சிறுகதை:
சிவக்குமார் KB
டிசம்பர் - வருடத்தில் இந்த ஒரு மாதம் தான் எல்லோராலும் அவரவர் கண்ணோட்டத்தில் எதிர்பார்ப்போடு வரவேற்கக்கூடிய மாதங்களில் ஒன்று. உலகத்தின் நான்கில் மூன்று பரப்பளவு முன் பனிக்காலமாக மாறி, சில்லென்று வீசும் பனிக்காற்றின் வரவேற்போடு அதிகாலையில் தோன்றும் சூரியன், தன் சுடர்களின் ஒளியை இருளிடம் தோற்று விரைவாகவே மறைந்துவிடும் மாதம்.
ஆனால், இந்தக் கடைசி மாதம் பல நிறுவனங்களின் வருடாந்தர லாப நஷ்டத்தைக் கணக்கிடும் அளவுகோலாக அமைவதால், அதே சில்லென்று வீசும் காற்றோடு தினம் தோன்றும் சூரியன் ஒரு சிலருக்கு அவர்கள் இலக்கின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சுடராகவும் அமைகிறான்.
அப்படி ஒரு இலக்கின் அளவுகோலை தன் முன் நிறுத்தி மீண்டும் மீண்டும் கணக்கைக் கூட்டிப் பார்த்த ராமிற்கு, அந்த வருடத்தின் விற்பனை இலக்கு கைக்கெட்டும் தூரத்தில் இருந்தது.
இன்னும் ஒரு மென்பொருள் ஆர்டர், ஆம் ஒரு மென்பொருள் ஆர்டர் கிடைத்தால் போதும், அவன் அந்த கம்பெனியில் சேர்ந்து மூன்று வருடத்திற்குப் பின் முதல் முறையாக விற்பனை இலக்கை எட்டிவிடுவான். ஆனால், அவன் முன் இருந்ததோ வெறும் முப்பது நாட்கள்தான்.
அதை 'வெறும் முப்பது நாட்கள்தான்' என்று பார்ப்பதா, அல்லது 'இன்னும் முப்பது நாட்கள் இருக்கிறதே' என்று பார்ப்பதா என்பது அவரவர் விற்பனைத் திறனை பொறுத்தது என்று அவன் மேல் அதிகாரி சொல்வது அவன் நினைவிற்கு வந்தது.
டேய் ராம்! சும்மாதானே இருக்க. போய் ஒரு காபி குடிச்சிட்டு வரலாம்" என்று அவனை கூப்பிட்ட சுந்தரின் குரல்கூட அவன் காதில் விழவில்லை.
சற்று தள்ளிப்போய் திரும்பிப் பார்த்த சுந்தருக்கு, ராம் தன் இருக்கையிலேயே உட்கார்ந்திருந்ததை பார்த்து சற்று கோபம் வந்தது.
"டேய்!! அந்த பேப்பர திருப்பித் திருப்பிப் பார்த்தா இலக்கு எட்டிடுமா? இந்த வருஷம் அவ்ளோ தான் நினைச்சிக்கோ" என்று சுந்தர் சொன்னபோது ராம் மெல்ல தலை நிமிர்ந்து அவனை பார்த்தான்.
"உனக்கென்னப்பா! நீ இலக்கை எப்போதும் எட்டிடுவ. என் நிலைமைதான் மோசம். கடுப்பா இருக்குடா. இந்த இலக்கை நினைச்சு, ராத்திரி தூக்கமே வரலை. நானும் எவ்ளோ உண்மையா உழைக்கிறேன். வரப்போற வாடிக்கையாளர் எப்படி எதிர்பார்க்கறாங்களோ அதுக்கு ஏத்த மாதிரி எல்லாம் பண்ணறேன். ஆனாலும் வருஷா வருஷம் இந்த இலக்கு எப்பவும் கை விட்டுப்போகுது. ஏன்னு புரியலையே?" என்று சலித்துக்கொண்டான் ராம்.
"டேய் ராம், நீ உழைக்கிற தரம் டா, பொழைக்கிற தரம் இல்ல. ரொம்ப ஒழுக்கத்தோடு நல்லவனா இருந்தா, ஒண்ணும் விற்க முடியாது. புது வாடிக்கையாளருக்கு என்ன வேணுமோ, அதை புரிஞ்சுக்கணும். அப்புறம் அங்க இங்க கூட்டிட்டு போய் அவனை குஷி படுத்தணும். நீ சுத்த வேஸ்டு டா!" என்று சுந்தர் சொன்னது, 'நங்' என்று ராம் மண்டையில் அடித்தது.
"நீ இப்போ முதல்ல கிளம்பி காபி குடிக்க வா, சொல்றேன்," என்று சுந்தர் அவன் பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து நகர, ஏதோ வாழ்க்கைப்பாடம் சொல்லிக்கொடுக்க போகும் ஆசிரியரைப் பின்தொடர்வதுபோல், ராம் சுந்தரைப் பின்தொடர்ந்து சென்றான்.
"ராம், நீ இருக்கறதை மட்டும் சொல்லிப்புட்டு, வாங்கறவன் பதிலுக்கு காத்துக்கிட்டிருந்தா ஒரு மண்ணும் விற்க முடியாது" என்று காபியை குடிப்பதற்கு முன்னால் 'சுளீர்' என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான் சுந்தர்.
"இப்போ என்னைப் பாரு. வருஷா வருஷம் தவறாம இலக்கை எட்டறேன். எப்படி முடியுது?" கொஞ்சம் யோசிச்சியா?" என்று அவன் தொடர்ந்து கேட்ட கேள்விக்கு, "நீ வரப்போற வாடிக்கையாளர்கிட்ட இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வித்துடுற போல," என்று ராம் சொன்ன பதில் சுந்தருக்கு சிரிப்பைத்தான் வரவழைத்தது.
"ராம், அப்படி நான் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி விற்றா, இந்த நேரம் எந்த வாடிக்கையாளரும் திரும்பி வந்திருக்கமாட்டான். நம்ம கம்பெனி பெயரும் நாசமாயிருக்கும். அப்படி ஒண்ணும் நடக்கலியே. அப்போ என்ன காரணம் யோசிச்சியா?" என்று சுந்தர் மேலும் தொடர்ந்தான்.
"எந்த ஒரு மென்பொருள் விற்கும்போதும், அதில் குறை நிறை இருக்கும். எல்லாம் மீட்டிங்கில் பேசி முடிவாகறதில்லை. அந்த குறை நிறையைச் சொல்ல வேண்டிய முறையும், இடமும் வேறு. அதை புரிஞ்சுக்காம வாடிக்கையாளர் வாங்கலைன்னு சொன்னா எவன் நம்புவான்? உனக்கு சாமர்த்தியமா விற்க தெரியலைனுதான் சொல்லுவான்," என்று சுந்தர் சொன்னது ராம் மனதில் குழப்பதை ஏற்படுத்தியது.
"வாங்கறவனை அங்க இங்க கூட்டிட்டுப் போய் குஷி படுத்தணும்னு சொல்லற. அப்போ, அது லஞ்சம் இல்லையா?" என்று ராம் கேட்டதற்கு, "அது நீ பார்க்கிற பார்வையைப் பொறுத்தது,'' என்றான் சுந்தர்.
"இப்போ நாம ரெண்டு பேரும் காப்பி குடிக்கிறோம். நான்தான் வாங்கினேன். இது லஞ்சமா? இல்லையே. ஒரு நட்புக்கான அடையாளம். அவ்வளோதான். அதே மாதிரி, வரப்போற வாடிக்கையாளரை பப்புக்கு கூட்டிட்டு போய் அவனை குஷி படுத்தினா, அதுவும் வரப்போகும் நட்புக்கான அடையாளம். அவ்வளோதான். அந்த நேரத்துல, நீ அவன்கிட்ட குறை நிறைகளை எடுத்து சொன்னா அவனும் யதார்த்தமா புரிஞ்சுக்குவான். இதெல்லாம் என் அனுபவத்தில சொல்றேன். அப்படி கூட்டிட்டுப்போறதுல.." என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ராமின் மேல் அதிகாரி அவனை கைபேசியில் அழைத்தார்.
"ராம், ஒரு புது வாடிக்கையாளர் நம்ம மென்பொருளைப் பார்க்கணும்னு சொல்றார். அவர் இன்னும் ரெண்டு நாளைக்கு தாய்லாந்தின் பேங்காக் நகரத்திலே இருக்காராம். மென்பொருள் பிடிச்சா உடனே 'செக்' கொடுக்கத் தயாரா இருக்காராம். நீ உடனே போய் அவரை நாளைக்கே பாரு. இந்த வாடிக்கையாளர்கிட்ட நீ வித்துட்டா, உன்னோட வருடாந்திர இலக்கு எட்டிடுவ. பேசாம, இன்னிக்கி இரவே நீ சிங்கப்பூரிலிருந்து பேங்காக் புறப்படு," என்று அவன் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அவர் ஆணையிட்டார்.
ராம் பேசிமுடித்த கையோடு சுந்தரை ஒரு புன்முறுவலோடு பார்த்தான்.
"பாஸோட கால். ஒரு புது வாடிக்கையாளரைப் பார்க்கணுமாம். அவர் இன்னும் ரெண்டு நாளைக்கு பேங்காக்ல இருப்பாராம். அதனால இன்னிக்கி இரவே.." என்று ராம் முடிப்பதற்குள், "டேய், பழம் நழுவி பாலில் விழுதுடா! இதைவிட ஒரு நல்ல இடமும் சந்தர்ப்பமும் அமையாது. பேங்காக்ல அவரை எங்க கூட்டிட்டுப் போகணும்னு நான் சொல்லறேன்," என்று சுந்தர் அடுத்த பத்து நிமிடத்திற்கு பாடமே நடத்தினான்.
அதை முழுதும் கேட்ட ராமிற்கு ஏனோ மனம் உடனடியாக ஒப்பவில்லை.
"டேய், இது கொஞ்சம் ஓவர். நீ விட்டா என்னை என்னென்னவோ வேலையெல்லாம் பார்க்கச் சொல்லுவ போல. இதெல்லாம் என்னால முடியாது. வேணும்னா ஒரு காபி ஷாப் இல்லாட்டி ஒரு ரெஸ்டாரெண்ட் கூட்டிட்டுப் போறேன்," என்று சொன்னவனைப் பார்த்து "டேய்....உன்னை என்னத்த சொல்லறது! என்னால உனக்கு வழி சொல்லத்தான் முடியும். அந்த வழியில போய் பிழைக்கிறது உன் திறமை," என்று சுந்தர் கிளம்பிவிட்டான்.
அன்றிரவு பேங்காக் கிளம்பும் வரை ராமின் மனம் ஏனோ அலைபாய்ந்துகொண்டே இருந்தது. வீட்டிலிருந்து விமான நிலையம் செல்லும்போது அவன் வீட்டாரிடம்கூட சரியாக சொல்லிக்கொள்ளவில்லை. அவன் மனதில் சுந்தரின் பேச்சு மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டேயிருந்தது. சுந்தர் சொல்வது போல் நல்லவனா இருந்தா பிழைக்க முடியாதுபோல. அவன் சொல்லற மாதிரி அங்க இங்க கூட்டிட்டுப்போனா தான் என்ன தப்பு? வாழ்க்கையில் செல்லும் பாதை முக்கியமா அல்லது அடையும் இலக்கு முக்கியமா? அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
தாய்லாந்தின் பேங்காக் மிக பழமைவாய்ந்த சுற்றுலா நகரம். அவன் பேங்காக்கில் தரையிறங்கியபோது இரவு மணி ஒன்று. விமான நிலையத்திலிருந்து அவன் தங்கும் நட்சத்திர ஹோட்டல் செல்லும் வழியெல்லாம் மின்மினுத்தன. இரவு ஒரு மணியாகியும், தெருக்கள் வண்ண வண்ண விளக்குகளின் பிரகாசத்தில் ஜொலித்தன.
சுந்தர் சொன்ன 'சுகும்விட்' என்ற இடம் மற்ற இடங்களைவிட இன்னும் பிரகாசமாக ஜொலித்தது. சாலையின் இரண்டு பக்கமும் பப்புகளும், மசாஜ் கடைகளுமாக இருந்தன.
அந்தக் கடைகளின் வாசலில் பெண்கள் கூட்டம் கூட்டமாக நின்று வாடிக்கையாளர்களை மடக்க முனைந்தார்கள். அரைகுறை ஆடையில் நின்ற அந்த பெண்களைப் பார்த்த ராம், ஒரு நிமிடம் அவர்களின் அழகைக் கூட ரசிக்கத் தொடங்கினான்.
அந்த நிமிடத்தில், அவன் செய்யும் வேலைக்கும் அவர்கள் செய்யும் வேலைக்கும் என்ன வித்தியாசம் என்றுகூட அவன் மனம் நினைத்தது. இருவரும் வாடிக்கையாளர்களைத்தான் தேடுகிறார்கள்!! அவன் விற்கும் மென்பொருளில் குறை நிறை உண்டு. இவர்கள் ஆடையிலும் குறை நிறை உண்டு. பின் என்ன வித்தியாசம் என்று அவன் மனம் புன்முறுவலோடு அவனிடம் பேசியது. அந்த சபலத்தின் பிடியில் சிறிது நேரம் மனம் அலைபாய்ந்தது. அதை அடக்கும் பொருட்டு அவனுள் இருந்த ராம், இப்போது அவனிடம் கேள்வி எழுப்பினான். "ராம், வந்த வேலையை கவனி. மென்பொருள் மேல நாட்டம் வை. பெண்பொருள் மேல் இல்லை!' என்று ஹாஸ்யமாக திசைதிருப்பினான்.
ஒரு வழியாக அவன் தங்கவேண்டிய நட்சத்திர ஹோட்டலை அடைந்தபோது, தூக்கம் சொக்கியது. ஆனால், அறையின் பஞ்சுமெத்தையில் படுத்தவனுக்கு, அன்று இரவு முழுக்க ஏனோ தூக்கம் வரவேயில்லை.
அடுத்த நாள் காலை, வாடிக்கையாளர் சந்திப்பு.
நான்கு மணி நேரத்திற்கு மேல், தொண்டை தண்ணி வற்ற ராம் அந்த மென்பொருள் பற்றி அந்த புதிய வாடிக்கையாளரிடம் விளக்கினான். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட அந்த வாடிக்கையாளர், முடிவில் ஒன்றும் சொல்லவில்லை. பிடித்ததா, பிடிக்கலையா என்றுகூட முகபாவம் இல்லை. சாதாரணமாக இப்படிப்பட்ட சந்திப்புகளில், அவர்கள் முடிவைத் தெரிவிக்க ராம் தன் கைப்பேசியையும், மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டு கிளம்பி விடுவது வழக்கம். ஆனால், இம்முறை சுந்தர் சொல்படி நடக்க தயாரானான்.
"சார், உங்களுக்கு இதைப் பற்றி யோசிக்கணும் நினைச்சா இன்னிக்கி மாலை நாம 'சுகும்விட்ல' ஒரு பப்பில பேசலாம். உங்களுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணின மாதிரி இருக்கும். நான் உங்கள கூட்டிட்டுப் போக எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்க. எந்த நிர்பந்தமும் இல்லை" என்று சுந்தர் சொல்லிக்கொடுத்ததை மனப்பாடம் பண்ணியவன் போல் சொன்னான்.
"கண்டிப்பா மிஸ்டர் ராம். இது நல்ல யோசனை. எனக்கும் பாங்காக் நைட் லைஃப் பார்க்கணும்" என்று அவர் உடனே அதற்குப் பதில் சொன்னதும், சுந்தர் அவனை பார்த்துக் கண்சிமிட்டுவது போல் உணர்ந்தான்.
சுகும்விட் - மாலை நேரத்திலிருந்தே களை கட்டியது. சுந்தர் சொன்ன அந்த பப்பிற்குள் நுழைந்தும் அவர்கள் இருவரையும் வரவேற்க இரண்டு அரை குறை ஆடை அணிந்த பெண்கள் வந்தனர்.
"குட் ஈவினிங். வெல்கம், கேன் வி கெட் எ ட்ரிங்க்?" என்று கேட்டதோடு நிற்காமல் அவர்கள் இருவரையும் தங்களுடன் அணைத்தவாறு வரவேற்றனர். அவனோடு வந்த வாடிக்கையாளர், அப்போது 'குட் சாய்ஸ்' என்றார். அவர் இடத்தை பற்றி சொன்னாரா அல்லது அவரை அணைத்த பெண்ணைப் பற்றி சொன்னாரா என்று ராமிற்கு தெரியவில்லை.
அந்த இரண்டு பெண்களும் இப்போது இவர்கள் இருக்கைக்கு வந்தனர். வந்தவர்கள் கோப்பையை மட்டும் நிரப்பாமல் இவர்கள் அருகிலேயே அமர்ந்து தங்கள் கோப்பையையும் நிரப்பினர். பின், "சியர்ஸ்" என்று சொல்லிவிட்டு அவர்கள் மடியில் உட்காராத குறையோடு, உடலோடு உடல் உரசினர்.
ராமிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மெல்ல அவன் அருகே இருந்த பெண்ணைப் பார்த்துச் சிரித்தான். அவளும் மெல்ல சிரித்துவிட்டு அந்த பப்பில் ஒலித்த பாட்டை ரசிப்பதுபோல் தலையை ஆட்டிக்கொண்டிருந்தாள். எதிரே அமர்ந்து வாடிக்கையாளரோ, அவர் அருகே இருந்தவளிடம் ஏதோ பல நாள் பழகியவர் போல் கொஞ்சவே ஆரம்பித்துவிட்டார். கொஞ்சும் மும்முரத்தில் இருந்தவரை, "சார், இன்னிக்கி பார்த்த மென்பொருள் பற்றி என்ன நினைக்கறீங்க?" என்றான் ராம். அவரோ, கோப்பையை உயர்த்தி "முதல்ல இந்த இரவை ரசிப்போம் மிஸ்டர் ராம். இன்னும் ரசிச்சு அனுபவிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. அவசரப்படாதீங்க!!" என்று சொல்லிவிட்டு அவர் அருகே இருந்தவளிடம் மீண்டும் கொஞ்சி குலாவத் தொடங்கிவிட்டார்.
ராமிற்கு இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. மெல்ல அந்த பப்பை சுற்றிப் பார்த்தான். அங்கு வந்திருந்தவர்கள் எல்லோர் அருகிலும் அரைகுறை ஆடை அணிந்த பெண்கள்.
ஏதோ அந்தப் பெண்களை தினம் பார்த்துப் பழகுவதுபோல் உடலோடு உடல் உரசி, சந்தோஷத்தில் சிரித்துக்கொண்டிருந்தார்கள். மீண்டும் அவன் அருகே உட்கார்ந்தவளைப் பார்த்தான். சரி, ஏதாவது பேசலாம் என்று ஆரம்பித்தான்.
"ஹௌ ஓல்ட் ஆர் யு?" என்று அவளிடம் கேட்க , அவள் குபீர் என்று சிரித்துவிட்டாள். சொல்லுங்க பார்ப்போம் என்ற பாணியில் ராமின் கன்னத்தில் ஒரு கேள்விக்குறியை வரைந்தாள்.
அவளின் அழகைக் கொஞ்சம் பக்கத்தில் பார்த்த ராம், ''ஹ்ம்ம் 25" என்று சொல்ல, அதை கேட்டவள் அவன் மீது சாய்ந்து, அவன் கன்னத்தில் அழுத்தி ஒரு முத்தம் கொடுத்திவிட்டு "ஜஸ்ட் 16" என்று குழைந்தாள்.
ராமிற்கு அப்போது என்னசொல்வது என்று தெரியவில்லை. 'சே!! பதினாறா?. படிக்க வேண்டிய வயசுல!' என்று அவளை திட்ட அவன் மனம் நினைத்தபோது அவன் கைபேசிக்கு அழைப்பு வந்தது. கைபேசியில் அழைத்தது அவன் மனைவி.
சற்று வெளியே சென்று சத்தம் குறைந்த இடத்தில் அவன் அந்த அழைப்பை எடுத்தான்.
"ராம். இப்போ பேசலாமா?" என்று அவனிடம் அவள் கேட்டதற்கு "ஹ்ம்ம் சொல்லு" என்றான்.
"உன் செல்ல பதிமூணு வயசுப் பொண்ணு, இன்னிக்கி பெரிய பொண்ணு ஆயிட்டா. இனிமேல் அப்பா உன்னை கட்டி அணைச்சு முத்தமெல்லாம் கொடுக்கமாட்டார் என்று சொன்னதும், ஒரே அழுகை. இன்னும் விவரம் வரலை. அவளோட கொஞ்சம் பேசு ராம்," என்று சொல்லிமுடிக்க, "அப்பா.." என்று ஒரு குரல் மறுமுனையில் அவனை அழைத்தது.
அதற்குமேல் ராமிற்கு எதுவும் பேச முடியவில்லை. அவன் எதிரே கோப்பையும் கையுமாக, அரை குறை ஆடை அணிந்து தினம் ஒரு ஆணிடம் கொஞ்சிப் பேசும் அந்த பதினாறு வயதுப் பெண்ணைப் பார்த்தான்.
அவள் அவனை மீண்டும் உள்ளே வருமாறு கையசைத்தாள்.
"இப்படித்தான் வருடாந்திர இலக்கை எட்டணுமா?
"இலக்கு முக்கியமா இல்லாட்டி அதை அடையும் பாதை முக்கியமா?" என்று அவனுள் இருந்த ராம், அவனிடம் மீண்டும் கேட்டான்.
"ஒண்ணும் அறியாத வயசு பெண்களை இந்தத் தொழில்ல தள்ளி விட்டவங்க மட்டும் தப்பு பண்ணலை, அதை ரசிக்கிற நாமும் குற்றவாளிங்க தான்," என்று அவன் மனம் குமுறியது.
அவனையும் அறியாமல், கால்கள் வேகமாக அவன் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலை நோக்கி நகர்ந்தன.