அன்று காலை மீட்டிங் முடிந்து, வெளியே வந்த ராமிடம், அவன் மேலதிகாரி பாஸ்கர் அவனிடம் பேசியதுதான் மனதில் ஒலித்துக்கொண்டிருந்தது.
'ராம், சுருக்கமா சொல்லணும்னா, அவன் ஒரு வணங்காமுடி. போன ஒரு வருஷத்துல, நாலு ப்ரொஜெக்ட் மாறியிருக்கான். அவன் வேலை பண்ணின எல்லா ப்ரொஜெக்ட்லயும் மேனேஜரோட, இல்லாட்டி டீம்ல இருக்கற மத்தவங்களோட ஏதாவது ஒரு பிரச்சினை. ஆனா, எப்படியோ தெரியலை, நம்ம கம்பெனில புதுசா சேர்ரவங்களுக்காக வைக்கிற பரீட்சையில இதுவரைக்கும் யாருமே வாங்காத நூறு விழுக்காடு வாங்கிட்டான்னு, அவனை இன்னும் ஒரு ப்ரொஜெக்ட்ல பயிற்சியளிக்க கம்பெனி ஹெச்ஆர் மூலம் எனக்கு பிரஷர். அதான், அவனை உன்னோட ப்ரொஜெக்ட்ல இப்போ சேர்த்துட்டேன். ஆனா நீ ஒண்ணும் கவலைப்படாதே. நானே அவனை நேர்ல சந்திச்சு மேல இருக்கறவங்க சொல்லறபடி கேட்டு வேலை பண்ண சொல்லியிருக்கேன். இல்லாட்டி, இதுதான் அவனுக்கு இந்த கம்பெனில கடைசி வேலைனு சொல்லிட்டேன்'.
பாஸ்கர் அப்படி சொன்னதோடு நிற்காமல், மேலும் ஒன்று சொன்னதுதான் ராமின் மனதை வாட்டியது.
'நீ ரொம்ப நல்லவன் ராம். ஆனா இந்த மாதிரி வணங்காமுடி பசங்ககிட்ட ரொம்ப நல்லவனா இருக்காதே. அவனை ராத்திரி பகல்னு பார்க்காம வேலை வாங்கு. ஆல் தி பெஸ்ட்' என்று அவர் சொன்னதை நினைத்து, சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் தன் இருக்கையில் வந்து அமர்ந்தான்.
அமர்ந்த கையோடு, நம் கதையின் நாயகன், அதான் அந்த வணங்காமுடியை 'லஞ்ச்' முடிந்து தன்னை வந்து பார்க்குமாறு மெயில் அனுப்பினான்.
'ஹாய் ராம்' என்று மதியம் ராமின் அறைக்குள் வந்தான் அந்த வணங்காமுடி. பொதுவாக அந்த கம்பெனியில் இருப்பவர்கள், உயர் பதவியில் இருப்பவர்களை 'சார்' என்று அழைப்பது வழக்கம். ஆனால் இவன் ராமை, பெயர் சொல்லி அழைத்தான். அதுமட்டுமல்ல, வந்தவன் ராம் முன்னே இருக்கும் இருக்கையில் அமர்ந்தான்.
ராம் அவனை சிறிது நேரம் அமைதியாக பார்த்தான்.
கலைந்த தலைமுடி, ஹார்ரி பாட்டர் போல ஒரு கண்ணாடி, சவரம் பார்க்காத முகம், பில் கேட்ஸ் போல முழுக்கை மறைக்கும் டீ ஷர்ட், ஆங்காங்கே கொஞ்சம் கிழிந்த ஜீன்ஸ் என்று டெக்னாலஜி மொழியில் சொல்லக்கூடிய 'கீக்' (Geek) போல தோற்றமளித்தவன், அந்த அறையை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான்.
"வாவ்... வக்லவ் ஸ்மில், யூவல் ஹராரி... அப்புறம் எலன் மஸ்க் பத்தின புக். நீங்களும் என்ன மாதிரி புக்ஸ் படிப்பீங்களா?'' என்று அவனே பேச்சை ஆரம்பித்தான்.
''ஹ்ம்ம்...'' என்று பதில் சொன்ன ராமின் மனதில், இப்படிப்பட்டவன் முன்பு வேலை பார்த்த கம்பெனியில் ஒரு வருஷத்திற்கு மேல் எப்படி தாக்குப்பிடித்தான் என்ற கேள்வி எழுந்தது.
''நீ ஏன் அடிக்கடி ப்ரொஜெக்ட்ஸ் மாறிட்டிருக்க?'' என்ற ராமின் கேள்விக்கு, ''இதுக்கு உண்மையான பதில் வேணுமா?'' என்று ஆரம்பித்தான்.
''எனக்கு மேல இருந்தவன் எல்லாம் முட்டாள். புத்திசாலியோட எவ்வளவு மணி நேரம் வேணும்னாலும் வேலை பார்க்கலாம். ஆனா முட்டாள்களோட என்னால வேலை பண்ண முடியாது. இந்த புக்ஸ் எல்லாம் படிக்கறதுனால, நீங்க அப்படிப்பட்டவரா இருக்கமாட்டீங்கனு நினைக்கிறேன்,'' என்று முடித்தான்.
"உனக்கு இங்க ஒத்துவரலைனா பேசாம வேற கம்பெனிக்கு போலாமே?'' என்று ராம் கேட்டதற்கு, ''கண்டிப்பா போகத்தான் போறேன். ஆனா அதுக்கு முன்னாடி கொஞ்சம் கையில பணம் சம்பாதிக்கணும்,'' என்ற அவன் பதில் வித்தியாசமாக இருந்தது.
"நான் அமெரிக்கா போய், நியூரோ டெக்னாலஜில டாக்டர் பட்டம் வாங்கணும். அதுதான் என்னோட முதல் குறிக்கோள். ஆனா, அதுக்கு முதல்ல கையில கொஞ்சம் காசு வேணும். அதுக்காக வெள்ளைக்காரன் அங்கிருந்து நமக்கு அனுப்பற குப்பை வேலையெல்லாம் வாழ்க்கைமுழுக்க பண்ணிட்டிருக்கற ஆள் நான் இல்லை. எனக்கு அங்க போய், அவனுக்கு மேல உட்கார்ந்து என்னால புதுசா கண்டுபிடிக்க முடியும்னு காமிக்கணும். அதுக்கான திறமை எனக்கு இருக்குனு தெரியும்,'' என்று சொன்னவன் மேலும் தொடர்ந்தான்.
"என்னைப் பத்தி, இங்க யாருக்கும் நல்ல அபிப்ராயம் இல்லைனு எனக்குத் தெரியும். என்ன வணங்காமுடி, சூன்யம், லூசு இப்படியெல்லாம் பேசிக்குவாங்க. ஐ டோன்ட் கேர்! அவங்கதான் முட்டாப்பசங்க! அவங்களுக்கு ஒண்ணு தெரியலை. இந்த உலகம் முன்னேறி இருப்பதற்கான காரணம், வணங்காமுடிகள்தான். கேள்வி கேட்டதுனால தான் அறிவியலிலும் சரி, அரசியலிலும் சரி, மாற்றம் ஏற்பட்டிருக்கு. அதனால எனக்கு எல்லார் மாதிரியும் வேலை பண்ண முடியாது. ஏதாவது கஷ்டமா, சவாலான பிரச்சினை இருக்கற வேலை உங்க ப்ரொஜெக்ட்ல இருந்தா எனக்குக் கொடுங்க," என்று ஒரே மூச்சாய் பேசினான்.
இப்படிப்பட்டவன் எங்கிருந்து கிளம்பினான்? தினம் யாரோ ஒருத்தன் கொடுக்கும் வேலையைப் பண்ணிட்டு, கேன்டீனில் பஜ்ஜி சாப்பிட்டு, இரவு நண்பர்களோடு தண்ணி அடிக்கும் ரகத்தைச் சேர்ந்தவன் இவன் இல்லை என்று ராமிற்கு நன்றாகப் புரிந்தது. அறிவுக்கும் திறமைக்கும் சவாலாக தீனி கேட்டு வந்திருக்கும் இந்த இளைஞனை, மற்றவர் போல நடத்தக்கூடாது என்றும் தெளிவாகப் புரிந்தது.
''ஹ்ம்ம்...சரி. இந்த ப்ரொஜெக்ட் பத்தி உனக்குச் சொல்லறேன்,'' என்று ராம் அடுத்த அரை மணி நேரத்துக்கு அவர்கள் செய்யும் அந்த மென்பொருள் ப்ரொஜெக்ட் பத்தியும், அதில் அவன் சொன்னதுபோல் அந்த வெள்ளைக்காரன் கேட்கும்படி செய்யவேண்டிய கட்டாயங்களையும் விளக்கினான். அதுமட்டுமில்லாமல், அந்த ப்ரொஜெக்ட்டில் அவர்கள் ஒரு புதிய டெக்னாலஜி உபயோகிப்பதாகவும், அதைப் பற்றி வணங்காமுடியிடம் நிறைய படிக்குமாறு கேட்டுக்கொண்டான்.
''இன்ட்ரஸ்ட்டிங். நான் அந்த புது டெக்னாலஜில வேலை பண்ணறேன். அப்புறம், அந்த டெக்னாலஜில வர கஷ்டமான பிரச்னைகளை எனக்குக் கொடுங்க. அதை நான் ஒரு சவாலா எடுத்து முடிக்கறேன். ஆனா ஒரு வேண்டுகோள். இந்த காலையில ஒன்பது மணிக்கு வரது, தினம் சும்மா மீட்டிங்கில் உட்கார்ரது, ரிப்போர்ட் அனுப்பற வேலையெல்லாம் எனக்கு கொடுக்காதீங்க. அந்த டெக்னாலஜியை உபயோகப்படுத்தற வேலையும், அதுல வர பிரச்சினைகளைத் தீர்க்கற வேலையையும் எனக்கு எப்ப வேணும்னாலும் கொடுங்க. ராத்திரி பகல்னு பார்க்காம முடிச்சுக் கொடுக்கறேன்,'' என்று சொல்லிவிட்டு ராமின் அறையிலிருந்து கிளம்பினான் வணங்காமுடி.
வணங்காமுடி கிளம்பிய பிறகு, பாஸ்கரை அழைத்தான் ராம். அவர் கேட்டுக்கொண்டதுபோல், அந்த வணங்காமுடியை ராத்திரி பகல் பார்க்காமல் வேலை செய்ய வைக்கப்போவதாக சொன்னதும், பாஸ்கருக்கு திருப்தி.
என்ன? ஒரு சின்ன இக்கட்டு மட்டும் இருந்தது. அந்த வணங்காமுடி அவர்கள் குழுவில் சேரப்போவதாக ராம் அறிவித்தபோது அனைவருக்கும் அதிருப்தி. ஆனால் அந்த புது டெக்னாலஜி சம்பந்தமான வேலையில் வணங்காமுடி இருக்கப்போவதாகவும், அதில் வரும் சவாலான பிரச்சினைகளை அவன் கையாளப்போவதாகவும் ராம் சொன்னபிறகு, அந்த தலைவலி பிடித்த சவாலான வேலை அவர்களுக்கு வரவில்லை என்று அவர்களுக்கும் திருப்தி!!
மூன்று மாதங்கள் கடந்தது. ப்ரொஜெக்ட்டும் வேகமாகச் சென்றது.
டீம் மீட்டிங் நடக்கும்போது அந்த வணங்காமுடி அவ்வப்போதுதான் வருவான். அப்படியே ஏதாவது ஒரு முறை வந்தாலும், ஏதோ சிந்தனையில், அந்த புது டெக்னாலஜி பற்றி விதவிதமாக பேசுவான். அவன் பேசுவதையும், அனுப்பும் கோப்புகளையும் ராம் டீமில் இருக்கும் மற்றவர்களுக்கு பகிருவதுண்டு. ஆனால் அதை புரியும் அளவிற்கான சக்தியும் திறமையும் அவர்களிடம் இல்லை.
அந்த மென்பொருள் தயாரிப்பின் முக்கிய கட்டமாக, அதை சோதனை செய்யும் வேலை தொடங்கியது. அந்த மென்பொருளில் வரும் பிரச்சினைகளை குழுவில் உள்ளவர்கள் கையாள தத்தளிக்கும்போது, ராம் அந்த பிரச்சினையை வணங்காமுடியிடம் தள்ளிவிட்டான். அவனிடம் கொடுத்த ஒரு சில மணி நேரங்களில் பிரச்சினை தீர்ந்துவிடும். இதில் ராமிற்கும் திருப்தி, வணங்காமுடிக்கும் சந்தோஷம். ஆனால் பிரச்சினை வேறு விதத்தில் வந்தது. ராமிற்கு அவனைக் கையாள வேண்டிய முறை தெரிந்திருந்ததால், வணங்காமுடிக்கு எப்போது வேண்டுமானாலும் வேலைக்கு வரலாம் என்று சலுகைகள் கொடுத்திருந்தான். வேலையை முடிப்பதுதான் கட்டாயம் என்று அவர்கள் இருவருக்கும் இருந்த ஒப்பந்தம். ஆனால் டீமில் இருந்த மற்றவர்கள், ராம் வணங்காமுடிக்கு மட்டும் தனிச் சலுகை கொடுப்பதாக மேலதிகாரி பாஸ்கரிடம் தனியாக புகார் செய்தார்கள்.
ஒரு மாலை, ராம் அறைக்கு வந்த பாஸ்கர், "ராம், ப்ரொஜெக்ட்ல அந்த வணங்காமுடி எப்படி வேலை பண்ணறான்?. சரியா இல்லாட்டி, வேலையை விட்டு தூக்கிடலாமா?'' என்று கேட்டார்.
"அய்யயோ!! பாஸ்கர், அவன் தான் முக்கியம். இந்த ப்ரொஜெக்ட்ல வர கஷ்டமான பிரச்சினையெல்லாம் அவனைத் தான் தீர்க்கச் சொல்லியிருக்கேன்'' என்றான் ராம்.
"அது சரி. ஆனா வேலைனா ஒரு கட்டுப்பாடு வேணும். அவன் எப்ப வேணும்னாலும் வேலைக்கு வாரான் போறானு சொல்லி கேள்விப்பட்டேன். உங்க குழுவில இருக்கறவங்களுக்கூட அது பிடிக்கலன்னு நினைக்கிறேன்,'' என்று அந்தப் பிரச்சினையைப் பற்றி ஆரம்பித்தார் பாஸ்கர்.
"பாஸ்கர், அவன் ஒரு தனி ரகம். மிச்சவங்க மாதிரி, ஒன்பது மணிக்கு வந்துட்டு அஞ்சு மணிக்குப் போற ரகம் கிடையாது. அப்புறம் எல்லார் மாதிரியும் மேல இருக்கறவங்க சொல்லறதைத் தட்டாம கேட்கச் சொல்லறது, இதெல்லாம் முடியாது. அவங்களைக் கொஞ்சம் வித்தியாசமாத்தான் கையாளனும்,'' என்று வணங்காமுடிக்காக வாதாடினான் ராம்.
"எனக்குப் புரியல ராம். ஒரு சில வேலை மட்டும்தான் பண்ணுவேன், நான் இப்படித்தான் இருப்பேன்னு சொல்லிக்கிட்டு இருக்கறவங்க அடுத்தவங்களுக்கு நல்ல எடுத்துக்காட்ட இருக்கறதில்லை. அதனால குழுவுல பிரச்சினை வரும். உங்களுக்குத் தெரியாதது இல்லை! என்னவோ, நீங்கதான் பெரிசா அவனை புகழறீங்க. அவனும் அவன் டிரஸ் பண்ணற விதமும் எனக்குப் பிடிக்கலை. இப்போ கூட அவனை, உங்க அறைக்கு வெளியில பார்த்தேன். மேலதிகாரி நான் வரேன் சொல்லி, ஒரு 'ஹலோ' கூட சொல்லலை. மரியாதையே தெரியாத பசங்க. அவன் வெறும் சூன்யம் ராம். வெறும் சூன்யம்!
"இந்த ப்ரொஜெக்ட் முடிஞ்சதும் அவனை எப்படியாச்சும் கழட்டி விட்டுடுவோம்,'' என்று பாஸ்கர் முடித்ததில், ராமிற்கு வருத்தம்.
இந்தப் பேச்சு நடந்து சில வாரங்களில், ஒரு நாள் காலை ராமின் அறைக்கு அந்த வணங்காமுடி வந்தான்.
"என்ன, இன்னிக்கி இவ்வளவு சீக்கிரம் வேலைக்கு வந்திருக்க?. ஏதாவது பிரச்சினையா?'' என்று கேட்டான் ராம். இனிமேல் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது ராம்,'' என்று ஆரம்பித்தவன், "நான் வேலையை விடறேன். எனக்கு அமரிக்காவில நியூரோ சயின்ஸ்ல டாக்டர் பட்டம் பண்ணறதுக்கான வாய்ப்பு வந்திருக்கு,'' என்றான்.
ராமிற்கு அவன் சொன்னதைக் கேட்டு சந்தோஷம். ஆனால் கூடவே வருத்தமாகவும் இருந்தது.
"ப்ரொஜெக்ட் இன்னும் ஒரு மாசத்துல முடியப்போகுது. இப்ப போய் விடறியே. இந்த ப்ரொஜெக்ட்ல உன்னோட உழைப்புக்கான சன்மானம் கிடைக்கறதுக்குள்ள விட்டுட்டியே," என்று வருத்தப்பட்டான்.
"நீங்க என் திறமைக்கு மரியாதையும், வேலையில சலுகையும் கொடுத்ததைவிட, வேற என்ன சன்மானம் வேணும் ராம்? நீங்க என்ன புரிஞ்சுக்கிட்டிங்க. அதுவே எனக்கு போதும். ஆனா கவலைப்படாதீங்க. ப்ரொஜெக்ட் லைவ் போற வரைக்கும் எந்தப் பிரச்சினையும் வராது. அதுக்கப்புறமாவது, நீங்க என்ன நினைவுல வெச்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன்,'' என்று சற்றே சிரித்தான்.
சில வாரங்களில், வணங்காமுடி அமெரிக்கா கிளம்பினான். ப்ரொஜெக்ட்டும் வெற்றிகரமாக முடிந்தது. அந்த ப்ரொஜெக்ட் முடிந்த சில நாட்களில், பாஸ்கர் ஒரு நாள் காலையில் அவசரஅவசரமாக ராமின் அறைக்கு வந்தார்.
"ராம், அந்த கிளயன்ட்டுக்கிட்ட இருந்து மெயில் வந்திருக்கு. அந்த ப்ரோக்ராம் வட்டி விகிதமெல்லாம் தப்புத்தப்பா கணக்குப்போடுதாம். இன்னும் மூணு நாளைக்குக்குள்ள இதை சரி பண்ணாட்டி அவங்களுக்கு பெரிய பிரச்சினை ஆகிடும்னு சொல்லி மெயில் அனுப்பியிருக்காங்க. இது எப்படி நடந்தது? சோதனை பண்ணும்போது எல்லாம் ஒழுங்காத்தானே வேலை பண்ணிச்சு. உங்க குழுவில இருக்கறவங்களை உடனடியா இந்தப் பிரச்சினையை சரி பண்ணச் சொல்லு,'' என்று பதற்றமாகச் சொன்னார்.
அடுத்த இரண்டு நாட்களாகியும் ராமும் அவனுடைய குழுவில் இருந்தவர்களும் என்னெவெல்லாமோ செய்து பார்த்தார்கள். அந்தப் பிரச்சினை தீரவில்லை. முன்றாவது நாள் காலை, பாஸ்கர் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டார்.
"ராம், இன்னிக்கி அந்தப் பிரச்சினை தீராட்டி, அவங்க நம்ம மேல பெனால்டி போட்டுடுவாங்க. ஏதாவது பண்ணு ராம். ப்ளீஸ்…'' என்றார். ராமிற்கு மட்டும் வணங்காமுடியின் நினைப்பு வந்தது. 'சே!! அவன் மட்டும் இருந்திருந்தா...' என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும்போது ஒரு ஈமெயில் வந்தது. 'ஹை ராம். எப்படி இருக்கீங்க? யாரும் என்ன நினைச்சு பாத்திருக்கமாட்டாங்கனு தெரியும். ஆனா, உங்களுக்குக் கூடவா என் நினைப்பு வரலை? நான் தான் சொன்னே, ப்ரொஜெக்ட் லைவ் போகிற வரைக்கும் பிரச்சினை வராதுன்னு...." என்று ஆரம்பித்தவன், அந்த மெயிலின் அடியில் ஏதோ நாலு வரிகள் எழுதியிருந்தான். அதைப் படித்த ராமிற்கு தூக்கிவாரிப்போட்டது. அந்த வரிகள், அந்த வட்டி விகித மென்பொருள் ப்ரோக்ராமின் முக்கியமான நான்கு வரிகள்.
ராம் உடனடியாக வணங்காமுடி கொடுத்த நான்கு வரிகளை அவனுடைய குழுவினரிடம் கொடுத்தான். அதை வைத்து அவர்கள் அந்த பிரச்சினையைத் தீர்த்தார்கள்.
"யு ஆர் எ ஜீனியஸ் ராம். கிரேட். இப்படிப்பட்ட குழுவும் ஆட்களும்தான் நம்ம கம்பெனிக்கு வேணும்,'' என்று பாஸ்கர் அவனைக் கட்டித் தழுவினார்.
ராம் தன் அறைக்கு வந்து, வணங்காமுடியின் மெயிலுக்குப் பதில் அளித்தான்.
''அப்போ, நீ தான்….??'' என்று ராம் கேட்டதற்கு, ஒரு சிரிக்கும் எமோஜி படம் மட்டும் அவனிடம் இருந்து பதிலாக வந்தது.
சற்று நேர யோசனைக்குப்பிறகு ராம், வணங்காமுடிக்குப் பதிலளித்தான். 'சூன்யத்தோட மதிப்புக்கூட அது இருக்கற இடத்தைப் பொறுத்தது. உன்னை மாதிரியான வணங்காமுடிகள் இந்த கம்பெனிக்குத் தேவையில்லை. யு ஆர் எ ஜீனியஸ். ஆல் தி பெஸ்ட்'.
முற்றும்