அமிர்தம்

அமிர்தம்

1 mins read

அமிர்தம் கிடைக்குமிடம்

எங்கென்று கேட்டேன்.

பாட்டி சொன்னாள்

'பாற்கடல் பரந்தாமனிடம்' என்று...!

தாத்தா சொன்னார்

'சூடான இரண்டாம்-கப் கோப்பி-யில்'

என்று!

அம்மா சொன்னாள்

'மழலை முத்தத்தில்' என்று!

அப்பா சொன்னார்

'திரைகடல் திரவியத்தில்' என்று!

உடன்பிறந்தவள் சொன்னாள்

'காதல் மயக்கத்தில்' என்று!

உடன்பிறந்தவன் சொன்னான்

'உண்மை நட்பில்' என்று!

நட்பு சொன்னது

'இருப்பதைப் பகிர்தலில்' என்று!

தாகம் எடுத்தது;

எஃகு குழாயைத் திறந்து

லோட்டாவில் நிறைத்தேன்,

நுனிநாவில் அருவியென வீழ்ந்ததை

தம்கட்டி அண்ணாந்து பருகினேன்;

தவிப்பு தணிந்தபின்

மிடற்றில் அடக்க முயன்று

தோற்ற நொடியில் உணர்ந்தேன்

அமிர்தம் எதுவென்று - அஃது

கிடைக்குமிடம் எங்கென்று!

- மோகனபிரியா தனசேகரன்