இன்னொரு மீட்டிங் இப்போ போகணும்,’’ என்று அவர் அறையை விட்டுக் கிளம்பினார்.
தன் இருக்கைக்கு மீண்டும் திரும்பி வந்தவனை, “ஹே பரத். ஆல் செட்?’’ என்று கேட்டான், அவனோடு வேலை பார்க்கும் கெளதம்.
“ஆமாம் கெளதம்... கொஞ்சம் பயமாவும் இருக்கு. இந்த ப்ரோபோசல் மீட்டிங்கில் ஒத்துக்கிட்டாங்கன்னா நல்லா இருக்கும். பெரிய பாஸ் வேற சிங்கப்பூர் வந்திருக்கார்னு கேள்விப்பட்டேன்,’’ என்றான் பரத்.
“நானும் கேள்விப்பட்டேன். இந்த மீட்டிங் வாய்ப்பு உனக்கு முக்கியம். ஆல் தி பெஸ்ட்,’’ என்று அவனுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசிவிட்டு, “சரி, நான் ஒரு வாடிக்கையாளரைப் பார்த்துட்டு லஞ்ச் முடிஞ்சு வரேன்,’’ என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தான் கெளதம்.
சற்று நேரம் தன் கணினியின் முன் உட்கார்ந்திருந்த பரத்திற்கு அன்றைய மீட்டிங் பற்றிய நினைவுகள்தான் ஓடிக்கொண்டேயிருந்தன. ‘இந்த ‘ப்ராஜெக்ட்’ நான் கொடுத்த ‘ப்ரோபோசல்’படி பண்ணினா, கம்பெனிக்கு நல்ல லாபம் கிடைக்கும்’ என்று மனம் அசைபோட்டது.
ஆனால், நேரம் ஆக ஆக பரத்திற்கு இருப்புக்கொள்ளவில்லை. ஷங்கருக்கு மீட்டிங் நேரம் கேட்டு தகவல் அனுப்பினான். எந்தப் பதிலும் இல்லை.
மணி இப்போது மதியம் இரண்டை தாண்டிவிட்டது. ஷங்கரிடமிருந்து இன்னும் எந்தப் பதிலும் வராததால், செகரட்டரியிடம் விவரம் அறியச் சென்றான். அவளிடத்திலும் எந்தத் தகவலும் இல்லை.
“ஹே பரத், மீட்டிங் முடிஞ்சுதா? ‘ப்ரோபோசல்’ பத்தி என்ன சொன்னார்?’’ என்று கேட்டான் ஆஃபீசிற்குள் திரும்பி வந்த கெளதம்.
“இல்லப்பா... இன்னும் மீட்டிங் எப்போன்னு தகவலே இல்லை. ஷங்கரும் அவர் மீட்டிங்கிலிருந்து திரும்பி வரலை. எனக்கென்னவோ இந்த மீட்டிங் இன்னிக்கி நடக்காதுன்னு நினைக்கிறன்,’’ என்று சற்றே ஆதங்கத்தோடு சொன்னான் பரத்.
“இதெல்லாம் வழக்கமா நடக்குறதுதான் பரத். ஆமாம் கேட்கணும்னு நினைச்சேன். நீ சாப்பிட்டியா?’’ என்று கேட்டவனிடம், இல்லை என்று தலையசைத்தான்.
“அடப்பாவி. சுவர் இருந்தாதானேடா சித்திரம் வரைய முடியும். நாளைக்கு நமக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா, இந்த ஷங்கரா வந்து நம்மள பார்த்துப்பான்?’’ என்று சற்று நையாண்டித்தனத்தோடு கேட்டுவிட்டு, இப்போது கொஞ்சம் அக்கறையோடு அவனை வெளியே செல்ல அழைத்தான்.
“பரத், மணி இப்போ நாலு. பேசாம என்னோட வந்து ஏதாவது சாப்பிடு. நானும் காபி குடிக்கப் போறேன்,’’ என்ற கௌதமின் அழைப்பிற்கு, பரத் மறுப்புத் தெரிவிக்கவில்லை.
கௌதமோடு வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்தவனுக்கு இன்னும் அந்த முக்கியமான மீட்டிங் பற்றி எந்த தகவலும் வரவில்லை.
சரி, வேறு ஒரு நாள் அது நடக்கும் என்று அன்று காலை முதல் அவன் தள்ளிவைத்த வேலை அனைத்தையும் செய்ய ஆரம்பித்தான். அதில் மூழ்கியவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை.
“பரத், நீ இன்னுமா கிளம்பல?. மணி எட்டு டா!! இதுக்குமேல மீட்டிங் நடக்கும்னு காத்துட்டிருக்கியா?’’ என்று கெளதம் கிளம்பியபோதுதான், மணியைப் பார்த்தான் பரத். அந்த நீண்ட நாளின் களைப்பு, இப்போது சற்றே அவன் மேல் படர தொடங்கியது.
வீட்டிற்கு வந்த பிறகு தான் அவனுக்கு மீண்டும் காவ்யாவின் நினைப்பே வந்தது.
“அவ தூங்கிட்டா பரத். நீ அவளை ஸ்டேஜ்ல பார்க்க வருவன்னு சொல்லி ரொம்ப எதிர்பார்த்தா. கொஞ்ச நேரம் அழுதுட்டுகூட இருந்தா. அப்புறம், அம்மா நான் இருக்கேன்னு சொல்லி எப்படியோ சமாளிச்சுட்டேன்,’’ என்று அவன் மனைவி சொன்னதைக் கேட்டதும் அவனுக்குச் சற்றே வருத்தமாக இருந்தது.
“பரவாயில்லை பரத். உனக்கு முக்கியமான மீட்டிங்னு சொன்னியே. எப்படிப் போச்சு?’’ என்று அவள் மேலும் தொடர்ந்தபோது பரத்தின் கைபேசி அழைத்தது.
“என்ன கெளதம்?’’ என்று சற்று மெதுவாக பேசினான் பரத்.
“முதல்ல போய் உன் ஈ மெயில் பாரு. அந்த ‘சிஇஓ’ மீட்டிங் முடிஞ்சி சிங்கப்பூர் விட்டு இன்னிக்கி சாயந்தரம் கிளம்பியாச்சு,’’ என்று அவன் சொன்னது எதுவும் பரத்திற்கு விளங்கவில்லை. கௌதமின் தொடர்பைத் துண்டித்துவிட்டு, அவசரமாக அவன் ஆபீஸ் ஈமெயில் பார்த்தான்.
‘சிஇஓ’ விடமிருந்து அந்த ப்ரோபோசல் பற்றி, ஒரு ஈமெயில் வந்திருந்தது. அதில் அவன் ஷங்கரை, அந்த ப்ரோபோசல் போட்டதற்காக பாராட்டியிருந்தார்.
ஷங்கர் அந்த ‘சிஇஓ’ கூட தனியாக லஞ்ச் ஏற்பாடு செய்து, அவர் நேரத்தை வீணடிக்காமல் அந்த நேரத்தில்கூட ப்ரோபோசல் பற்றி விளக்கியதையும், அது அவர்கள் கம்பெனிக்கு நிறைய லாபம் கொடுக்கும் என்கிற நம்பிக்கையையும் எழுதியிருந்தார்.
ஷங்கர் போன்ற திறமையானவர்கள், மேலும் கம்பெனிக்கு வேண்டும் என்று அந்த ஈமெயில் முடிந்தது.
“என்ன பரத்? வந்ததும் வராததுமா ஆபீஸ் மெயில் பார்க்கணுமா?’’ என்று அவன் மனைவி அவன் நினைவுகளைக் கலைத்தாள்.
“இன்னிக்கி காவ்யா என்ன பேசினா தெரியுமா? அவளுக்கு கதை சொல்லப் பிடிக்குமாம். ஆனா பஸ்சில போகும்போது, தன்னோட அப்பா கைபேசில எப்பவும் ஆபீஸ் வேலையே பார்க்கறதுனால, அவ பஸ்சில ஏதோ ஒரு தாத்தாக்கிட்ட பேசுவாளாம். இன்னிக்கி அவ பேசிமுடிக்கும்போது ‘ஐ லைக் பஸ் 47’ சொன்னதும், எல்லாரும் சிரிச்சுட்டாங்களாம்.’’
“சரி, நீயும் ஆபீஸ் வேலையில மூழ்கியிருக்கறதுனால, நாளையிலிருந்து காவ்யாவை அவ ஸ்கூல் பஸ்சில போக ஏற்பாடு பண்ணிட்டேன். அவளுக்கும் அதில ரொம்ப சந்தோஷம். அடுத்த வாட்டி பேசும்போது ‘ஐ லைக் ஸ்கூல் பஸ்’னு பேசுவேன்னு அவ சொன்னதும், எனக்கு குழந்தைங்க எப்படி சட்டுனு மாறிடறாங்கன்னு நினைச்சு ஆச்சர்யமா இருந்துச்சு,’’ என்று அவன் மனைவி அன்றைய தினத்தை முடித்தாள்.
பரத் தூங்கிக்கொண்டிருந்த காவ்யாவைப் பார்த்தான். தன் வலது கை கட்டை விரலை நன்கு சப்பியவாறு, அமைதியாக தூங்கிக்கொண்டிருந்தாள்.
அடுத்த நாள் காலை. பரத் அந்த 47 பஸ்சில் தனியாக இருந்தான். அவனருகே இருந்த இருக்கை காலியாக இருந்ததால், அந்தத் தாத்தா அவனருகே வந்து அமர்ந்தார்.
“என்ன? உங்க பொண்ணு வரலையா?’’ என்று அவர் கேட்டதும், “இல்லை, அவ இன்னிலேர்ந்து ஸ்கூல் பஸ்சில போறா’’ என்று பதிலளித்தான் பரத்.
“...ம் பசங்க நம்ம கையை விட்டுட்டு என்னிக்கி தனியா ஒரு சிக்னல் தாண்டறாங்களோ, அன்னிக்கிதான் அவங்க நம்ம விட்டு பிரிஞ்சு போற முதல் அடி எடுத்துவைக்கறாங்க. அப்புறம் ப்ரண்ட்ஸ் தான் அவங்க உலகம். அதனால, அந்த நாள் வரவரைக்கும், நம்மளால எவ்வளவு நேரம் அவங்களோட செலவழிக்க முடியுமோ, அவ்வளவு நேரம் செலவழிக்கணும்,’’ என்று ஆரம்பித்தார்.
“நான் இப்போ வீட்டில தனியா தான் இருக்கேன். என் பசங்களுக்கும் கலியாணம் ஆகி அவங்க குடும்பம்னு போயிட்டாங்க. சரி, வீட்டில சும்மா உட்கார்றதுக்குப் பதிலா தினம் காலையில இந்த பஸ்சில கடைசி ஸ்டாப் வரை போயிட்டு வருவேன். நிறைய பள்ளிக்கூட பசங்க வருவாங்க. அவங்களோட பேச்சுக் கொடுக்கும்போது, மனசும் லேசாயிடும். உண்மையச் சொல்லணும்னா, ‘ஐ லைக் பஸ் 47’ என்று முடித்தார்.
வேலைதான் வாழ்க்கையா அல்லது வேலை வாழ்க்கையில் ஒரு பகுதியா என்று தெரியாமல் குழம்பி நிற்கும் பலரில், நம் கதையின் நாயகன் பரத்தும் ஒருவன்.
பஸ் எண் 47, இப்போது காவ்யாவின் பள்ளிக்கூட ஸ்டாப்பை தாண்டிச்சென்றது.
*